Sunday, August 16, 2015

நீலச் சிற்றாடைக்கு நேர்.

(கட்டளைக் கலித்துறை)


பின்னர் வரவிடை பெற்றுட னவ்வை பிரிபவளை
இன்னுஞ் சிலநாள் இருத்திடப் பாரியங் கெண்ணியதால்
பொன்னும் மணியும் பரிசெனத் தந்தவை பாதையிலே
தன்னாள் சிலர்வழி, தான்பறி செய்தது தக்கதொன்றே!

கோலிதைக் கொள்ளெனக் கொடுத்தே அவ்வை களமளக்கும்
வேலையைச் செய்வதை வேண்டிய காரிபின் வேறோருதன்
வேலையிற் சென்று விடைதா மதித்ததில் வென்றதவள்
மேலுள வன்பின் மிகையால் அரியது மேன்மையதே!

தோரணை மிக்க தொருவருக் கோரிடந் தேடியன்று
சேரன் விருந்தினிற் சேர்ந்துண வுட்கொளச் சென்றமர்ந்தார்
ஆருளர் வேறே அழைக்கவென் றவ்வையை வாருமென்ற
ஓருளம் போலுள தேதுள? அன்பில் உயர்ந்ததுவே?

ஏல மணமுள இன்னடி சில்விருந் துண்டபினர்
கோலவம் மங்கைய ரங்கவை சங்கவை கொண்டளித்த
நீலநல் லாடை நிகருள மூன்றை நெகிழ்வுடனே
ஞால மறிந்திட நாலடி அவ்வை நவின்றனளே!


பாரி பறித்த பறியும் பழையனூர்க்
காரி யன்றீந்த களைக்கோலும் - சேரமான்
வாராயோ வென்றழைத்த வார்த்தையும் இம்மூன்றும்
நீலச் சிற்றாடைக்கு நேர்.     - ஔவையார் 

(தமிழ் நாவலர் சரிதை.)


பாரதி கலைக்கழகம். ஔவையார்  விழா. ஏப். 2015.