Tuesday, April 30, 2019

மாயக் காரன்


மாயக் காரன் அவனொருவன் - இங்கு
மந்திர வடிவில் இருக்கின்றான்.
பாயும் மனதை ஈர்க்கின்றான்.
பற்பல வித்தைகள் புரிகின்றான்.

ஒற்றைச் சின்ன விதைக்குள்ளே - ஒரு
உருவிற் பெரிய ஆலமரம்
நிற்கை காட்டி மயக்குகிறான்.
நெஞ்சில் நின்றே இயக்குகிறான்.

முட்டைக் குள்ளே காணாது - குஞ்சை
மூடி வைத்துக் காட்டியவன்
முட்டை பறவைக் குள்வைத்து
மேலும் விந்தை புரிகின்றான்.

முட்டை பறவை இவற்றுள்ளே - இங்கு
முதலில் வந்தது எதுவென்றால்
கெட்டிக் காரன் செயலலவா
கேள்விக் கொன்றும் விடையில்லை.

எண்ணில் நேரம் மாறாமல் – உள
எதுவும் வழியில் விலகாமல்
விண்ணில் எத்தனை பந்துகளை
வீசிச் சுழலச் செய்துள்ளான்?

எண்ணப் பிடிக்குள்: வருகின்றான் – என
எண்ணும் போதே மறைகின்றான்
கண்ணைக் கட்டிய ஆட்டமிது
கைதொட வந்து நிற்பானோ?




சிவநேயப் பேரவை: வாழ்க வளமுடன் சிற்றரங்கம் நங்கைநல்லூர். தலைமைக் கவிதை. 8.12.2018.

Tuesday, April 16, 2019

உள்ளத்தில் தித்திக்கும் தேன்




கனியின் சுவையும் கரும்புதரு சாறும்
இனிதாகும் என்றே இருந்தேன். – இனிதில்லை
வள்ளுவத்தில் ஆழ்ந்து வளங்கண்டால் அத்தனையும்
உள்ளத்தில் தித்திக்கும் தேன்.


ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithaz 10.9.2018