Monday, July 02, 2012

சிறகை விரித்துச் சிகரம் தொடு.

மண்ணைப் பிளக்க விதைமலைத்தால் - ஒரு
      மரமாய்ப் பிறந்து வளராது.
மண்ணே அதற்குச் சிதையாகும் - அங்கு
      மரணம் ஒன்றே முடிவாகும்.

சன்னற் கம்பிக ளிடைவெளியில் - விரி
      செந்நிற வானம் தெரிகிறதே!
மின்னல் ஒருகணம் வாழ்ந்தாலும் - அதன்
      மேனி ஒளிக்கினை வேறிலையே.

தடைபல வந்துனைத் தடுத்தாலும் - உளம்
      தளரா துன்வழி சென்றிடுநீ!
தடைகளுக் கிடையில் விடையுண்டு. - இந்தத்
      தரணி யாளவும் வழியுண்டு.

மண்ணிற் சிறந்து தடம்பதித்த - உன்
     முன்னோர் பலரின் வரிசையிலே
பின்னே உனக்கொரு இடமுண்டு. - உன்
     பெயரும் சேர்ந்திட வழியுண்டு.

சிறகு விரித்து உயர எழுந்தால்   
     சிகரம் நெருங்கி விடும்.
சிந்தையி லாயிரம் துயரென வந்தவை
     சிதைந்து நொருங்கி விடும்.

No comments: