Sunday, December 18, 2016

வாழ்வில் இன்பம்


வானில் உலவும் நிலவு - ஒரு
   வரையில் இழியும் அருவி
கானில் உறையும் மிருகம் - நெடுங்
   கடலில் ஓடும் அலைகள்

காணும் மரங்கள் அசைவில் - தென்றல்
   காற்று இசைக்கும் கீதம்
நாணற் கரைகள் இடையே - நீர்
   நடந்து செல்லும் ஓடை

தேனை நாடி மலரைத் - தினம்
   தேர்ந்த ருந்தும் வண்டு
வீணை நாத மாக - நன்கு
   விளங்கு சேயின் மழலை

மானின் விழியின் பார்வை - இன்னும்
   மயிலின் விரித்த தோகை
நாணம் சேரக் கவிழ்ந்த - ஒரு
   நங்கை முகத்தின் செம்மை

செவியில் வந்து தேனாய் - என்றும்
   சேரும் தமிழின் சீர்மை
கவிதை செய்த கம்பன் - அவன்
   கலையில் நிற்கும் அழகு

புவியில் எங்கும் இல்லா - நல்ல
   பொலிவு மிக்க சிற்பம்
கவிதை உணர்வு தூண்டும் - இவை
   கவிஞர் வாழ்வில் இன்பம்.


பாரதி கலைக் கழகம் & திருவள்ளுவர் மன்றம் 28.8 2016.. DAV பள்ளி வளாகம்
ஆதம்பாக்கம். சென்னை.