Tuesday, June 05, 2012

இராஜ ராஜ சோழன்


ஒத்தவராய் மிக்கவராய் இன்று நாள்வரை - இங்கு
ஒருவரையும் காணாமல் உலகு போற்றவே
பத்து நூறு ஆண்டுகளின் முன்பு தோன்றினன். - இன்றும்
பாரதத்தின் வரலாற்றில் நின்று வாழ்கிறான்.

வேங்கைநாடு, கங்கபாடி, ஈழமண்டலம் - மற்றும்
விளங்குபுகழ்க் கலிங்கமோடு ரெட்ட பாடியும்
தாங்கிநின்ற மன்னர்களின் மகுடம் தேய்த்தவன். - சோழன்
தரணியெலாம் தன்புகழைப் பாட வைத்தவன்.

விண்ணுயரம் கல்லுயர்த்தி விந்தை காட்டினான் - வாழ்வில்
வீழ்ந்தவர்க்கு வேலையீந்து சோறு மூட்டினான்.
கண்கவரும் எழிலுருவில் கோவில் கட்டினான் - மண்ணில்
கயிலையாளும் ஈசனுக்குக் கவரி வீசினான்.

கலையுயரப் பிறந்தசிவ பாத சேகரன் - சிற்பக்
கலைஞனுக்காய் இலைச்சுருளின் ஓலை தாங்கினான்.
தலைவனெனும் நிலைமறந்தே ஒருவன் வாயுமிழ் - எச்சில்
தம்பலத்தை வாங்குதற்குத் தாழி ஏந்தினான்.

திருமுறையை முயன்றுகண்டு மீட்டெ டுத்தவன் - இறைவன்
திருமுன்பு பாடுமுறை நாட்டி வைத்தவன்.
பெருஉடையார் பக்தனெனப் போற்ற நின்றவன் - அதனைப்
பெருமையுடன் நான் பாடும் பாட்டில் நின்றவன்.

No comments: