Friday, March 27, 2020

கொரோனா ஊரடங்கு



பரவியபின் துன்பப் படுவானேன்? தொற்று
பரவாமல் நீதடுக்கப் பார்.

வீட்டுக்குள் நீஇருந்தால் வைரஸ்தொற் றாததுவுன்
நாட்டுக்குச் செய்யும் நலம்.

தொற்றுமவ் வைரஸ் தொலைந்தொழிய வேண்டில்நீ
முற்றும் முடங்கி இரு.

Monday, March 09, 2020

என்ன சொல்ல வந்திருப்பாள்?



என்ன சொல்ல வந்திருப்பாள்
என்றே எண்ணிப் பார்க்கின்றேன்.
எண்ணம் முழுதும் அதுநின்றும் – இனும்
ஏதும் அறியும் நிலையில்லை.
          (என்ன சொல்ல வந்திருப்பாள்?…..

என்னை அங்கே கண்டதுமே
எழுந்தி ருந்து வந்தேதன்
சின்னக் கையால் என்கையை – ஒரு
சேரப் பற்றி நின்றனளே!
              (என்ன சொல்ல வந்திருப்பாள்?….

அன்னை கண்டு வந்துடனே
அடித்த ழைத்துப் போய்விட்டாள்.
சின்னக் குழந்தை கண்கலங்கி – தன்
சிறுவாய் குழறிப் பின்போனாள்.
               (என்ன சொல்ல வந்திருப்பாள்?…..

அன்னை மறுத்த திண்பண்டம்
ஆசை அடக்க இயலாமல்
என்னக் கேட்டுப் பெறஎண்ணி – என்
எதிரே ஓடி வந்தனளோ?
                (என்ன சொல்ல வந்திருப்பாள்?…..

குரங்கு கையால் தானாகக்
கொட்டு முழக்கும் சிறுபொம்மை
உறங்க ஓசை தடையென்றே – தந்தை
ஒளித்து வைத்த துயர் சொலவா?
                 (என்ன சொல்ல வந்திருப்பாள்?…..

அண்ணன் போலே தனக்குமொரு
ஆடை புதிதாய்க் கேட்டதனால்
’என்ன போட்டி இது’என்றே –அவள்
அண்ணன் அதட்டிப் போனதையா?
                   (என்ன சொல்ல வந்திருப்பாள்?….