Wednesday, May 16, 2012

நெருப்பிலா உறக்கம் ?

உள்ளத்தில் மதவெறித்தீ மிகவ ளர்த்தே
ஒருபாவமும் அறியாதார் உயிர்ப றித்தல்;
பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பு தற்குப்
பதிலாகப் பணிமனைக்கு அனுப்பல்; மற்றும்
வெள்ளரிக்காய் சந்தையிலே விற்றல் போலே
விலைபேசும் மணவாழ்வும் நன்றா? சொல்வீர்!
நல்லவழி சமுதாயம் செல்ல இந்த
நானிலத்தோர் உணர்வுற்றே எழுதல் வேண்டும்.

களத்தடிக்கும் நெல்மணியிற் பதர்க ளுண்டு.
காற்றினிலே தூற்றியதை விலக்கி வைப்போம்.
மிளகினிலே மிளகேபோல் மண்ணு ருண்டை
மிகச்சரியாய்க் கலந்தவற்றைப் பிரித்தல் ஆமோ?
களங்கமிகு மனதுடையோர் மருந்திற் கூடக்
கலப்படத்தைச் செய்கின்றார் அறிந்தோ மில்லை.
உளமனிதப் போலிகளின் செயலால், வாழும்
உயிரழியும் கேடுணரா துறங்க லாமோ?

நெஞ்சத்தை இரும்பென்னல் தவறே ஆகும்.
நெடுந்தீயால் அதுநீராய் இளகிப் போகும்.
நெஞ்சத்தைக் கல்லெனலும் பிழையாய் ஆகும்.
நொருங்கியது தூளாகும் உடைக்கும் போது.
பிஞ்சான பெண்குழந்தை சிவந்த வாயைப்
பிதுக்கியதன் நாவினிலே நஞ்சை வைக்கும்
நெஞ்சத்துக் குவமையென எதைநான் சொல்ல?
நெருப்பினிலே உறங்குகிறோம் எழுவ தெந்நாள்?

No comments: