Friday, February 27, 2015

பாரதி ஓரு ஜீவ நதி




பாரதி என்பதோர் ஜீவநதி - அது
பாடல்க ளோடும் பேராறு.
நீரத னோட்டம் நிற்காது - இங்கு
நிலைபெற் றிருக்கும் நெடுங்காலம்.

 
உள்ளத் துள்ளது கவிதை - அதையோர்
ஊற்றென் றுரைத்தார் கவிமணியார்.
தெள்ளிய கோதா வரியாறைக் - கம்பன்
தெரிந்தே சான்றோர் கவியென்றான்.
 

சொற்றே ரோட்டும் சாரதியாய் - என்றும்
சோரா துழைத்துக் கவிசெய்ய
வற்றா ஊற்றாய்க் கவியுள்ளம் - மிக
வாய்த்தவ ரிங்கே ஏராளம்.
 

பாரதி வழியிற் கவிஞர்களாய் - இன்னும்
பலநூ றாயிரம் வருவார்கள்.
பாரதி மரபிங்கு அழியாது. - என்றும்
பாடல்க ளாறு வற்றாது.
 

பாரதி சிந்தனை. கார்த்திகை மூலம். மத்திய கைலாஷ். 27.11.2011.

கண்டேன்


கண்களாற் காண்ப தன்றிக் காதினால் மூக்கா லெல்லாம்
கண்டுளா ரெவரு முண்டோ? கம்பனேன் அநுமன் வாயால்
கண்டனன் கண்க ளாலே கற்பினுக் கணியை யென்று
விண்டனன் என்பதற்கு விடையென ஒன்று கேட்டேன்.

சீதையைத் தேடி லங்கை செல்வதின் முன்னர் நன்கு
மாதவள் தோற்றந் தன்னை மனதினிற் கொள்ள வேண்டி
காதினாற் கேட்ட தன்றிக் கண்களால் கண்ட தில்லை.
ஆதலால் இடரொன் றங்கே  அநுமனே நேரக் கண்டான்.
(மண்டோதரியைச் சீதையென்று நினைத்து மயங்கியது.)

வலியதன் துணையை விட்டு வனத்திடைப் பிரிய நேர்ந்து
மெலிந்துவெந் துயரில் வாடி மேனியிற் செழுமை மாறி
நலிந்துள நிலையி லந்த நங்கையின் தோற்றம் வேறாய்,
பொலிந்திரு கண்கள் மட்டும் பொருந்திடத் திருவைக் கண்டான்.
(அவள் கண்களைக் கொண்டே அவளைக் கண்டது.)

'கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்
தென்டிரை யலைகடல் இலங்கைத் தென்னகர்
அன்டர் நாயக! இனிதுறத்தி, ஐயமும்
பண்டுள துயரு' மென்றநுமன் பன்னுவான். - கம்பன்

பாரதி கலைக்கழகம். கம்பர் விழா. 13.7.2014

Sunday, February 08, 2015

சீரைத் தேடின் நூலைத் தேடு.


புதியதொரு வலிமையுடன் மீண்டு வந்து
    பொலிவசந்தப் ரியனாரின் வாசல் மேடை.
மதிவானில் தவழவரும் மாலை. கவிதை
    மாக்கோலம் போடவரும் புலவோர் கோட்டம்.
கதிரொளிபோற் றமிழ்மொழியில் படைப்பின் ஆற்றல்
    கைவந்த பெருமகனார் புகழின் மிக்கார்
எதிரொலியார் தலைமையிலே அரங்கில் நிற்கும்
    எளியவனின் வணக்கங்கள் ஏற்பீர் ஐயா!

இலக்கென்ற வொன்றிங்கு இருந்தா லன்றி
   இதுவழிதான் எனக்கொள்ள ஏது மில்லை.
இலக்கியங்கள் என்றுபல இலக்கு சுட்டும்
   இனியதமிழ் நூல்முன்னோர் செய்த வெல்லாம்
உலகத்து மக்கள்வாழ் விருளைப் போக்கும்.
   ஒளிர்கின்ற தீபமென வழியைக் காட்டும்.
சிலபேர்கள் சுயலாப நோக்கம் கொண்டு
   செல்கின்ற குறுக்குவழி இருளில் ஆழ்த்தும்.

இறையுணர்வே நோக்கமெனில் மறைநூ லுண்டு.
    இவ்வுலக வாழ்க்கைக்குச் செல்வம் வேண்டின்
முறையான வழிகாட்டும் பொருள்நூ லுண்டு.
    முந்துதமிழ் அறிஞனென வீற்றி ருக்க
நிறைவான நூலறிவே வேண்டும் என்றால்
    நெஞ்சையள்ளும் இலக்கியங்கள் நிறைய உண்டு.
குறையறுநல் வாழ்வேதான் இலக்கென் றாலோ
    குறள்நெறிநேர் வழிகாட்டும் வேறு வேண்டாம்.


'வாசல்' கவியரங்கம். மார்ச் 2009.வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம்.
 மூவரசம்பேட்டை.