Sunday, May 28, 2017

இல்லையென்றதே இனியது


இதுநாள் எனவே ஒருநாள் குறித்தே அதுதவறா
ததுவாய் இருந்து செயலாற் றிடுவோர் தகவுடையோர்
எதுநாள் எனவே புரியா தபடி பினரெனிலோ
அதுபின் வருநா ளெதிலா வதிலும் நடந்திடுமோ?

இன்றென வாகிய நாள்நாளை நேற்றா கிடுதலைநாம்
நன்றாய் மறுநாள் எளிதா யறிந்திடல் கூடுமன்றோ?
இன்றென நாளையும் மாறிய பின்னரும் நாளைவரும்.
என்றென யாரு மறியா தொருதின மிங்குளதோ?

ஆடுகள் வாங்கிட வேண்டிய தோர்தொகை சேர்ந்திடவே
நாடும் பழகிய நட்பினன் காரிக் குதவிடத்தான்
தேடும் பணியினை ஏற்றவ ளாக,  தெரிந்தவரில்
பாடுந் திறனுடை அவ்வை சிலரை அனுகினளே.

வாதவன் 'பின்னர்வா' வென்றபின், வத்தவன் 'நாளை'யென்றான்
யாதவன் 'யாதொன்று மில்லை'யென் றன்றே இயம்பிவிட்டான்.
வாதவன் பின்னரின், மற்றுள வத்தவன் நாளையினும்
யாதவன் இல்லையை அவ்வை இனிதென் றுரைத்தனளே!



வாதவர்கோன் பின்னையென்றான் வத்தவர்கோன் நாளையென்றான்
யாதவர்கோன் யாதொன்றும் இல்லையென்றான் - ஆதலால்
வாதவர்கோன் பின்னையினும் வத்தவர்கோன் நாளையினும்
யாதவர்கோன்   இல்லை இனிது. -              (ஔவை)


பழையனூர் காரிக்கு உதவமுயன்ற தன் அனுபவத்தை, ஔவை, சேரமானிடம் சென்று சொன்னது. (தமிழ் நாவலர் சரிதை)


பாரதி கலைக் கழகம் ஔவையார் விழா. வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம். மூவரசன் பேட்டை.   25.2.2017



Thursday, May 11, 2017

ஒரு விருத்தச் சிலம்பு



வருங்காலன் என்றொருபொற்
  கொல்லன் வந்தே
    உரைபொய்யில் தன்குற்றம்
      மறைத்துப் போக்க,
அருந்துணையை ஆராயா
  தழித்த வேந்தன்
    அவையினிலே சிலம்புடைத்து
      நீதி கேட்ட
பெருந்துயராள் கண்ணகியின்
   வழக்கா லாங்கு
     பிழையுணர்ந்த பாண்டியனோ
       தானும் மாண்டான்.
அருங்கற்பும் ஊழ்வலியும்
   வென்று நிற்க
     அரசியலிற் பிழைக்கறமே
       கூற்றாய்க் கண்டோம்.