Monday, July 29, 2013

பரத நம்பி



'முன்னவ னிருக்கப் பின்னோன் மணிமுடி தரித்த லாகா
தென்னுமோர் முறையுண் டெனினும் எனதுளம் வருந்தா தவனே
நின்னினும் நல்லன்' என்றும்' நிறைகுணம் கொண்டோ' னென்றும்
அன்னைகோ சலைதன் வாயால் அன்னலுக் குரைக்கக் கண்டோம்.

தாயுரை கொண்டு தாதை தனக்கென ஈந்த வாழ்வை
தீயது என்று விட்ட திறமதைக் கண்டு வேடன்
ஆயிர மிராமர் நின்கே ழாவரோ? என்று கேட்ட
வாயுரை கொண்டுங் கம்பன் வரதனைப் போற்றக் கண்டோம்.

மன்னனாய் ராமன் மீண்டு மணிமுடி சூடக்காண
எண்ணிய பரதன் நெஞ்சத் தெளிமையை அன்பைக் கண்டு
'மன்புகழ் பெருமை நுங்கள் மரபுளோர் பெருமை யெல்லாம்
உன்புக ழாயிற்' றென்றே உரைத்தது முண்மை தானே?

தந்தையின் வாக்கைக் காக்கத் தாங்கரு கானம் புக்கோன்
முந்தையன் சேவைக் கென்றே முயன்றுபின் சென்ற தம்பி
சிந்தையில் ராமன் நிற்கச் சேவடி சிரமேற் கொண்டு
வந்தனை செய்தவ் விருவர் வழியினைப் பரதன் வென்றான்.


'ஒழுக்க நெறிநிலை உலகினர்க் குணர்த்த
தந்தையர் தமக்கு மைந்தர்செய் பணிமுதல்
பொதுவற மெல்லாம் புரிந்தன னிராமன்.
அப்பணி தானும் அடைவு கெடாமை
ஒப்பறு திருமால் ஒருவனுக் கென்றே
சிறப்பறம் தலைக்கொடு செய்தன னிலக்குவன்.
அவ்வறந் தானும் செவ்வற மாதல்,
செங்கண்மால் உவந்த சேவடித் தொழும்பே
அல்லது தனகொன் றில்லையென் றாய்த்து
பரதந் திரநெறி பற்றினன் பரதன்'. ...... ...- திரு.நா. அப்பனையங்கார்


பாரதி கலைக் கழகம் - கம்பர் விழா. 9.8.2009