Tuesday, July 31, 2012

உழைக்கும் கரங்கள்


வீடு நடத்திடப் பொருள்தேடி - நாட்டை
    விண்ணுக் குயர்த்திடத் தம்கரத்தால்
பாடு படுபவர் கைகுலுக்கி - அவர்
    பாதம் பணிந்திடல் வேண்டுவதே!

ஆலை களில்பணி செய்திடுவோர் - பொருள்
    ஆயிரம் உண்டென வாக்குகிறார்
மேலைத் திசையுள்ள நாடுகளோ டிந்த
    மேதினி சந்தையை யாளுகிறார்.

சாலைகள் பாலங்கள் ஆலயங்கள் - எங்கும்
    சற்று மயராது கட்டுதலை
வேலை யென்றசிறு சொற்குறிக்கும் - அவர்
    மேனி வியர்வையில் நாடுயரும்.

ஓடு சாக்கடைநீர் தூரெடுத்தும் - பிறர்
    உண்டு கழித்தமலம் தாம் சுமந்தும்
ஆடி முடிந்துயிர் நீத்தவர் காட்டினில்
    அக்கினிக் கேகிடத் தோள்சுமந்தும்

வீடு நடத்திடப் பொருள்தேடி - நாட்டை
    விண்ணுக் குயர்த்திடத் தம்கரத்தால்
பாடு படுபவர் கைகுலுக்கி - அவர்
    பாதம் பணிந்திடல் வேண்டுவதே!

வாசல்: உழைப்பாளர் தினம்.   கவியரங்கம் மே 2009

No comments: