Tuesday, March 24, 2009

குறள் நெறிகள்

குத்தி வெட்டியும் குடைந்து தோண்டியும் குதறி மேனியில் குழிகள் செய்திடும் பித்த மானிடர் நிற்கை தாங்கிடும் பெற்றி கொண்டதிப் பூமியல்லவோ? புத்தி யின்றியே புல்லர் தருமிடர் பொறுமை கொண்டுநாம் புறக்க ணிப்பதை ஒத்த நன்னெறி ஒன்று வேறிலை உயர் குறளுரை உணர வேண்டுமே! தெருவி லெச்சிலைத் தேடி யோடியே தின்று வாழ்ந்திடும் நாயினும் நம் அறிவு நன்றியிற் குறைவு தானெனில் அதனை யேற்கவே வேண்டு மல்லவோ? வுருவி லழக்கெமக் குள்ள தென்பதால் வுய்வு வேண்டுத லில்லை யென்பமோ? பரிவு கொண்டதால் வள்ளுவன் இதைப் பாருளோர்க் கெலாம் பகர்ந்து போயினான். என்ன பயனிதாற் கிடைக்கு மென்றுநாம் எண்ணிச் செய்கிற காரி யங்களில் தன்னை வளர்ப்பதோர் நோக்க மொன்றினால் தாழ்ந்து போனவ ராவ தில்லையோ? மண்ணில் தோன்றிய மரங்க ளொப்பவும் மழை பொழிந்திடு மேக மொப்பவும் உண்ணு நீர்தரு நிலைக ளொப்பவும் உலக மானிடர் வாழ வேண்டுமே! பள்ளம் நோக்கியே பாயு நீரென பற்றினால் மனம் தீய நாடிடும் தள்ள வேண்டிய பொருளனைத் தையும் தான டைந்திடத் துன்பமே தரும். உள்ளம் செல்வழித் தீமை நீக்கியோர் உண்மை நன்மைபால் உய்ப்ப தறிவுதான் வள்ளு வன்குறள் தவிர வேறுநூல் வாழு நெறிகளைக் கூறி மிஞ்சுமோ? 'கவிதை' மாத இதழ் மே 1986

Wednesday, March 18, 2009

விடுதி

நெடுந்தூரம் நடந்ததனால் களைப்பு இடையில்
நிறம்மங்கிக் கிழிந்ததொரு பழைய வேட்டி
ஒடுங்கிவெறும் கூடாகிக் கூனல் கண்டு
ஒடிந்துவிழும் தோற்றத்து முதியோர் ஒருவர்
கடுங்கோடை நாளொன்றில் வீட்டுப் படியில்
கதவருகில் தலைசாய்த்துத் தூங்கக் கண்டேன்.
கடுஞ்சொற்கள் சொல்லுதற்கு மனமில் லாமல்
கருணையினால் வீட்டிற்குள் அழைத்துச் சென்றேன்.

'அன்புடனே அழைக்கின்றாய் யார்வீ டெ'ன்ன
'அழகிய இச்சிறுவீடு எனதே' என்றேன்.
'என்ன?இது உன்வீடா? இல்லை இல்லை
எப்படிநீ சொல்லுகிறாய்' என்று கேட்டார்.
'அன்புடனே அழைத்துமக்கு இடமுந் தந்த
அறிவிலியைக் கேட்டதுநீர் சரிதா' னென்றேன்.
'முன்கோபம் கூடாது மனித னுக்கு
முழுதுமிதைக் கேளெ'ன்று மேலும் சொன்னார்.

'தந்தையிதில் சிலகாலம் இருந்த போது
தாயுமிங்கு அவருடனே இருந்த துண்டே!
தந்தைக்குப் பின் நீயுன் மணையா ளோடு
தற்போது வாழ்கின்றாய் அம்மட் டேகாண்.
உன்றனுக்கு பின்னுமிங்கு வசிப்ப தற்கு
உன்மகனும் உளனென்று அறிவா யன்றோ?
வந்திருந்து சிலகாலந் தங்கிப் போக
வாய்த்தவொரு விடுதியிது உன்வீ டாமோ'?

சொற்களவை செவிகளிலே புகுந்து மூளை
சேர்ந்துபொருள் எனக்கங்கு புரிந்த போது
நிற்பதற்கே இயலாதார் எப்ப டித்தான்
நெடுந்தூரம் சென்றாரோ? மறைந்தி ருந்தார்.
'பற்றறுக்க வேண்டியதோர் பாடந் தன்னைப்
பக்குவமாய் வந்தெனக்குச் சொல்லித் தந்த
வற்றலுடல் தாடிமுகச் சித்தர் யாரோ?
வாழ்நாளில் இனியவரை மறக்கல் ஆமோ?