Thursday, May 28, 2015

நன்மைகள் நிலைக்கட்டும்


கால மெனுமவன் கண்களில் விண்ணிடைக்
காலை யுதயத்தைக் காட்டுகிறான் - பின்பு
ஞால முழுதையும் நள்ளிருள் உள்தள்ளி
நம்மிரு கண்களைக் கட்டுகிறான்.

போற்ற வளர்செடிப் பூவகை யாவையும்
பூமியில் நாளொன்றில் வாடிவிடும் - இங்கு
நேற்றுப் புதிதென நாமுண்டு மீந்ததின்
நாமம் பழையதாய் ஆகிவிடும்.

புத்தம் புதியதைப் போட்டு நடந்திடில்
பாதையிற் சேறுள்ள தொட்டிவிடும் - என்று
பித்த நிலையினிற் பாதுகை கைக்கொண்டு
பாரில் நடப்பவர் யாருமுண்டோ?

நாளை யொருதினம் நிச்சயமாய் வரும்
நன்மை வருமென யாரறிவார்? - என்றே
வேளை வருமென வீற்றிருந் தாரிங்கு
வேறு பயனொன்று கண்டதுண்டோ?

மாற்ற மெனுமது மண்ணின் இயல்பெனில்
மாறிப் பழையதாய் ஆகிலுமென்? - இன்னும்
ஏற்ற முறநன்மை எய்தி நிலைகொள்ள
என்றும் முயன்றதில் வென்றிடுவோம்.