Tuesday, August 04, 2009

தமிழா தமிழ் வளர்க்க வா

கன்னடத்தை மற்றும் கவின்தெலுங்கின் சீர்தன்னை
மண்ணில் மலையாள மாண்பதனை- உன்னால்
அமிழ்தத் தமிழ்விஞ்சும் ஆற்றலுற வேண்டும்
தமிழா தமிழ்வளர்க்க வா.

மதுரைத் தென்றல். -வெண்பாப் போட்டி. (ஜனவரி 2001)

இறப்பென்றும் இல்லாத் தமிழ்

செம்பொருள்சேர் வள்ளுவமும் சிந்தா மணிநயமும்
கம்பன் கவியழகும் கண்டவர்கள், வாழ்த்தச்
சிறக்கும் வளம்பெருகிச் சீரோங்கி நிற்கும்
இறப்பென்று மில்லாத் தமிழ்.

மதுரைத் தென்றல். -வெண்பாப் போட்டி. (ஆகஸ்ட் 2000)

Monday, August 03, 2009

தன்னிகர் இல்லாத் தமிழ்

தன்னை வணங்கித் தமிழில்நூல் செய்வோர்க்கு
அன்னை யெனநின்றே யருள்செய்யும்- என்றுமிளங்
கன்னியெனத் தோற்றம் கவிதையினிற் காட்டிடுமென்
தன்னிக ரில்லாத் தமிழ்.


மதுரைத் தென்றல்: வெண்பாப் போட்டி-(டிசம்பர் 1999).

குறள் இலக்கணக் குறள்.

வெண்டளையிற் சீரேழும் வெண்பாவிற் போலீறும்
கொண்டு மலரும் குறள்.

'கவிதை' மாத இதழ். -குறள் வெண்பாப் போட்டி(ஜூன் 1989).