Sunday, February 28, 2016

நட்புச் சிறகுகள்



நட்பெனுஞ் சிறகு கொண்டு
   நாடெல்லாம் பறக்க லாகும்.
எட்டிட இயலா தென்று
   ஏதுமே இல்லை யாகும் !

மும்பையில் டில்லி மற்றும்
   மூலையில் முடுக்கி லெல்லாம்
நம்பியொரு வேலை சொல்லின்
   நடத்தியே முடிப்போ ருண்டு.

கையினிற் செலவு செய்யக்
   காசில்லாப் போது வந்து
பையொடு பணத்தைத் தந்து
   பார்த்துளம் மகிழ்வோ ருண்டு.

துன்பத்தில் உழலும் போது
   தோள்தந்து பாதி தீர்ப்பார்.
இன்பத்தில் பங்கு கொண்டே
   இரட்டிப்பாய் ஆக்கி வைப்பார்.

அச்சமே இல்லை. செய்ய
   அரியது மேது மில்லை.
இச்சக முழுதும்  என்போல்
   எவருளர் நண்ப ரோடு? 

Wednesday, February 17, 2016

பயனென்ன?



சாத்திரமும் சூத்திரமும்
சார்ந்தபல நூலறிவும்
பாத்திறமும் கொண்டு
பயனென்ன? - காத்திருந்து
ஏத்தபடி கேட்போர்க்
கெடுத்தியம்ப லாற்றாதார்
பூத்திருக்கும் நாற்றமிலாப் பூ!

நம் உரத்த சிந்தனை ஆகஸ்ட் 2009. 'பூத்திருக்கும் நாற்றமிலாப் பூ'!என்ற

 ஈற்றடிக்கு எழுதிய வெண்பா (2).