Sunday, June 03, 2012

கம்பன் கவியே கவி


மன்ன னுயிர்த்தே மலரு முலகென்ற
முன்னவரின் சொல்மாற்றி மன்னனுடல் - மண்ணுயிரின்
கும்பல் உரையுமொரு கூடெனவே கூறழகுக்
கம்பன் கவியே கவி.

வல்லரக்கி நெஞ்சின் வலியுருவி நல்லபொருள்
புல்லருக்குச் சொன்னதெனப் போய்ப்பின்னும் - வல்லவனின்
அம்பு மலைமரமண் என்றுருவிற் றென்றானே!
கம்பன் கவியே கவி.

ஆகுமோ? நல்லுயிர யோத்திநிற்கத் தானுடல்
ஏகிவே றோரிட மெய்ததாய்க் - கேகயம்
தம்பி பரதன் தனிச்செல வைச்சொன்ன
கம்பன் கவியே கவி.

மையோ மரகதமோ மாமுகிலோ வென்றதன்பின்
ஐயோ வெனுமெதுகை ஆழ்பொருளாய் - மெய்யாயவ்
அம்புயை கோனின் அழியா வழகுறைத்த
கம்பன் கவியே கவி.

சவியுறு தண்ணொழுக்கச் சான்றோர் தமிழின்
கவியெனக்கோ தாவரியைக் கூறும் - கவியழகின்
சம்பி ரதத்தோடு சாற்றுவதற் கீடேது?
கம்பன் கவியே கவி.

மாதெனவே கொண்ட மயக்குமுரு சூர்ப்பணகை
பாதநடை கற்பனையாய்ப் பாடியதோ? - ஏதமிலாச்
செம்பொற் சிலம்பொலியின் சந்தம் செவிகேட்கும்
கம்பன் கவியே கவி.

சித்திரத்துத் தாமரையும் சீராமன் நன்முகமும்
ஒத்ததெனச் சொன்ன உயர்பொருள்போல் - இத்தரையில்
எம்புலவர் மற்றோ ரெவரும் நவின்றதிலை
கம்பன் கவியே கவி.

சொன்ன உடல்வற்றிச் சோர்ந்திருக்கச் சீதையவள்
கண்கொண் டடையாளம் கண்டதனைக் - 'கண்டே'னென்
றெம்பெரு மானின்முன் ஏந்தல் மொழிந்தனனாம்.
கம்பன் கவியே கவி.

கார்முகிலிற் கூடக் கமலம் மலர்ந்ததெனல்
பேரறமும் கார்நிறமே போலுமெனல் - பேரறிஞர்
தம்புலமை காட்டுந் திறமன்றோ? செந்தமிழிற்
கம்பன் கவியே கவி.

நாளைவா போர்க்கென்று நல்கியதால் வள்ளலோ?நின்
தாளைநான் இன்றடைந்தேன் தஞ்சமெனில்- நாளையே
அம்பலிலாக் கோசலமே ஆகு மவர்கன்றோ?
கம்பன் கவியே கவி.

No comments: