Friday, March 13, 2015

உணர்வார் இலையே!





களிகொண் டுளறுபவர் கள்ளுண்ட நிலை கண்டு
     கலங்கிநீ நின்ற தென்ன?
         கல்விதரு பள்ளிகற் கருகிலே கூடபல
             கடையின்று வந்த தென்ன?

வெளியா ரிலாதபடி விலைக்குமது அரசேற்று
     விற்பனை செய்வ தென்ன?
         உபவாச வழியெலாம் உதவாத நிலையின்று
             உருவாகிப் போன தென்ன?

எளிமையே உயர்ந்ததென ஏற்றுநீ போற்றியதை
     எவருமே ஏற்க விலையே!
          ஏழைக்கும் ராசனாய் எப்போதும் வாழ்கின்ற
             ஆசைக்கு மெல்லை யிலையே!

ஒளியாம லுண்மையினை யுரைப்பதே நலமென்ற
     உறுதியைப் போற்ற விலையே!
          உன்வாழ்வை காந்திநீ உலகுமுன் வைத்துமதை
                உணர்வாரு மொருவ ரிலையே!



கற்சிலையை வைத்தவர்கள் காசுபணம் பார்த்தவுடன்
     கைகழுவி விட்ட நிலையே!
          காகமிடு மெச்சமுன் கண்ணீராய் வீழ்வதனைக்
               கண்டுமனம் மாற விலையே!

விற்கின்ற பத்திரிகை வெளியிட்ட உன்படமும்
     வீணாகும் குப்பை நிலையே!
         வீதியிலே வடைசுற்றி விற்பதுதான் வேதனையே
                வேறுபய னாவ திலையே!

கற்றாரும் நீதந்த கைவேலை  விட்டதன்பின்
     கைராட்டை தோற்ற தையா!
         கண்கண்ட சத்தியம் காணாது போயின்று
              கபடமே வென்ற தையா!

பெற்றாளின் மேலான பெருமண்ணின் மேற்பக்தி
     பற்றாது போன தையா!
         பிறந்தநம் நாடதனின் பெருமையை யறியாத
              பேதைமை பெருகு தையா!


பாரதிகலைக் கழகம் . 13.10.2013