Saturday, October 02, 2021

இன்னமும் முயலுகின்றேன்

 


ஒளியாம லுண்மையை உரைப்பதே நலமென்ற

          உறுதியைக் கொண்டு நின்றாய்

        உன்வாழ்வை நூல்செய்து உலகதை உணரவே

           உண்மையாய் எடுத்து வைத்தாய்!

ஒளிவொன் றிலாதபடி வாழ்வதை உண்மையாய்

          உன்னிடம் கற்ற பின்னர்

        உன்னளவு இலையெனினும் ஓரளவு முயல்கிறேன்

              உண்மையாய் வாழு கின்றேன்.

எளியரின் நிலைகண்  டிரங்கியே உடைதந்து

             இடையாடை யோடு நின்றாய்!

        இனியாரு மதுசெய்ய இயலாத தாகவென்

            இதயத்தி லுயர்ந்து நின்றாய்!

எளிமையைக் கொள்கையாய் ஏற்றிங்கு வாழ்பவர்கள்

          எத்தனை பேர்க ளுண்டு?

       என்னாலும் உன்போல இயலுமோ அதுவென்று

          இன்னமும் முயலு கின்றேன்.