Monday, May 11, 2009

நாமேதும் செய்ததுண்டா?

செந்தமிழின் சிறப்பைப் பற்றிச்
சிந்தனைப் பட்டி மன்றம்.
சந்தமிகு கம்பன் பாட்டைச்
சான்றாகக் காட்டிச் சென்றார்.
சிந்தையை அள்ளு கின்ற
சிலம்பினைப் பற்றிச் சொன்னார்.
எந்தமிழின் குறளைப் போல
எம்மொழியில் நூலுண் டென்றார்?

வந்தவர்கள் சாலை யோரம்
வாய்பிளந்து கேட்டு நின்றார்.
எந்தப்பிற மொழியும் என்றும்
இனைதமிழ்க் காகா தென்ற
அந்தவுரை முடிந்த போது
ஆறாண்டு நிறைந்தி டாத
எந்தமயன் மகன் கேட்டான்
இவரென்ன செய்தா ரென்று.

அன்றவர்தம் திறமை கொண்டு
அரியபல நூல்கள் யாத்து
நின்றுலகில் தமிழை என்றும்
நிலைத்திருக்கச் செய்தா ரன்றோ?
தின்றுவெறும் பொழுது போக்கித்
தெருவோரம் மேடை போட்டு
நின்றுபழம் பெருமை பேசும்
நாமேதும் செய்த துண்டா?


மதுரைத் தென்றல் வீதியுலா 19 நவம்பர் 2001.

Sunday, May 03, 2009

மனிதரை மதிப்பிட...

நல்லவை எண்ணியே செய்கின்ற மனிதனை
நானிலம் போற்றி நிற்கும்
அல்லவை செய்பவர் யாரெனு மாயினும்
அகிலமே வெறுத்தொ துக்கும்


வஞ்சகம் குடிகொண்ட நெஞ்சுடைய செல்வரை
வாழ்விலே கண்ட துண்டு.
வற்றாத நதிபோல வாயூறு பொய்யினில்
வளர்கின்ற பேரு முண்டு.
எஞ்சாது கல்விபல கற்றிருந்த போதிலும்
அவர்மனித ராவ தில்லை.
ஏமாற்றி வாழ்கின்ற எத்தர்கள் பூமியில்
என்றுமே உயர்ந்த தில்லை.

வஞ்சக நெஞ்சரை வாயூறு பொய்யரை
வளநிலை காட்ட வில்லை.
வாய்த்ததொரு கல்வியும் மனிதரை யளந்திடும்
வல்லமை பெற்ற தில்லை.
கொஞ்சமும் குறையின்றிக் கொண்டாடு வகைபெற்ற
குணநலன் என்ப தொன்றே
கண்முனே காண்கின்ற மனிதரை மதிப்பிடும்
கருவியாம் கண்டு கொள்வீர்!

நல்லவை எண்ணியே செய்கின்ற மனிதனை
நானிலம் போற்றி நிற்கும்
அல்லவை செய்பவர் யாரெனு மாயினும்
அகிலமே வெறுத்தொ துக்கும்


மதுரைத் தென்றல். வீதியுலா நான்கு. 2000.

போலிகள்


வாசமலர்ச் செடிகளிலே தேனைத் தேடும்
வண்டுசெயும் ரீங்காரம், மரங்கள் மீது
ஓசையெழப் பறவையினம் பேசும் பேச்சும்,
ஓடைசெயும் சலசலப்பும் தென்ற லாக
வீசுகின்ற மென்காற்றில் மிதந்து காதில்
விழும்படியாய் இயற்கையவள் அருகே வந்து
பேசுகின்ற ரகசியங்கள் நகர வாழ்வின்
பேரிழப்பு இவையெதுவும் கிட்டா திங்கு!

அரைச்சுவரில் பசுமையுடன் புற்ப ரப்பு,
அழகான தென்னைமரம், ஆட்டுக் குட்டி,
விரைந்தோடும் நீரோடை, மேசை மீது
விரிப்பினிலே பூச்செடிகள், ஜன்னல் மூடும்
திரைத்துணியில் வான் நிலவு பறவைக் கூட்டம்
திகட்டாத இயற்கைதரும் காட்சி யின்பம்
வரைந்தவெறும் போலிகளில் மட்டும் கண்டு
வாழுகின்ற வாழ்க்கையிது நரகந் தானே!

கலைச்சுரங்கம் ஜனவரி 1997

Saturday, May 02, 2009

கடல் அலையே!


காலை இரவெனப் பாராது - இங்கு
கரைவரை வந்துபின் செல்லுகிறாய்
நீலநி றப்பெருங் கடலலையே!
நீயதன் காரணம் கூறுவையோ?

ஆழ்கடல் எல்லையைக் காத்திடலோ? - அன்றி
அடுத்த நிலந்தனில் முற்றுகையோ?
பாழ்நில மாந்தரைப் போல் முழங்கிப் - போர்ப்
பகைவெறி வுண்டெனக் காட்டுதியோ?

பாலர்கள் காலடி மண்நழுவ - அவர்
பாதம் நனைத்துநீ செல்லுகையில்
கோலமு கங்களில் நகைமலரும் - அந்தக்
கொள்ளை அழகினைக் காண்பதற்கோ?

ஆழ்கடற் செல்வங்கள் அத்தனையும் - வாரி
அள்ளிச் சென்றபெரும் பாதகரை
சூழ்கரை எங்கணும் தேடுதியோ? - நீ
சொல்லிடு வாயிங்கு சற்றுநின்றே!


மதுரைத் தென்றல் வீதியுலா:எட்டு. ஜூன் 2000