Sunday, November 18, 2012

குகன் வில் வாழ்க!



அரசமுடி பொன் நகைகள் ஏது மின்றி
..அரைப்பட்டை தனிற்தொங்கு வாளு மின்றி
தரமுடைய வெண்பட்டில் சரிகை நெய்து
.. தகதகக்கும் உடையதுவும் கூட இன்றி
இரவிலொளிர் மதிமுகத்திற் சோகம் கொண்டே
.. எழிலழிந்து, துயர்தோய்ந்து, தொலைவி லாங்கே
மரவுரியில் வருபரதன் உருவங் கண்டு
..மனமிளகித் தான்வீழ்ந்த குகன்வில் வாழ்க!

மதிமயக்கம் கொள்ளவரு கோபம் தன்னில்
.. மனமறிவை வென்றுடலை இயக்கும் போதில்
எதுசரியென் றறியாமல் நாணைப் பூட்டி
..எயுமம்பு பரதன்மேற் பாயும் ஐயோ!
அதுநிகழ்தல் கூடாது. பாவம். நாமும்
.. அறக்கேட்டில் துணைசெல்ல வேண்டாம். இங்கே
இதுதருணம் எனக்கையின் நீங்கி, எய்ய
..இயலாத படிவீழ்ந்த குகன்வில் வாழ்க!

நழுவியதை மறுபடியும் கையிற் தூக்கி
..நாணேற்றக் கூடுமெனில் பயன்தா னென்ன?
முழுவதுமாய் முறையற்ற தொன்றைச் செய்ய
..முனையுமுனர் அதுதடுக்கும் வழியில், வேண்டித்
தொழுவதெனும் முடிவுடனே கையின் நீங்கித்
..திருவடியில் விழுந்ததென அறியக் கேட்டேன்.
பிழையிலதாய் பரதன் நிலை குகனும் கண்டு
..பின்னர்மனம் மாறியதாய்க் கம்பன் சொல்வான்.


வற்கலையி னுடையானை மாசடைந்த மெய்யானை
நற்கலையின் மதியன்ன நகையிழந்த முகத்தானைக்
கற்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்
விற்கையினின் றிடைவீழ விம்மிற்று நின்றொழிந்தான்.
                                                                      கம்பன். - குகப்படலம்.

No comments: