Thursday, September 18, 2014

பாரதி கவிதைகளில் - மொழிவளம்



                                                         
வெல்லத் தன்னை இன்றுவரை - இங்கு
    வேறே ஒருவர் இலையாகச்
சொல்லைப் பொருளைப் புதிதாக்கி - நல்ல
    சுவையோ டுரைத்த கட்டுரைகள்
வல்ல தமிழின் வார்த்தையெலாம் - காட்டி
    வரைந்த வண்ணச் சிறுகதைகள்
தொல்லை தராத நடை,அறிவை - நன்கு
    தூண்டும் கருத்துக் குவியலவை.

எண்ணப் படியே வெண்பாவில் - வந்து
    எப்படி விழுமோ வெண்டளைகள்?
வண்ணப் பாடல்கள் சந்தங்கள் - பல
    வாய்ந்தவை சிறந்த தெங்ஙனமோ?
இன்னும் அகவல் விருத்தங்கள் - உள்ள
    ஏனைய சிந்துப் பாடல்கள்
மின்னும் தமிழின் வளங்காட்டும் - இந்த
    மேதினி என்றும் போற்றிடவே!

திருத்த சாங்கம் சாற்றுகவி - புகழ்த்
   திரௌபதி சபதக் காப்பியமும்
திருப்பு கழ்நான் மணிமாலை - கும்மி
   தீதறு தூது சீட்டுகவி
அருமை பாரத மாதாவுக் - கென
   வாக்கிய பள்ளி எழுச்சியிவை
பெருமை மிகுநம் தமிழ்மொழியில் - உள்ள
   பெருவளங் காட்டி நிற்பவையே!


உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம், மடிப்பாக்கம் கிளை துவக்க விழா மற்றும் மகாகவி பாரதி விழா. வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம், மூவரசம் பட்டு. 15.12.2013