Saturday, November 24, 2012

இரக்கம் கொள்ள வேண்டாமா?

(சிறுவர் பாடல்)


கண்ணா மூச்சி ஆட்டத்தில்
காணும் இருட்டை அறிவாயா?
கண்ணைக் கட்டி விட்டாலே
கையால் தடவித் தேடுவையே.
கண்கள் இரண்டும் தெரியாமல்
கஷ்டப் படுவோர் நிலைதன்னை
எண்ணிப் பார்த்து அவர்மீதே
இரக்கம் கொள்ள வேண்டாமா?

நொண்டி யடித்து ஆடுகையில்
நோகும் காலென அறிவாயே,
முண்டி யடித்து ஓடுதற்கு
முடியா தொருகால் ஊனத்தால்
நொண்டுஞ் சிறுவர் வாழ்நாளில்
நிலைத்த துயரம் அதுவன்றோ?
எண்ணிப் பார்த்து அவர்மீதே
இரக்கம் கொள்ள வேண்டாமா?


பாரதி கலைக்கழகம்.  அழ.வள்ளியப்ப நினைவரங்கம். 29.11.2009

Tuesday, November 20, 2012

நெருப்புடன் ஒரு நேர்முகம்

நெருப்புடன் ஒரு நேர்முகம்
நெருப்பினை யொருநாள் நேர்முகங்காண
விருப்புட னழைத்து விடைதரக் கேட்டேன்.

1. இருமனம் இணையும் திருமண நிகழ்வில்
ஒருமுது பார்ப்பான் உரைமறை நடுவில்
சேமம் செப்பச் செய்சடங் கதனில்
ஓமத் தீயென உருக்கொடு வந்தனை.
கண்ணகி கோவலன் கைத்தலம் பற்றி
உன்னைத் தொழுதே உடன்வலம் வந்தனர்.
எண்ணிலார் காட்சியை இருந்து
கண்டவர் நோன்பினைக் கவிகளே வியப்பதேன்?

அரசவை வாழ்வும் அத்தனை இன்பமும்
துறந்தவர் வியக்கும் திருமணக் காட்சியில்,
கனலெனும் கற்பினள் அந்தண ராக்கும்
மணவினை ஓம மாகிய
அனலினை வணங்கிய தற்புதந் தானே?


2. கோவலன் பிரிந்து குலந்தரு வான்பொருள்
யாவையும் தொலைந்தே இலம்பா டடைந்ததும்,
தீதறு கண்ணகி தன்துணை பிரிய
தாதவிழ் புரிகுழல் மாதவி சேர்ந்ததும்,
அறவோர்க் களித்தலும், அந்தண ரோம்பலும்
பிறவுள மனையறப் பெருங்கட னிழந்ததும்,
மனையறம் போற்றியோர் வாழ்வில்
வினைவிளை யாடிய வேளையி னாலா?

ஆடலாற் சேர்ந்தவர் அணங்கின் யாழிசைப்
பாடலாற் பிறிந்ததும் பழவினைப் பயனே!


3. கனிகை நீங்கிக் கண்ணகி சேர்ந்து
வணிக மியற்றி வாழ நினைத்து
எய்திய மதுரை எழில்மிகு வீதியில்
செய்தொழில் மிக்க சிலம்பினை விற்கப்
பொய்த்தொழிற் கொல்லன் புரிதீ வினையால்
இலக்கண முறைமையில் இருந்தோன்
கொலைப்பட நேர்ந்தது கொடுமை யன்றோ?

ஆம்.


 4. கண்ணகி காவியத்தில் உன்பங் கென்ன?

உன்னவன் நல்லவன் என்றொலித்த செங்கதிரும்
தென்னவன் கோன்முறை தீதென்ற வாதமும்
கண்ணகி மார்பில் கனன்று பெருநகர்
உண்டதும் தீயென் றுணர்.


5. தரிக்க முடியாத துயரென வருமெனில்
எரிக்க முயல்வது இயல்பென வாமோ?

'சொல்லினாற் சுடுவேன்' என்று
..சொன்னவள் கணவன் வெற்றி
வில்லுடை யாற்றற் கிழிவு
..விளைந்திடு மென்று விட்டாள்.
எல்லையுள் நின்று சீரி
..எரிதழல் மண்டச் செய்தாள்
நல்லது செய்தா ளென்று
..நவின்றிட லாமோ? சொல்நீ!


'நெருப்பெனுங் கற்பில் மிக்க
..நெறியினில் நின்ற தெய்வத்
துருவினைப் பிழைத்த நாளில்
..ஒருதுயர் நகருற் றழிய
எரித்திடும் ஏவ லொன்றால்
.. எனக்கிங்கு வேலை யுண்டு
பிரித்துநீ சொல்வாய் உன்னால்
..பிழைப்பவ ரெவருண் டெ'ன்றேன்

'மூத்தவர் குழந்தை யாவினம்
..முப்புரி யந்தணர் பத்தினி
பார்த்து நல்லரை விட்டுநீ
..பாயு மெரியழல் பரப்'பென
தீத்திற மழித்து மாநகர்
..திருத்தி நோயினை யொழித்தனள்.
ஆத்திரத் தினாலிது வாகுமா?
..அறிவி லாருரை கேட்பயோ?

'மீண்டு மொருநாள் சந்திப்போம்
மிகுந்த பலவும் சிந்திப்போம்'
என்று கூறி நேரமாயிற்றென்று நெருப்பு விடைபெற்றது.
நன்றி கூறி நானும் நகர்ந்தேன்.

பாரதி கலைக்கழகம்.  சிலப்பதிகார விழா.
தலைமைக் கவிதை.   - மே. 2010.

Sunday, November 18, 2012

குகன் வில் வாழ்க!



அரசமுடி பொன் நகைகள் ஏது மின்றி
..அரைப்பட்டை தனிற்தொங்கு வாளு மின்றி
தரமுடைய வெண்பட்டில் சரிகை நெய்து
.. தகதகக்கும் உடையதுவும் கூட இன்றி
இரவிலொளிர் மதிமுகத்திற் சோகம் கொண்டே
.. எழிலழிந்து, துயர்தோய்ந்து, தொலைவி லாங்கே
மரவுரியில் வருபரதன் உருவங் கண்டு
..மனமிளகித் தான்வீழ்ந்த குகன்வில் வாழ்க!

மதிமயக்கம் கொள்ளவரு கோபம் தன்னில்
.. மனமறிவை வென்றுடலை இயக்கும் போதில்
எதுசரியென் றறியாமல் நாணைப் பூட்டி
..எயுமம்பு பரதன்மேற் பாயும் ஐயோ!
அதுநிகழ்தல் கூடாது. பாவம். நாமும்
.. அறக்கேட்டில் துணைசெல்ல வேண்டாம். இங்கே
இதுதருணம் எனக்கையின் நீங்கி, எய்ய
..இயலாத படிவீழ்ந்த குகன்வில் வாழ்க!

நழுவியதை மறுபடியும் கையிற் தூக்கி
..நாணேற்றக் கூடுமெனில் பயன்தா னென்ன?
முழுவதுமாய் முறையற்ற தொன்றைச் செய்ய
..முனையுமுனர் அதுதடுக்கும் வழியில், வேண்டித்
தொழுவதெனும் முடிவுடனே கையின் நீங்கித்
..திருவடியில் விழுந்ததென அறியக் கேட்டேன்.
பிழையிலதாய் பரதன் நிலை குகனும் கண்டு
..பின்னர்மனம் மாறியதாய்க் கம்பன் சொல்வான்.


வற்கலையி னுடையானை மாசடைந்த மெய்யானை
நற்கலையின் மதியன்ன நகையிழந்த முகத்தானைக்
கற்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்
விற்கையினின் றிடைவீழ விம்மிற்று நின்றொழிந்தான்.
                                                                      கம்பன். - குகப்படலம்.

Sunday, August 05, 2012

விடியல் வருமோ விரைந்து.

மண்ணைப் பிளந்து முளைத்து மரமாதல்
சின்ன விதையின் செயலன்றோ? - எண்ணி
முடியா தெனவே முயலா திருந்தால்
விடியல் வருமோ விரைந்து?


ஈற்றடிக்கு எழுதியது.  வெண்பா விருந்து. பரிசு பெற்றது.
நம் உரத்த சிந்தனை. - ஆக. 2011.

ஊழல் விலகுமே விட்டு

புற்று வளர்ந்து புரையோடிப் போனபினும்
கற்றோர் அமைதிக்குக் காரணமென்? - உற்றதொரு
சூழல் உளபோதே சோராது போரிட்டால்
ஊழல் விலகுமே விட்டு.

ஈற்றடிக்கு எழுதியது.  வெண்பா விருந்து.
நம் உரத்த சிந்தனை. - ஆக. 2011.

கோடையிலே நல்ல குளிர்

முத்துவிளை தற்கும் முருங்கைமரம் காய்ப்பதற்கும்
ஒத்ததொரு காலமென உண்டன்றோ? - இத்தரையில்
ஓடையெலாம் வற்றி உலரும்போ தெங்குவரும்
கோடையிலே நல்ல குளிர்.


ஈற்றடிக்கு எழுதியது.  வெண்பா விருந்து.
நம் உரத்த சிந்தனை ஜூன் 2011.

மழலையின் சொல்லே மருந்து

அலைந்த களைப்பும் அலுவல் விளைத்த
தலைநோவும் தானே தணிந்து - இலையாம்
அழகு விழியசைய ஆசையுடன் கொஞ்சும்
மழலையின் சொல்லே மருந்து.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். நவ. 2010

பாரதி நெய்துவைத்த பா



தேசபக்தி ஊடாகத் தென்தமிழே பாவாக
ஆசுகவி யாந்தறியி லாக்கியது. - தேசுபொலி
பாரதத் தாய்பூணும் பைந்துகிலே ஆமாறு
பாரதி நெய்துவைத்த பா.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - செப். 2010

கண்ணீரால் வென்ற களம்



வெட்டுண்டா னில்லை. விழிவேலைக் கண்டன்றோ
கட்டுண்டு வீழ்ந்தான் கணவனவன். - பட்டுண்டு
பொன்னின் அணியுண்டு பூவைக்கு ஈதவள்தன்
கண்ணீரால் வென்ற களம்.

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - ஆக. 2010

விழுதினால் தோன்றும் வியப்பு


பரந்த கடலும் பனிமலையும் கண்டு
விரிந்த விழிவியப்பை விஞ்சும். - பெரிது
பழுதிலாவிஞ் ஞானம் பயந்த கணினி
விழுதினால் தோன்றும் வியப்பு.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - ஜூலை 2010.

உழைப்பினால் கண்போம் உயர்வு


உண்டு முறங்கியும் வாழ்நாட் பொழுதழியின்
உண்டாகு மாமோ உயர்விங்கு? - நன்றாய்ப்
பிழைப்பொன்று மில்லாப் பெரும்பணிக ளாற்றும்
உழைப்பினால் கண்போம் உயர்வு.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - ஜூன். 2010

இனிமையுடன் உண்போம் இனி


கூடியொரு நோன்பிருந்தோம் கோவிந் தனையாண்டாள்
பாடிய நன்னெறியே பற்றினோம். - தேடி
அணியணிவோம் நெய்யொழுக ஆக்கிய பாற்சோ(று)
இனிமையுடன் உண்போம் இனி.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - ஏப். 2010

காலத்தே செய்தல் கடன்


வயதான பின்கல்வி வாய்த்தென்ன? செல்வம்
இயலாத போதீட்ட லேது? - சுயமாக
ஞாலத்து வாழ்வில் நலமுறவே நாமவற்றைக்
காலத்தே செய்தல் கடன்.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - மார்ச் 2010

சொர்க்கம் குடும்பமெனச் செப்பு


கண்டவர் விண்டுரையா, காணாதார் கற்பனையாய்
உண்டென் றுரைக்குமது உண்டாமோ? - கண்ணெதிரே
தர்க்கமிலா தேற்கும் தகவுடைய மண்ணுலகச்
சொர்க்கம் குடும்பமெனச் செப்பு.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - நவ. 2009

சோலை மலராய்ச் சிரி


என்னை நகைவேண்டின்  எங்கேநான் போவதுசொல்
உன்னிதழின் புன்னகைபோல் வேறுண்டோ? - பெண்ணேபொன்
மாலை விருப்பை மனத்தகற்றி எந்நாளும்
சோலை மலராய்ச் சிரி.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - அக்.2009

கதராடை காமராசக் கோன்



தன்னலம் பாராது தாழ்நிலையில் வாழ்மக்கள்
இன்னல் களைந்த தெவரிங்கு? - அண்ணல்
அதிகாரத் தாலன்றி அன்பினால் வென்ற
கதராடை காமராசக் கோன்.

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனிதநேயம். - ஆகஸ்ட் 2009

Tuesday, July 31, 2012

உழைக்கும் கரங்கள்


வீடு நடத்திடப் பொருள்தேடி - நாட்டை
    விண்ணுக் குயர்த்திடத் தம்கரத்தால்
பாடு படுபவர் கைகுலுக்கி - அவர்
    பாதம் பணிந்திடல் வேண்டுவதே!

ஆலை களில்பணி செய்திடுவோர் - பொருள்
    ஆயிரம் உண்டென வாக்குகிறார்
மேலைத் திசையுள்ள நாடுகளோ டிந்த
    மேதினி சந்தையை யாளுகிறார்.

சாலைகள் பாலங்கள் ஆலயங்கள் - எங்கும்
    சற்று மயராது கட்டுதலை
வேலை யென்றசிறு சொற்குறிக்கும் - அவர்
    மேனி வியர்வையில் நாடுயரும்.

ஓடு சாக்கடைநீர் தூரெடுத்தும் - பிறர்
    உண்டு கழித்தமலம் தாம் சுமந்தும்
ஆடி முடிந்துயிர் நீத்தவர் காட்டினில்
    அக்கினிக் கேகிடத் தோள்சுமந்தும்

வீடு நடத்திடப் பொருள்தேடி - நாட்டை
    விண்ணுக் குயர்த்திடத் தம்கரத்தால்
பாடு படுபவர் கைகுலுக்கி - அவர்
    பாதம் பணிந்திடல் வேண்டுவதே!

வாசல்: உழைப்பாளர் தினம்.   கவியரங்கம் மே 2009

Monday, July 30, 2012

வாழப் பழகுவோம் வா


இன்னிசையும் சித்திரமும் இன்னும் பிறகலையும்
எண்ணிற் பழகியதால் என்ன பயன்? - மண்ணிதனில்
ஆழவே கற்றிருந்தும் அன்பு நெறிமறந்தோம்
வாழப் பழகுவோம் வா.

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனிதநேயம். வெண்பூக்கள். ஏப்- 2009

வரிகளால் வேண்டும் வளம்


வரிப்பணத்தை வாரி வழங்கியிங்கு ஓட்டுப்
பறிக்கு மரசியல் பாழாம் - உரைப்பின்
விரிந்தநற் சாலையும் உட்கட் டமைப்பும்
வரிகளால் வேண்டும் வளம்.

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனிதநேயம்-  வெண்பூக்கள். மார்ச் 2009.

சொல்லில் விளையும் சுகம்

பொருத்து மொலிபெருக்கி போதிய காற்றோட்டம்
வருத்தா இருக்கையும் வாய்ப்பின் - இருப்போர்க்கு
வெல்வகையிற் கேளாரும்வேட்ப மொழிபவரின்
சொல்லில் விளையும் சுகம்.

தமிழரின் மனிதநேயம்- வெண்பூக்கள்.
ஈற்றடிக்கு எழுதிய வெண்பா. டிச- 2008

Monday, July 02, 2012

சிறகை விரித்துச் சிகரம் தொடு.

மண்ணைப் பிளக்க விதைமலைத்தால் - ஒரு
      மரமாய்ப் பிறந்து வளராது.
மண்ணே அதற்குச் சிதையாகும் - அங்கு
      மரணம் ஒன்றே முடிவாகும்.

சன்னற் கம்பிக ளிடைவெளியில் - விரி
      செந்நிற வானம் தெரிகிறதே!
மின்னல் ஒருகணம் வாழ்ந்தாலும் - அதன்
      மேனி ஒளிக்கினை வேறிலையே.

தடைபல வந்துனைத் தடுத்தாலும் - உளம்
      தளரா துன்வழி சென்றிடுநீ!
தடைகளுக் கிடையில் விடையுண்டு. - இந்தத்
      தரணி யாளவும் வழியுண்டு.

மண்ணிற் சிறந்து தடம்பதித்த - உன்
     முன்னோர் பலரின் வரிசையிலே
பின்னே உனக்கொரு இடமுண்டு. - உன்
     பெயரும் சேர்ந்திட வழியுண்டு.

சிறகு விரித்து உயர எழுந்தால்   
     சிகரம் நெருங்கி விடும்.
சிந்தையி லாயிரம் துயரென வந்தவை
     சிதைந்து நொருங்கி விடும்.

Friday, June 29, 2012

நினைவு நல்லது வேண்டும்

'ஓயா தென்று மிதுதர்மம்
      எனநான் கருதும் வழிசெல்லல்,
தாயாய் விளங்கு மருட்சக்தி
      தாளில் உறைதல் இவைதவிர
நீயாய் ஒன்றும் நாடாதே
      நினது தலைவன் யான்'என்றே
பேயா யுழலும் சிறுமனதின்
      பெற்றி யடக்கிய பெருஞாநி.

அன்னையை வேண்டும் வரமொன்றில்
     எண்ணிய முடியக் கேட்கையிலே
எண்ணம் தவறாய் ஆகுமெனில்
     எத்தனை குற்றம் நேர்ந்துவிடும்?
பண்ணுவ தெல்லாம் பாவமெனப்
     பதறிக் கொஞ்சந் தயங்கியவன்
எண்ணம் நல்லது வேண்டுமென்றே
     இரண்டா மடியில் கேட்கின்றான்.

நினைவிற் கெடுதி இல்லையெனில்
     நெஞ்சுக் குறுதி அதுசேர்க்கும்.
மனிதப் பிறவி வீணின்றி
     மண்ணிது பயனுற வேண்டுமெனில்,
நினைவு நல்லது வேண்டுமென்றோர்
     நெறியில் வாழ்ந்து காட்டியவன்.
மனதிற் கருமை சேராமல்
     மாசில தாதல் உயரறமாம்.

Friday, June 08, 2012

வேறொரு கதை சொல்

(சிறுவர் பாடல்)

பாட்டீ! எனக்கொரு கதைசொல் நீ
படுத்த படியே கேட்கின்றேன்!

ஓட்டப் பந்தய முயல் தூங்க - அதை
....ஓடி முந்திய ஆமை கதை
கேட்டுச் சலித்துப் போயிற்று.
....கேட்க வேறொரு கதைசொல்நீ!

பாட்டீ! எனக்கொரு கதைசொல் நீ
படுத்த படியே கேட்கின்றேன்!

காட்டில் கிணற்று நீர்பிம்பந் - தனைக்
....கண்டு குதித்த சிங்கமது
மாட்டிக் கொண்டு வஞ்சத்தால்
....மாண்ட கதையைச் சொல்லாதே!

பாட்டீ! எனக்கொரு கதைசொல் நீ
படுத்த படியே கேட்கின்றேன்!

காக்கை பாட்டுப் பாடவிழும் - வடை
....கவ்விய நரியின் கதைவேண்டாம்.
ஆக் ஷன் ஹீரோ ரஜினிபடம்
....அன்று பார்த்தது கதைசொல்நீ!

பாட்டீ! எனக்கொரு கதைசொல் நீ
படுத்த படியே கேட்கின்றேன்!

அழ. வள்ளியப்ப நினைவரங்கம். பாரதி கலைக்கழகம்.

Tuesday, June 05, 2012

இராஜ ராஜ சோழன்


ஒத்தவராய் மிக்கவராய் இன்று நாள்வரை - இங்கு
ஒருவரையும் காணாமல் உலகு போற்றவே
பத்து நூறு ஆண்டுகளின் முன்பு தோன்றினன். - இன்றும்
பாரதத்தின் வரலாற்றில் நின்று வாழ்கிறான்.

வேங்கைநாடு, கங்கபாடி, ஈழமண்டலம் - மற்றும்
விளங்குபுகழ்க் கலிங்கமோடு ரெட்ட பாடியும்
தாங்கிநின்ற மன்னர்களின் மகுடம் தேய்த்தவன். - சோழன்
தரணியெலாம் தன்புகழைப் பாட வைத்தவன்.

விண்ணுயரம் கல்லுயர்த்தி விந்தை காட்டினான் - வாழ்வில்
வீழ்ந்தவர்க்கு வேலையீந்து சோறு மூட்டினான்.
கண்கவரும் எழிலுருவில் கோவில் கட்டினான் - மண்ணில்
கயிலையாளும் ஈசனுக்குக் கவரி வீசினான்.

கலையுயரப் பிறந்தசிவ பாத சேகரன் - சிற்பக்
கலைஞனுக்காய் இலைச்சுருளின் ஓலை தாங்கினான்.
தலைவனெனும் நிலைமறந்தே ஒருவன் வாயுமிழ் - எச்சில்
தம்பலத்தை வாங்குதற்குத் தாழி ஏந்தினான்.

திருமுறையை முயன்றுகண்டு மீட்டெ டுத்தவன் - இறைவன்
திருமுன்பு பாடுமுறை நாட்டி வைத்தவன்.
பெருஉடையார் பக்தனெனப் போற்ற நின்றவன் - அதனைப்
பெருமையுடன் நான் பாடும் பாட்டில் நின்றவன்.

வரமா? சாபமா?


கட்புல னாகாக் கானின் மறைவிடம்
உட்புகு புலியை ஓசையின் வழியே,
வெறுந்திசை அம்பை விடுத்து வீழ்த்திடும்
திறனுடை வீரன் தயரதன். ஒருநாள்
அந்தக முதியவர் அடைதுயர் பொறாது,
தந்தையின் தாகம் தணித்திட முனைந்து,
மலைவழிச் சுனைநீர் மானின மருந்த,
சிலநொடி தயங்கிச் சேந்தினன் மைந்தன்.
குடவாய் நுழைந்த குடிநீ ரோசை
இடர்வரக் கூவி இரைந்தழைத் ததுவோ?
களிரின் பிளிறலாய்க் கருதிய வேந்தன்
ஒலியின் திசையில் ஒருசர மெய்தனன்.
வேதியன் மகனும் விழ்ந்துடன் இறந்தனன்.
ஆதியின் கணக்கை அறிந்தவர் உளரோ?
"மகனைப் பிரிந்துநான் மனத்துய ரடைந்ததின்
நிகரொரு துயரம் நினக்கும் வருமென",
'துணிவொடு மரசனைத் தூற்றி விடுத்த
முனிவரின் சாபம் முற்றவும் நிகழுமேல்,
வேண்டும் மகவென விரத மிருந்ததும்
ஆண்டு பலவாய் ஆயிரம் நோற்றதும்
பிறவும் வீணிலை. மகவென ஒன்று
பிறந்தபின் தானே பிரிவது நிகழும்?'
பாபம் செய்ததிற் பதறிய மனது
சாபமே வரமெனிற் சரியென் றேற்றது.
பின்னரந் நிகழ்வினைப் பேசிடுங் கம்பன்,
கண்ணிலா வேதியன், கைப்பொரு ளென்னவே
பெற்ற மைந்தனை யிழந்தங்(கு)
உற்ற துயரினை உவமையாக் கினனே!


"கண்ணிலான் பெற்றிழந்தான் என உழந்தான்
கடுந்துயரால் காலவேலான்."  - கம்பன்


பாரதி கலைக்கழகக் கம்பன் விழா (17.7.2011)

Monday, June 04, 2012

வேண்டும்

வாரத்தில் ஒருநாள் மட்டும்
...வருகின்ற ஓய்வு கொண்டு
நேரத்தில் வேலை செய்து
...நினைத்ததை முடிக்க வேண்டும்.


சின்னதாய் வீசிய காற்றில்
...சிறகது ஒடிந்ததைப் போல்
முன்னமே உடைந்து தொங்கும்
...மூடிட முடியா தான
சன்னலின் கதவுக் கீல்கள்
...சரிவரப் பொருத்த வேண்டும்.
மின்னலும் மழையும் வந்தால்
...மூடிட முடிய வேண்டும்.                             (வாரத்தில்....)


புத்தகம் படித்த வற்றைப்
...புதுவிடம் மற்றி வைத்து
எத்தனை இடர்கள்? தேடி
...எடுப்பதில் நேரம் வீணே.
அத்தனை நூலும் சேர்த்து
...அழகுற எண்க ளிட்டு'
மொத்தமாய் அடுக்கி வைத்தல்
...முக்கியம். நேரம் வேண்டும்.                        (வாரத்தில்....)


கொடுத்தகை மாற்றை வாங்கக்
...குன்றத்தூர் போக வேண்டும்.
உடுத்ததில் உதிர்ந்த பொத்தான்
...உடைகளில் தைக்க வேண்டும்.
படித்ததாள் இதழ்கள் விற்றுப்
...பணமென வாக்க வேண்டும்.
விடுமறை ஞாயி றன்றே
...விரைந்திவை செய்ய வேண்டும். 


வாரத்தில் ஒருநாள் மட்டும்
...வருகின்ற ஓய்வு கொண்டு
நேரத்தில் வேலை செய்து
...நினைத்ததை முடிக்க வேண்டும்.         
பாரதிபேர்க் கழகத் துக்கும்
...பாட்டொன்று எழுத வேண்டும்.
யாரிவர் என்றே கேட்டு
...யாவரும் புகழ வேண்டும்.

பாரதி கலைக்கழகம் 59ம் ஆண்டுவிழா (26.12.2010)

Sunday, June 03, 2012

கம்பன் கவியே கவி


மன்ன னுயிர்த்தே மலரு முலகென்ற
முன்னவரின் சொல்மாற்றி மன்னனுடல் - மண்ணுயிரின்
கும்பல் உரையுமொரு கூடெனவே கூறழகுக்
கம்பன் கவியே கவி.

வல்லரக்கி நெஞ்சின் வலியுருவி நல்லபொருள்
புல்லருக்குச் சொன்னதெனப் போய்ப்பின்னும் - வல்லவனின்
அம்பு மலைமரமண் என்றுருவிற் றென்றானே!
கம்பன் கவியே கவி.

ஆகுமோ? நல்லுயிர யோத்திநிற்கத் தானுடல்
ஏகிவே றோரிட மெய்ததாய்க் - கேகயம்
தம்பி பரதன் தனிச்செல வைச்சொன்ன
கம்பன் கவியே கவி.

மையோ மரகதமோ மாமுகிலோ வென்றதன்பின்
ஐயோ வெனுமெதுகை ஆழ்பொருளாய் - மெய்யாயவ்
அம்புயை கோனின் அழியா வழகுறைத்த
கம்பன் கவியே கவி.

சவியுறு தண்ணொழுக்கச் சான்றோர் தமிழின்
கவியெனக்கோ தாவரியைக் கூறும் - கவியழகின்
சம்பி ரதத்தோடு சாற்றுவதற் கீடேது?
கம்பன் கவியே கவி.

மாதெனவே கொண்ட மயக்குமுரு சூர்ப்பணகை
பாதநடை கற்பனையாய்ப் பாடியதோ? - ஏதமிலாச்
செம்பொற் சிலம்பொலியின் சந்தம் செவிகேட்கும்
கம்பன் கவியே கவி.

சித்திரத்துத் தாமரையும் சீராமன் நன்முகமும்
ஒத்ததெனச் சொன்ன உயர்பொருள்போல் - இத்தரையில்
எம்புலவர் மற்றோ ரெவரும் நவின்றதிலை
கம்பன் கவியே கவி.

சொன்ன உடல்வற்றிச் சோர்ந்திருக்கச் சீதையவள்
கண்கொண் டடையாளம் கண்டதனைக் - 'கண்டே'னென்
றெம்பெரு மானின்முன் ஏந்தல் மொழிந்தனனாம்.
கம்பன் கவியே கவி.

கார்முகிலிற் கூடக் கமலம் மலர்ந்ததெனல்
பேரறமும் கார்நிறமே போலுமெனல் - பேரறிஞர்
தம்புலமை காட்டுந் திறமன்றோ? செந்தமிழிற்
கம்பன் கவியே கவி.

நாளைவா போர்க்கென்று நல்கியதால் வள்ளலோ?நின்
தாளைநான் இன்றடைந்தேன் தஞ்சமெனில்- நாளையே
அம்பலிலாக் கோசலமே ஆகு மவர்கன்றோ?
கம்பன் கவியே கவி.

Saturday, June 02, 2012

நன்றியில் செல்வம்

தன்னையண்டி வந்த வர்க்குத் தானமொன்றும் செய்தி டாதும்
தன்னதான செல்வ மென்று த(ன்)நுகர்வு மின்றி நாளும்
எண்ணியெண்ணிச் சேர்த்து வைத்தே என்னபயனு மின்றி யிந்த
மண்ணில் வாழ்ந்து மாய்கிற மனிதர் செல்வ ரல்லவே!

குறள்:
 கொடுப்பதூவும் துய்ப்பதூவு மில்லார்க் கடுக்கிய
 கோடியுண் டாயினும் இல்.

இன்மையாலே வாடு வோர்க்கிங் கில்லையென்று வைத்த செல்வம்
மண்ணுளோரில் ஒப்பி லாது மன்னுநற் குணங்க ளுள்ள
பெண்ணொருத்தி நாத னின்றிப் பேணலற்று மூப்ப தாகி
மின்னையன்று ஒத்த தான மேனிவீணாய் ஆவ தொக்கும்.

குறள்:
அற்றார்க் கொன்றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

ஓடியாடி வழ்வி லென்றும் ஓய்தலின்றிச் சேர்த்த செல்வம்
கோடிகோடி யான போதும் கொஞ்சமேனும் ஈத லாற்ற
நாடிடாத பேரு டம்பு நல்குகின்ற தேது மின்றி
வாடுமாறு பூமி தாங்க வாழ்தலிங்கு வாழ்த லாமோ?

குறள்:
ஈட்டமிவறி யிசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.


இன்மையாலே வாடு வோர்க்கோ ரீதலில்லை யாத லாலும்
இன்பவாழ்வுந் தேடி யோர்க்கிங் கில்லையென்று மாவ தாலும்
எண்ணிலாத துயரு ழந்தே ஈட்டிவைத்த தான செல்வம்
நன்றியற்ற செல்வ மென்று நவின்ற துண்மை யுண்மையே!


பாரதி கலைக்கழகம்- திருக்குறள் விழா. June 2009.


Thursday, May 17, 2012

எதைச் சொல்வேன்?

என்மகனின் மகன்செய்கை ஒன்றி ரண்டா?
எத்தனையோ உண்டெதனைச் சொல்வ திங்கு?
மென்பஞ்சுப் பாதங்கள் தரைந டந்தால்
மிகநோகும் என்றெண்ணித் தூக்கிக் கொள்வேன்.
என்கையிற் சுமந்துகொண் டிருக்கும் போது,
ஏதேனும் பிறர்பேசக் கேட்டாற் போதும்,
தன் மழலை கேட்பதற்கென் முகந்தி ருப்பும்.
தளிர்விரல்கள் பட்டவுடன் மெய்சி லிர்க்கும்.


என்மகனின் மகன்செய்கை ஒன்றி ரண்டா?
எத்தனையோ உண்டெதனைச் சொல்வ திங்கு?


உண்ணுதற்கே அடம்பிடித்து ஓடி யோடி,
ஊட்டுகின்ற அம்மாவை அழவே வைப்பான்.
தின்னுமொரு மிட்டாயின் இனிப்புக் காகத்
திண்ணைக்குத் தேடிவரும் சிறுகு ழந்தை,
'இன்னொன்று தா'என்று முன்னே வந்து
இதழ்விரித்த தாமரையாய்க் கையை நீட்டும்.
கண்ணெதிரே கெஞ்சுகிற காட்சி கண்டால்
கல்நெஞ்சங் கூடவங்கு கரைந்தே போகும்!


என்மகனின் மகன்செய்கை ஒன்றி ரண்டா?
எத்தனையோ உண்டெதனைச் சொல்வ திங்கு?

Wednesday, May 16, 2012

நெருப்பிலா உறக்கம் ?

உள்ளத்தில் மதவெறித்தீ மிகவ ளர்த்தே
ஒருபாவமும் அறியாதார் உயிர்ப றித்தல்;
பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பு தற்குப்
பதிலாகப் பணிமனைக்கு அனுப்பல்; மற்றும்
வெள்ளரிக்காய் சந்தையிலே விற்றல் போலே
விலைபேசும் மணவாழ்வும் நன்றா? சொல்வீர்!
நல்லவழி சமுதாயம் செல்ல இந்த
நானிலத்தோர் உணர்வுற்றே எழுதல் வேண்டும்.

களத்தடிக்கும் நெல்மணியிற் பதர்க ளுண்டு.
காற்றினிலே தூற்றியதை விலக்கி வைப்போம்.
மிளகினிலே மிளகேபோல் மண்ணு ருண்டை
மிகச்சரியாய்க் கலந்தவற்றைப் பிரித்தல் ஆமோ?
களங்கமிகு மனதுடையோர் மருந்திற் கூடக்
கலப்படத்தைச் செய்கின்றார் அறிந்தோ மில்லை.
உளமனிதப் போலிகளின் செயலால், வாழும்
உயிரழியும் கேடுணரா துறங்க லாமோ?

நெஞ்சத்தை இரும்பென்னல் தவறே ஆகும்.
நெடுந்தீயால் அதுநீராய் இளகிப் போகும்.
நெஞ்சத்தைக் கல்லெனலும் பிழையாய் ஆகும்.
நொருங்கியது தூளாகும் உடைக்கும் போது.
பிஞ்சான பெண்குழந்தை சிவந்த வாயைப்
பிதுக்கியதன் நாவினிலே நஞ்சை வைக்கும்
நெஞ்சத்துக் குவமையென எதைநான் சொல்ல?
நெருப்பினிலே உறங்குகிறோம் எழுவ தெந்நாள்?

ஆண்டுப் பிறப்பு

ஆடிக் கழித்த ஆண்டொன்றை - மனம்
அகலத் திறந்து பார்க்கின்றேன்.
தேடிப் பொருளைச் சேர்ப்பதற்குத்
தினமும் உழைத்த கதையுண்டு.
நாடிச் செய்த செயல்களிலே - சில
நல்லவை நிகழக் கண்டதுடன்
வாடித் துயரில் சிலசமயம்
வாழ்வை வெறுத்த நிலையுண்டு.


மண்ணில் ஒருவர் நிலைக்காக - இங்கு
மாறா தோடும் காலகதி
விண்ணிற் கதிரோன் தேரோட்டம்
விதித்த வழியில் விரைந்தேக,
பன்னிரு திங்கள் கழிந்துவிடில் - பாரில்
புதிதாய் ஆண்டு பிறந்துவிடும்.
எண்ணம் மட்டும் ஏதேதோ
எதிர்பார்ப் போடு வரவேற்கும்.


ஆண்டு பிறக்கும் போதெல்லாம் -அதை
அழகுத் தமிழில் வரவேற்று
ஈண்டு கவிஞர் பலர்கூடி
எழுதிக் குவிப்பது ஏராளம்.
மாண்டு போகும் வழித்தடத்தில் - ஒரு
மைல்கல் தன்னைக் கடந்துள்ளோம்.
ஆண்டுப் பிறப்பில் வேறொன்றும்
அதிசய மில்லை என்பேன் நான்.

Friday, May 04, 2012

ஏழையா? பணக்காரனா?


தன்னையண்டி வந்த வர்க்குத்
தானமொன்றும் செய்தி டாதும்
தன்னதான செல்வ மென்றே
தான் நுகர்த லில்லை யாயும்
எண்ணியெண்ணிச் சேர்த்து வைத்தும்
ஏதுமற்ற ஏழை யாக
மண்ணிலிங்கு வாழ்ந்து சாகும்
மாணிடர்க்கு என்ன பேரோ?

(குறள் வழிச் சிந்தனை)