Friday, June 29, 2012

நினைவு நல்லது வேண்டும்

'ஓயா தென்று மிதுதர்மம்
      எனநான் கருதும் வழிசெல்லல்,
தாயாய் விளங்கு மருட்சக்தி
      தாளில் உறைதல் இவைதவிர
நீயாய் ஒன்றும் நாடாதே
      நினது தலைவன் யான்'என்றே
பேயா யுழலும் சிறுமனதின்
      பெற்றி யடக்கிய பெருஞாநி.

அன்னையை வேண்டும் வரமொன்றில்
     எண்ணிய முடியக் கேட்கையிலே
எண்ணம் தவறாய் ஆகுமெனில்
     எத்தனை குற்றம் நேர்ந்துவிடும்?
பண்ணுவ தெல்லாம் பாவமெனப்
     பதறிக் கொஞ்சந் தயங்கியவன்
எண்ணம் நல்லது வேண்டுமென்றே
     இரண்டா மடியில் கேட்கின்றான்.

நினைவிற் கெடுதி இல்லையெனில்
     நெஞ்சுக் குறுதி அதுசேர்க்கும்.
மனிதப் பிறவி வீணின்றி
     மண்ணிது பயனுற வேண்டுமெனில்,
நினைவு நல்லது வேண்டுமென்றோர்
     நெறியில் வாழ்ந்து காட்டியவன்.
மனதிற் கருமை சேராமல்
     மாசில தாதல் உயரறமாம்.

No comments: