Sunday, November 03, 2019

குற்றம் குற்றமே




உள்ளத்துள் நீவந் தென்றும்
   உரைந்திடு மிடமே இன்றிக்
கள்ளமே சேர விட்டுக்
   காடென வாக்கி வைத்தேன்.
தள்ளுதற் கரிய துன்பம்
   தவிர்த்திட வேண்டி மட்டும்
உள்ளஊர் கோயில் தேடி
   ஒவ்வொன்றாய் வந்து நின்றேன்.

எனக்கெது வேண்டு மென்றும்
    எப்போது தேவை யென்றும்
அனைத்தையும் அறிவா யென்றும்
     அறியா திருந்த தாலே
எனக்கிவை யருள்வா யென்றும்
    இன்னின்ன வேண்டு மென்றும்
உனக்குமுன் வேண்டி நின்றேன்.
    உரைத்திடில் அதுவும் குற்றம்.

முடியினை முழுது மீந்தேன்.
    முப்பது நாள்தொ டர்ந்து
படிகளில் மலையின் மீது
    பாதத்தால் ஏறிச் சென்றேன்.
அடிமுறை மட்டு மின்றி
    அங்கமே முழுதும் மண்ணில்
படும்படி வலங்கள் செய்து
    பக்தனென் றீர்க்கப் பார்த்தேன்.

கடவுளே! நூலோர் உன்னைக்
    கருணையின் வடிவென் றாரே!
அடியவர் நேர்ந்து கொண்டே
    அவயவம் வருந்தச் செய்யும்
படியவர் செய்வ தெல்லாம்
    பரம!உன் மகிழ்வுக் காமோ?
கொடியதே என்றன் சிந்தை
    குற்றமிது குற்ற மேதான்.


சிவநேயப் பேரவை. வாழ்க வளமுடன் சிற்றரங்கம். 9.2.2019 தலைமைக் கவிதை.

Friday, October 11, 2019

யார் வரைகின்றார் அழித்தழித்தே?



முந்தைய தொன்று மறுபடி தோன்றா முறையினிலே
சிந்தை கவரும் சிறப்புள கற்பனை சேர்வகையில்
விந்தை நிறங்களில் வானிதில் வந்து விதவிதமாய்
அந்திப் பொழுதினில் யார்வரை கின்றார் அழித்தழித்தே?

கட்டளைக் கலித்துறை. சந்தவசந்தப் புகைப்படத்துக்கு எழுதியது.

Sunday, October 06, 2019

வலிதே விதியின் வலி


போயுழைத்து வாங்கியவர் போகா மகிழுந்தில்
நாயமர்ந்து போவதனை நானறிவேன். – நோயில்
வலிய ஒருபக்க வாதப் படுக்கை
வலிதே விதியின் வலி.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 22.10.2018

Tuesday, October 01, 2019

தீய மது தீமை தரும்



தென்னை இளநீரும் தேனும் பழரசமும்
என்று மருந்தி இதம்பெறலாம். – பின்னெதற்கு
நோயில் விழுந்துளம் நொந்துநாம் சாவதற்கா?
தீயமது தீமை தரும்.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 15.10.2018

Thursday, September 26, 2019

முறையோ இதுவே மொழி



மற்றோர்போல் தாமும் மகிழுந்தும் மாளிகையும்
பெற்றிங்கே வாழும் பெருமைசொலக் – கற்றோர்
கறைபடியக் கைநீட்டு கின்றாரே. தோழீ!
முறையோ இதுவே மொழி.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 8.10.2018

Tuesday, September 24, 2019

நீட்டித்து நிற்கும் நிலைத்து



புகழும் பொருளும் பெறலரிதே. ஆயின்
புகழே பொருளிற் பெரிதாம். – மகிழ்வுறவே
ஈட்டும் பொருளழியும் எய்துபுகழ் வாழ்நாளை
நீட்டித்து நிற்கும் நிலைத்து.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 2.10.2018

Monday, June 24, 2019

அதனாலே என்றும் அழிவு



குடலை அரிக்கும் குடியைக் கெடுக்கும்
நடத்தை தனைமாற்றும் நஞ்சாம் – உடலே
மதுபோதை யாலழியும் மற்றுள்ள தென்ன?
அதனாலே என்றும் அழிவு.

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com minnithazh. 24.9.2018

Tuesday, April 30, 2019

மாயக் காரன்


மாயக் காரன் அவனொருவன் - இங்கு
மந்திர வடிவில் இருக்கின்றான்.
பாயும் மனதை ஈர்க்கின்றான்.
பற்பல வித்தைகள் புரிகின்றான்.

ஒற்றைச் சின்ன விதைக்குள்ளே - ஒரு
உருவிற் பெரிய ஆலமரம்
நிற்கை காட்டி மயக்குகிறான்.
நெஞ்சில் நின்றே இயக்குகிறான்.

முட்டைக் குள்ளே காணாது - குஞ்சை
மூடி வைத்துக் காட்டியவன்
முட்டை பறவைக் குள்வைத்து
மேலும் விந்தை புரிகின்றான்.

முட்டை பறவை இவற்றுள்ளே - இங்கு
முதலில் வந்தது எதுவென்றால்
கெட்டிக் காரன் செயலலவா
கேள்விக் கொன்றும் விடையில்லை.

எண்ணில் நேரம் மாறாமல் – உள
எதுவும் வழியில் விலகாமல்
விண்ணில் எத்தனை பந்துகளை
வீசிச் சுழலச் செய்துள்ளான்?

எண்ணப் பிடிக்குள்: வருகின்றான் – என
எண்ணும் போதே மறைகின்றான்
கண்ணைக் கட்டிய ஆட்டமிது
கைதொட வந்து நிற்பானோ?




சிவநேயப் பேரவை: வாழ்க வளமுடன் சிற்றரங்கம் நங்கைநல்லூர். தலைமைக் கவிதை. 8.12.2018.

Tuesday, April 16, 2019

உள்ளத்தில் தித்திக்கும் தேன்




கனியின் சுவையும் கரும்புதரு சாறும்
இனிதாகும் என்றே இருந்தேன். – இனிதில்லை
வள்ளுவத்தில் ஆழ்ந்து வளங்கண்டால் அத்தனையும்
உள்ளத்தில் தித்திக்கும் தேன்.


ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithaz 10.9.2018

Sunday, March 10, 2019

தென்றலே நீவந்து செப்பு






உள்ள மலரையெலாம் ஒவ்வொன்றாய் நீசென்று
மெள்ள முகர்ந்தபின் மீளுகிறாய் –  கள்ளமற
உன்றன் கணிப்பில் உயர்ந்தமணம் கொண்டதனைத்
தென்றலே நீவந்து செப்பு.

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithaz. Sep. 2018

நாளும் முயன்றிடுவோம்



உன்றன் மொழியோர் உயர்மொழி என்றிடில்
ஒன்றும் பிழையில்லை. – அதன்
உயர்வை யுணர்ந்தே உவகை கொள்வதில்
ஒன்றும் தவறில்லை.

என்றன் மொழிதான் உலகிலு யர்ந்ததென்(று)
உரைப்பது சரியில்லை - இங்கே
ஏசிப் பிறமொழி பேசிடு நண்பரை
எள்ளுதல் முறையில்லை.

ஒன்றாய்த் தாய்மொழி உலகிலு ளோர்க்கொரு
உரிமையில் உளதாகும். – அந்த
ஒவ்வொரு மொழியிலும் உயர்படைப் பென்பவை
ஒருநூ றுளவாகும்.

நன்றாய்ப் பிறமொழி நூல்பல மாற்றி
நம்மொழி சேர்த்திடுவோம். – இன்னும்
நம்நூல் பலவும் பிறமொழி மாற்ற
நாளும் முயன்றிடுவோம்.

சர்வதேசத் தாய்மொழி தினம். பிப். 21. Tamilauthors.com.minnithaz.

Friday, January 04, 2019

சித்திரக் கவி: சங்கு பந்தம்




தமிழே! வடிவத்திற் சங்காகி வா!

நிகர்த்துளதா யின்னுமொன்று நல்லதாவ தில்லா
வகையுளைநீ வண்டமிழே! உன்றனையே உள்ளி
முடிதாழ்த்தி வேண்டுமென்பா முந்துற்றே தங்கு
வடிவத்திற் சங்கெனவே வந்து.




இன்னிசை வெண்பா.

மொத்த எழுத்து 73 ல் சந்தி எழுத்து
து, வ, உ, ற் ஆகிய 4 ஆக, 69 எழுத்தில் முடிந்தது.


சந்தவசந்தக் குழுமத்தில் எழுதியது.