Showing posts with label இசைப் பாடல்கள். Show all posts
Showing posts with label இசைப் பாடல்கள். Show all posts

Tuesday, April 14, 2020

திருப்புல்லாணி பத்மாசனித் தாயார்



 திருப்புல்லாணி பத்மாசனித் தாயார்.

ராகம்: சஹானா                   தாளம்: ஆதி

இயற்றிவர் : அ. இராஜகோபாலன்
பாடியவர் : அரவிந்த் ரெங்கராஜன்





பல்லவி 

எனக்கிவை நீ அருள்வாய்! தாயே! தயாநிதியே! ...(எனக்கிவை)

அநு பல்லவி

தனக்கிணை இல்லாத புல்லையின் நாயகன்
தனித் துணை நீயே! தாமரை யாரணங்கே!


சரணம் 1

வேதப் பொருளுணரும் ஞானமில்லை. நிற்க
வேண்டிய நெறிமுறையைக் கற்றதில் நின்றதில்லை.
ஏது மிலாதார்க்கும் இரங்கிடுவாய். இந்த
ஏழையின் வேண்டலையும் ஏற்றிடுவாய் அம்மா. (எனக்கிவை..

சரணம் 2

உள்ளவரை மனதில் உறைந்திடுவாய்.- என்றும்
ஓதியுன் தாள்பணியும் உள்ளமும் நீ தருவாய்!
கள்ள மனக் கசடைக் களைந்திடுவாய் -இனி
கருப் புகாதபடி காத்திடுவாய் அம்மா! ...(எனக்கிவை)





பொருள்:

பல்லவி:

கருணைக் கடலாக இருக்கிற தாயே! (நான் வேண்டுகிற) இவைகளை எனக்குத் தந்தருள வேண்டும்.

அனுபல்லவி:

தனக்கு ஒத்தவராக வேறொருவர் இல்லாத,(ஒப்பற்ற,) திருப்புல்லாணியின் நயகனான எம்பெருமான் ஆதிஜெகந்நாதனின் இனிய துணைவி நீ! தாமரை மலரின் மீது வீற்றிருப்பவளே!... 

சரணம்1

எனக்கு வேதங்களில் கூறப்பட்டிருக்கிற விஷயங்களைப் பற்றிய ஞானமில்லை. வாழும் நெறிமுறைகளைச் சொல்லும் சாஸ்திரங்களைக் கற்று, அதன்படி நடக்கவில்லை. எதுவுமே இன்றி மிகத்தாழ்ந்த நிலையில் உள்ளவர்களிடத்திலும் மனம் இரங்கி அருளக்கூடியவளான தாயே! என்னுடைய வேண்டுதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அம்மா!

சரணம் 2

என் வாழ்நாள் முடியும் வரை என் மனதில் நீ அகலாது வீற்றிருக்க வேண்டும். என்றும் உன் புகழ் பாடி, உன் திருவடிகளில் பணிகிற மனப் பக்குவத்தைத் தரவேண்டும். மறைந்து, நிலைத்திருக்ககூடிய கசடுகளைக் களைந்து, என் மனதைத் தூய்மையானதாக ஆக்க வேண்டும். இனி, இன்னொரு பிறவி இல்லாதபடி (மீண்டும் பிறப்பதற்காகக் கருவினிற் சேராதபடி) காத்திடவேண்டும் தாயே!.


அ. இராஜகோபாலன்.