Saturday, June 02, 2012

நன்றியில் செல்வம்

தன்னையண்டி வந்த வர்க்குத் தானமொன்றும் செய்தி டாதும்
தன்னதான செல்வ மென்று த(ன்)நுகர்வு மின்றி நாளும்
எண்ணியெண்ணிச் சேர்த்து வைத்தே என்னபயனு மின்றி யிந்த
மண்ணில் வாழ்ந்து மாய்கிற மனிதர் செல்வ ரல்லவே!

குறள்:
 கொடுப்பதூவும் துய்ப்பதூவு மில்லார்க் கடுக்கிய
 கோடியுண் டாயினும் இல்.

இன்மையாலே வாடு வோர்க்கிங் கில்லையென்று வைத்த செல்வம்
மண்ணுளோரில் ஒப்பி லாது மன்னுநற் குணங்க ளுள்ள
பெண்ணொருத்தி நாத னின்றிப் பேணலற்று மூப்ப தாகி
மின்னையன்று ஒத்த தான மேனிவீணாய் ஆவ தொக்கும்.

குறள்:
அற்றார்க் கொன்றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

ஓடியாடி வழ்வி லென்றும் ஓய்தலின்றிச் சேர்த்த செல்வம்
கோடிகோடி யான போதும் கொஞ்சமேனும் ஈத லாற்ற
நாடிடாத பேரு டம்பு நல்குகின்ற தேது மின்றி
வாடுமாறு பூமி தாங்க வாழ்தலிங்கு வாழ்த லாமோ?

குறள்:
ஈட்டமிவறி யிசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.


இன்மையாலே வாடு வோர்க்கோ ரீதலில்லை யாத லாலும்
இன்பவாழ்வுந் தேடி யோர்க்கிங் கில்லையென்று மாவ தாலும்
எண்ணிலாத துயரு ழந்தே ஈட்டிவைத்த தான செல்வம்
நன்றியற்ற செல்வ மென்று நவின்ற துண்மை யுண்மையே!


பாரதி கலைக்கழகம்- திருக்குறள் விழா. June 2009.


No comments: