Saturday, November 24, 2012

இரக்கம் கொள்ள வேண்டாமா?

(சிறுவர் பாடல்)


கண்ணா மூச்சி ஆட்டத்தில்
காணும் இருட்டை அறிவாயா?
கண்ணைக் கட்டி விட்டாலே
கையால் தடவித் தேடுவையே.
கண்கள் இரண்டும் தெரியாமல்
கஷ்டப் படுவோர் நிலைதன்னை
எண்ணிப் பார்த்து அவர்மீதே
இரக்கம் கொள்ள வேண்டாமா?

நொண்டி யடித்து ஆடுகையில்
நோகும் காலென அறிவாயே,
முண்டி யடித்து ஓடுதற்கு
முடியா தொருகால் ஊனத்தால்
நொண்டுஞ் சிறுவர் வாழ்நாளில்
நிலைத்த துயரம் அதுவன்றோ?
எண்ணிப் பார்த்து அவர்மீதே
இரக்கம் கொள்ள வேண்டாமா?


பாரதி கலைக்கழகம்.  அழ.வள்ளியப்ப நினைவரங்கம். 29.11.2009

Tuesday, November 20, 2012

நெருப்புடன் ஒரு நேர்முகம்

நெருப்புடன் ஒரு நேர்முகம்
நெருப்பினை யொருநாள் நேர்முகங்காண
விருப்புட னழைத்து விடைதரக் கேட்டேன்.

1. இருமனம் இணையும் திருமண நிகழ்வில்
ஒருமுது பார்ப்பான் உரைமறை நடுவில்
சேமம் செப்பச் செய்சடங் கதனில்
ஓமத் தீயென உருக்கொடு வந்தனை.
கண்ணகி கோவலன் கைத்தலம் பற்றி
உன்னைத் தொழுதே உடன்வலம் வந்தனர்.
எண்ணிலார் காட்சியை இருந்து
கண்டவர் நோன்பினைக் கவிகளே வியப்பதேன்?

அரசவை வாழ்வும் அத்தனை இன்பமும்
துறந்தவர் வியக்கும் திருமணக் காட்சியில்,
கனலெனும் கற்பினள் அந்தண ராக்கும்
மணவினை ஓம மாகிய
அனலினை வணங்கிய தற்புதந் தானே?


2. கோவலன் பிரிந்து குலந்தரு வான்பொருள்
யாவையும் தொலைந்தே இலம்பா டடைந்ததும்,
தீதறு கண்ணகி தன்துணை பிரிய
தாதவிழ் புரிகுழல் மாதவி சேர்ந்ததும்,
அறவோர்க் களித்தலும், அந்தண ரோம்பலும்
பிறவுள மனையறப் பெருங்கட னிழந்ததும்,
மனையறம் போற்றியோர் வாழ்வில்
வினைவிளை யாடிய வேளையி னாலா?

ஆடலாற் சேர்ந்தவர் அணங்கின் யாழிசைப்
பாடலாற் பிறிந்ததும் பழவினைப் பயனே!


3. கனிகை நீங்கிக் கண்ணகி சேர்ந்து
வணிக மியற்றி வாழ நினைத்து
எய்திய மதுரை எழில்மிகு வீதியில்
செய்தொழில் மிக்க சிலம்பினை விற்கப்
பொய்த்தொழிற் கொல்லன் புரிதீ வினையால்
இலக்கண முறைமையில் இருந்தோன்
கொலைப்பட நேர்ந்தது கொடுமை யன்றோ?

ஆம்.


 4. கண்ணகி காவியத்தில் உன்பங் கென்ன?

உன்னவன் நல்லவன் என்றொலித்த செங்கதிரும்
தென்னவன் கோன்முறை தீதென்ற வாதமும்
கண்ணகி மார்பில் கனன்று பெருநகர்
உண்டதும் தீயென் றுணர்.


5. தரிக்க முடியாத துயரென வருமெனில்
எரிக்க முயல்வது இயல்பென வாமோ?

'சொல்லினாற் சுடுவேன்' என்று
..சொன்னவள் கணவன் வெற்றி
வில்லுடை யாற்றற் கிழிவு
..விளைந்திடு மென்று விட்டாள்.
எல்லையுள் நின்று சீரி
..எரிதழல் மண்டச் செய்தாள்
நல்லது செய்தா ளென்று
..நவின்றிட லாமோ? சொல்நீ!


'நெருப்பெனுங் கற்பில் மிக்க
..நெறியினில் நின்ற தெய்வத்
துருவினைப் பிழைத்த நாளில்
..ஒருதுயர் நகருற் றழிய
எரித்திடும் ஏவ லொன்றால்
.. எனக்கிங்கு வேலை யுண்டு
பிரித்துநீ சொல்வாய் உன்னால்
..பிழைப்பவ ரெவருண் டெ'ன்றேன்

'மூத்தவர் குழந்தை யாவினம்
..முப்புரி யந்தணர் பத்தினி
பார்த்து நல்லரை விட்டுநீ
..பாயு மெரியழல் பரப்'பென
தீத்திற மழித்து மாநகர்
..திருத்தி நோயினை யொழித்தனள்.
ஆத்திரத் தினாலிது வாகுமா?
..அறிவி லாருரை கேட்பயோ?

'மீண்டு மொருநாள் சந்திப்போம்
மிகுந்த பலவும் சிந்திப்போம்'
என்று கூறி நேரமாயிற்றென்று நெருப்பு விடைபெற்றது.
நன்றி கூறி நானும் நகர்ந்தேன்.

பாரதி கலைக்கழகம்.  சிலப்பதிகார விழா.
தலைமைக் கவிதை.   - மே. 2010.

Sunday, November 18, 2012

குகன் வில் வாழ்க!



அரசமுடி பொன் நகைகள் ஏது மின்றி
..அரைப்பட்டை தனிற்தொங்கு வாளு மின்றி
தரமுடைய வெண்பட்டில் சரிகை நெய்து
.. தகதகக்கும் உடையதுவும் கூட இன்றி
இரவிலொளிர் மதிமுகத்திற் சோகம் கொண்டே
.. எழிலழிந்து, துயர்தோய்ந்து, தொலைவி லாங்கே
மரவுரியில் வருபரதன் உருவங் கண்டு
..மனமிளகித் தான்வீழ்ந்த குகன்வில் வாழ்க!

மதிமயக்கம் கொள்ளவரு கோபம் தன்னில்
.. மனமறிவை வென்றுடலை இயக்கும் போதில்
எதுசரியென் றறியாமல் நாணைப் பூட்டி
..எயுமம்பு பரதன்மேற் பாயும் ஐயோ!
அதுநிகழ்தல் கூடாது. பாவம். நாமும்
.. அறக்கேட்டில் துணைசெல்ல வேண்டாம். இங்கே
இதுதருணம் எனக்கையின் நீங்கி, எய்ய
..இயலாத படிவீழ்ந்த குகன்வில் வாழ்க!

நழுவியதை மறுபடியும் கையிற் தூக்கி
..நாணேற்றக் கூடுமெனில் பயன்தா னென்ன?
முழுவதுமாய் முறையற்ற தொன்றைச் செய்ய
..முனையுமுனர் அதுதடுக்கும் வழியில், வேண்டித்
தொழுவதெனும் முடிவுடனே கையின் நீங்கித்
..திருவடியில் விழுந்ததென அறியக் கேட்டேன்.
பிழையிலதாய் பரதன் நிலை குகனும் கண்டு
..பின்னர்மனம் மாறியதாய்க் கம்பன் சொல்வான்.


வற்கலையி னுடையானை மாசடைந்த மெய்யானை
நற்கலையின் மதியன்ன நகையிழந்த முகத்தானைக்
கற்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்
விற்கையினின் றிடைவீழ விம்மிற்று நின்றொழிந்தான்.
                                                                      கம்பன். - குகப்படலம்.