Monday, April 20, 2015

மண்ணுக்கு வந்த மதி


அலைகடலின் கரைக்காற்றை அனுப வித்தே
... அருகமர்ந்த கோவலனைப் பாட வேண்ட
தலைமகளின் முகவழகுக் குவமை யாகத்
... தண்மதியைத் திருத்தியதோர் வடிவங் காட்டி,
கலைநங்கை மாதவியின் கையாழ் வாங்கிக்
... கவிபாடி இசைமழையைப் பொழியச் செய்தான்.
நிலைவரியாய் அமைந்ததது. நெஞ்சை யள்ளும்.
... நிகரெதுவும் இலையென்பேன் நீரும் ஏற்பீர்!

விழியிரண்டும் கயலென்றே யாகித் துள்ள
... விளங்குமிரு புருவங்கள் வில்லாய் மின்ன
பொழிமழைநீர் சூல்கொண்ட மேகம் போலப்
... பொலிவுமிகு கருமையினிற் குழலைத் தீட்டி
விழிகவரக் காமனவன் செயல்க ளெல்லாம்
... விடுதலிலை யெனமுழுதும் எழுதித் தீர்த்த
எழிலொழுகு திங்க(ள்)முகம் காணீர்! என்றே
... இளங்கோதன் தலைமகனைப் பாடச் செய்தார்.

திங்களெனில் வானத்தில் தானே தோன்றும்?
... திரிவதுவும் வானத்தில் தானே யன்றோ?
இங்குளதோர் திமில்வாழ்நர் சிற்றூர் தேடி
... எதுபணியாய் வந்ததென்று கேட்ப மென்றே
அங்குதிரி பகையரவு ராகு கேது,
... அதைவிழுங்க வருமென்றே எண்ணி நீங்கி
தங்கியிங்கு பயமின்றி வாழ வேடம்
... தரித்தபடி வந்ததென்று விடையும் சொன்னார்.


கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன்
செயலெழுதித் தீர்த்தமுகம் திங்களோ காணீர்!
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அங்கணேர் வானத்து அரவஞ்சி வாழ்வதுவே.


சிலப்பதிகாரம், புகார்க்காண்டம், - கானல் வரி.


பாரதி கலைக்கழகம். சிலப்பதிகார விழா.  21.9.2014

 

Wednesday, April 15, 2015

பெரிதினும் பெரிது கேள்


கற்றலில் நன்றாய்க் கேட்டலை நம்தமிழ்ச்
சொற்றொட ரொன்று சுவைபடக் கூறும்.
நூலறி மேலோர் நுண்மை விரித்துப்
பாலரு மறியப் பகர்வது கேட்டலை,
புவியுள அறிஞர் புலவோ ரெல்லாம்
செவிதரு 'கேள்விச் செல்வ'மென் றோதுவர்.
உயர்ந்ததைப் பெரிதென் றுணர்ந்தவ ரிங்கு
'உயர்ந்தவர் மேற்றே உல'கென் றுரைத்தார்.
உலகம் பெரிதெனப் பொதுவில் தொடங்கி
கவன மீர்த்துக் காண்டகு பெருமையில்
ஒன்றினி லொன்றாய் உயர்ந்தது காட்டி,
நன்றிது வென்று நாமதை யறிய
பண்டுநம் மவ்வை சொன்ன
தொண்டர்தம் பெருமை கேட்பது பெரிதே!