Sunday, March 10, 2019

தென்றலே நீவந்து செப்பு






உள்ள மலரையெலாம் ஒவ்வொன்றாய் நீசென்று
மெள்ள முகர்ந்தபின் மீளுகிறாய் –  கள்ளமற
உன்றன் கணிப்பில் உயர்ந்தமணம் கொண்டதனைத்
தென்றலே நீவந்து செப்பு.

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithaz. Sep. 2018

நாளும் முயன்றிடுவோம்



உன்றன் மொழியோர் உயர்மொழி என்றிடில்
ஒன்றும் பிழையில்லை. – அதன்
உயர்வை யுணர்ந்தே உவகை கொள்வதில்
ஒன்றும் தவறில்லை.

என்றன் மொழிதான் உலகிலு யர்ந்ததென்(று)
உரைப்பது சரியில்லை - இங்கே
ஏசிப் பிறமொழி பேசிடு நண்பரை
எள்ளுதல் முறையில்லை.

ஒன்றாய்த் தாய்மொழி உலகிலு ளோர்க்கொரு
உரிமையில் உளதாகும். – அந்த
ஒவ்வொரு மொழியிலும் உயர்படைப் பென்பவை
ஒருநூ றுளவாகும்.

நன்றாய்ப் பிறமொழி நூல்பல மாற்றி
நம்மொழி சேர்த்திடுவோம். – இன்னும்
நம்நூல் பலவும் பிறமொழி மாற்ற
நாளும் முயன்றிடுவோம்.

சர்வதேசத் தாய்மொழி தினம். பிப். 21. Tamilauthors.com.minnithaz.