Thursday, December 30, 2021

படித்ததும் கேட்டதும் - 33



வேறு தருந்தகுதி வாயார் அறிவுரைகள்

நூறு தரவருவார் நொந்தகல. – யாரும்

வருமுரைகள் வேண்டார் விரும்பாரோ வாய்ப்பின்

தருபவராய்த் தாமிருந்தால் தான்.


(கருத்து; Vikasa Mantras, VIHE Ramakrishna Math. Hyderabad)

Saturday, December 25, 2021

 

சிறுவர் உலகம்

 

குண்டுக் கோலி சுண்டிய டித்தலும்

     குத்திய பம்பரம் சுற்றிட வைத்தலும்

தண்டுக் கில்லி தட்டிய ளத்தலும்

     தாண்டலு மோடலும் தாவியே குதித்தலும்

நொண்டி யடித்தலும் நூல்பிடித் தாடலும்

     நின்று, சிறுவர் நிலையா யமர்ந்துகைக்

கொண்டசெல் பேசியைக் குணிந்துகண் பார்த்திரு

     கைவிர லழுத்தலே ஆட்டமென் றானதே!

     .

 

உடலதன் நலத்தோ டுளநலம் பேணிட

     உறுதுணை யானதென் றொன்றிலை யானதே!.

தொடுதிரைப் பேசியில் தொலையுருக் காட்சியில்

     தரமிலாத் தொடர்கள் வலைவிளை யாட்டுகள்

விடுபட முடியா தீர்ப்பினி லிவற்றினை

     விரும்புநம் சிறுவரை விலக்குத லெங்ஙனம்?

கெடுதலை யுணராக் கடையரின் செயல்களின்

     கொடுமையா லழியுது குழந்தைக ளுலகமே!

 

அழ. வள்ளியப்பா நினைவுக் கவியரங்கம். பாரதி கலைக்கழகம். 22.11.2020

Saturday, November 27, 2021

பெரியராய்க் கொள்வது கோள்

 


கோரிப் பெறுவிருதால் கொள்வர் புகழென்றால்

யாரும் பெரியரென ஆவாரே. – பாரில்

அரியரிவர் என்றே அறிவுடையோர் ஆய்ந்து

பெரியராய்க் கொள்வது கோள்.


ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com. மின்னிதழ். நவம்பர் 2019

புகழ்தலின் வைதலே நன்று

 

 

வைதல் திருந்த வழிவகுக்கும். பொய்ச்சொற்கள்

பெய்த புகழாற் பயனுண்டோ? – மெய்யில்

நிகழ்போதில் மீண்டு நெறிநிற்றல் வேண்டும்.

புகழ்தலின் வைதலே நன்று.


 ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com மின்னிதழ். செப். 2019


Saturday, October 02, 2021

இன்னமும் முயலுகின்றேன்

 


ஒளியாம லுண்மையை உரைப்பதே நலமென்ற

          உறுதியைக் கொண்டு நின்றாய்

        உன்வாழ்வை நூல்செய்து உலகதை உணரவே

           உண்மையாய் எடுத்து வைத்தாய்!

ஒளிவொன் றிலாதபடி வாழ்வதை உண்மையாய்

          உன்னிடம் கற்ற பின்னர்

        உன்னளவு இலையெனினும் ஓரளவு முயல்கிறேன்

              உண்மையாய் வாழு கின்றேன்.

எளியரின் நிலைகண்  டிரங்கியே உடைதந்து

             இடையாடை யோடு நின்றாய்!

        இனியாரு மதுசெய்ய இயலாத தாகவென்

            இதயத்தி லுயர்ந்து நின்றாய்!

எளிமையைக் கொள்கையாய் ஏற்றிங்கு வாழ்பவர்கள்

          எத்தனை பேர்க ளுண்டு?

       என்னாலும் உன்போல இயலுமோ அதுவென்று

          இன்னமும் முயலு கின்றேன்.

 

 

Monday, September 27, 2021

செய்வர் செயற்பா லவை

 

ஆற்றினி லோடுநீ ரற்றுலர்ந்த போதிலும்

ஊற்றுநீர் ஆறுதவ லுண்டன்றோ? – போற்றுவகை

எய்துபொரு ளற்றபினு மெஞ்சியதில் நற்குணத்தார்

செய்வர் செயற்பா லவை.


ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com மின்னிதழ் ஜுலை 2019

Saturday, September 11, 2021

எண்ணும் பெருமை இவை

 


    அருமை யுடையசெயல் ஆற்றல்பொய் யாமை

    பெருமைத் தருக்கில்லாப் பேச்சு – பொருமையுடன்

    தன்னில் எளியோரைத் தாங்கு மருங்குணம்

    எண்ணும் பெருமை இவை.


    ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com 1.6.2019



Thursday, July 22, 2021

எப்படியும் ஆகத்தானே போகிறது?

எட்டரை யாகப் போகிற தெழுவெனத்
 தட்டி யெழுப்பிய தம்பிசொற் கேட்டு, 
உதறிப் போர்வை உடனே விலக்கிப் 
பதறி யெழுந்து பார்த்தனள் மணியை.
 அக்கா:
 “ ஆறே இன்னும் ஆகவே இலையே, 
தீராப் புளுகன், திருட்டுக் கழுதை” 
 தம்பி: 
”இதற்குப் போய்ஏன் இத்தனை கோபம்?
 இதுநீ கேள்நான் இயம்பிய துண்மை. 
ஆகத் தானே போகிற தென்றேன்? 
ஆகும் நிச்சயம். அறிவாய் நீயே!”

Tuesday, July 20, 2021

எனக்கு அது உண்டு

இருவர் நடப்ப தெளிதிலை யான 
ஒருவர் நடக்க உளவழி தன்னில் 
முதியவ ரொருவர் நடந்திடு போதில் 
புதியவ னொருவ னெதிரினில் வந்து 
பரிவொடு வழிவிடு பன்பில னாக 
அறிவிலி எவர்க்கும் வழிவிடு பழக்கம் 
தனக்கிலை யென்று தருக்கினி லுரைக்க 
எனக்கது உண்டென ஒருபுறம் விலகி 
முன்செல விட்டு மிண்டும் 
தன்வழி தொடர்ந்து தான் நடந்தாரே!

Sunday, June 20, 2021

திருஉறை மார்ப!

 


பொருளே பெரிதாய்ப் புரிபா வமுடன்

   புலனின் பநுகர் வதிலார் வமுளன்

அருளிச் செயலை வடவே தமதை

   அறவே அறியா துளகீழ் நிலையன்

 

மனதா லுரையா லுளதே கமதால்

   மதிமீ றியகா ரியமே புரியும்

எனதா யிரமா யிரமா னபிழை

   எதுவா யினுமே இலையா யருள்வாய்

 

ஒருசக் கரமும் ஒலிசங் கதுவும்

   உடையாய்! அழகே உருவா னவனே!

திருவே தனதாய் உறைமார் பினனே!

   தொழுதேன் அடிசேர் கதிதந் தருளே!

Friday, April 30, 2021

நிழலும் மிதிக்கும் நிலை

 

உன்னதம் போய்மறையும் உற்றதுணை விட்டகலும்

பின்னடைவு கண்டு பிறர்நகைப்பர் – எண்ணி

அழலே விதியென் றடங்கவும் வைக்கும்

நிழலும் மிதிக்கும் நிலை.


ஈற்றடிக்கு எழுதியது.    Tamilauthors.com. Minnithazh 20.5.2019

Tuesday, April 20, 2021

எங்கும் நிறைந்தவன் தான்! (வினாவிடை)

 


 

வண்ணக் கலவையில் தூரிகை தோய்த்திதை

    வானில் வரைந்தவர் யார்?

மண்ணி லதன்நிழல் நீரில் விழும்படி

    மண்புறச் செய்தது யார்?

 

\கண்ணைக் கவர்கிற காட்சிகள் யாவிலும்

    காணென நிற்பவன் தான்.

எண்ணத் துறைபவன் எழில்வடி வானவன்

    எங்கும் நிறைந்தவன் தான்.

 

 

மின்னிதழ் ஒன்றின் படக்கவிதைப் போட்டிக்காக எழுதியது.

10.9.2018.

Thursday, April 01, 2021

எக்காலத் தானும் இனிது



பொய்யாயாள் சேர்த்தல், பொருள்தருதல், சாவடிக்குள்
கையாள் எனவிவற்றால் காண்வெற்றி – மெய்யாமோ?
தக்கார் எனமக்கள் தாமே தரும்வெற்றி
எக்காலத் தானும் இனிது.

ஈற்றடிக்கு எழுதியது. tamil authors.com 25.3.2019

 

Sunday, January 24, 2021

துன்புற்று வாழ்தல் அரிது

 

 

காட்டிப் பொருமையினைக் காரியங்கள் ஆற்றிடுவார்

போட்டி தவிர்த்துப் பொருள்சேர்ப்பார். – ஈட்டியதில்

இன்புற் றிரப்போர்க்கும் ஈந்துவப்பார் பாரிலவர்

துன்புற்று வாழ்தல் அரிது.


ஈற்றடிக்கு எழுதியது. Tamiauthors.com Minnithazh 18.3.2019

Sunday, January 17, 2021

கைநிறையக் காசிருந்தக் கால்

 

கண்டபடி கண்மேயும். காதிரண்டும் கேட்காது.

மண்டுதலைக் கர்வம் மதியழிக்கும். – உண்டாகும்

பொய்யுறவும் நட்பும் பொழுதழிக்கும். கீழோரின்

கைநிறையக் காசிருந்தக் கால்.


ஈற்றடிக்கு எழுதியது. Tamil authors.com. Minnithazh 8.5.2019