Monday, July 30, 2018

அவனுடைய அருளாலே…




கல்நெஞ்சத் தொருதனியன்
     கள்ளத்தைக் கைக்கொண்டோன்
நல்லதனை இதுவரையில்
      நாடாத மதியனெனை
வல்வினைகள் போயொழிய
      வாய்ப்பொன்றை நாடுவையேல்
எல்லையிலாப் பரம்பொருளை
      எண்ணத்தில் இருத்தென்றார்.

பொல்லாத புலனைந்தால்
       பொருந்தாத மனமலத்தால்
எல்லா அழுக்குக்கும்
       இடமாகித் தோல்போர்த்து
அல்லலுறும் பிறவியிதை
       அறுத்தெறிவாய் நீயென்று
சொல்லாலே வேண்டியவன்
       சுடரடிகள் தொழுகின்றேன்.

கரும்பாகித் தேனாகிக்
      கறந்தபுதுப் பாலாகி
விரும்புகிற பிறவாகி
      ஊறுகின்ற பேரின்பத்
திருவாகி என்றுமுளம்
       தெவிட்டாத படியான
உருவாகிச் சிந்தையிலே
       உறைந்துளையோ? தேடுகிறேன்.

அவனியிலே பிறந்துழல்வோர்
        அல்லலெலாம் நீக்குகின்ற
சிவனவனோ தேர்ந்தவரின்
        சிந்தையிலே வந்துநின்றான்.
புவனத்தே திருவாத
        புரியாரின் வழிகொண்டே
அவனுடைய அருளாலே
        அவன்தாளை வணங்குவனே!

சிவநேயப் பேரவை. வாழ்க வளமுடன் அரங்கம். நங்கநல்லூர். 10.2.2018.