Monday, June 22, 2009

இந்து மதத்தில் வேற்றுமையில் ஒற்றுமை


ஆயிர மாயிர மாண்டு களாய் - இங்கு
ஆதி மதமென வேர்ப ரந்து
பாயு நதிக்கரைப் பர்வத மீதிலும்
பள்ளம் சமவெளிப் பகுதி யெலாம்

ஆயிர மாயிர விழுதி றக்கி - ஓர்
ஆல மரமெனத் தழைத்தி ருந்து
காயும் பிறமத வெம்மை தடுத்திட
காலம் விரித்தநி ழற்கு டையே!

சாம யசுரென ருக்கெ னவும்- இன்னும்
சாற்று மதர்வண வேத மென்றும்
ஓமம் வளர்த்தலும் மந்தி ரங்கள்
ஓதி நிதம்செயும் பூசை களும்

நாமவை ஏற்றநற் கொள்கை வழிதனில்
நாலென வைந்தென வாகி டினும்
பூமியில் வாழ்கிற மக்க ளுக்கு - ஒரு
புண்ணிய நற்கதி நல்கி டுமே!

கோவில் குளமெனக் கட்டி வைத்து, - பல
கும்பிடு தெய்வங்கள் ஆக்கி வைத்து
ஓயும் வழியில்லா மன்த்த டக்கி- அங்கு
ஒன்றி இறைநிலைப் பேரொ ளியில்

தோயும் வகையினில் செய்ப யிற்சி - அதில்
துன்ப மொழித்திடும் நோக்க மொன்றே!
பாயு நதிகளோ வெவ்வே றவையிப்
பாரினில் சேரிடம் ஓர்க டலே!

பார்க்கு மிருவிழித் தோற்ற மெலாம் - பிழை
பாரி லிருக்கிற பொருள ணைத்தும்
கூர்த்த மதியுடைக் கொள்கையிற் சீரியர்
கூறிய தத்துவப் ப்ரம்ம மன்றோ?

சாற்றிய ப்ரம்மமும் உணர்ந்த வர்க்கு
சட்டென மாயையை நீக்கி டுமே!
வேற்றுமை தன்னிடைத் தோற்றி டினும்- பொருள்
வேறல்ல ஒன்றெனக் காட்டி டுமே!

வேதம் முதலுள மீமாம்ச சாத்திரம்
வேறுள வாகம நூல்க ளெலாம்
பேதங் களைப்பல பேசி டினும்- பெரும்
பேறென நாமவை பெற்ற செல்வம்.

மத்ஸ்யம் முதலிய பத்தவ தாரமும்
மாதவன் செய்த வையே.- அவன்
தத்துவ கீதையில் தர்ம நெறிமுறை
யுத்த களந்தனில் தந்த வனே!


காஞ்சீபுரம் இந்து தமிழ்க் கவிஞர் மன்றத்தின் நவராத்திரி கவிக்கோவைப் போட்டியில் பரிசு பெற்றது. (அக். 1982)

Friday, June 19, 2009

விண்முட்ட ஏறும் விலை

முன்னர் சிவனார் முடிதேடி நான்முகனும்
அன்னம் உருக்கொண்டு ஆகாயம் சென்றதுபோல்
அண்ணல் முடிகாணும் ஆர்வந்தான் கொண்டுளதோ
விண்முட்ட ஏறும் விலை?


தினமணி கதிர்- வெண்பாப் போட்டி (1981)

ஆற்றல் உடைய(து) அரசு

உற்ற இடுக்கண் உணராது; ஓயாது
கற்ற நெறிமுறைகள் காத்திருக்கும்;- வெற்றிபெறக்
கூற்றெதிர் வந்தாலும் கொள்கையில் மாறாத
ஆற்றல் உடைய(து) அரசு.


இளந்தமிழன் -வெண்பாப் போட்டி (1973)

Monday, June 15, 2009

காசுக்கே விற்றுவிட்டோம் காண்

காசுக்கு வாங்கிக் கடன்பட்டும் தீபத்தை
வாசித்தோம் பின்னர் வழக்கம்போல்- தூசிதட்டி
வீசைக் கெடுப்பவன் வீதியிலே வந்தபோது
காசுக்கே விற்றுவிட்டோம் காண்


தீபம்- வெண்பாப் போட்டி- டிசம்பர் 1971

மாற்றம் வரவேண்டும்

வான மளக்கிற விஞ்ஞான
வளர்ச்சி யொருபுற மிருந்தாலும்
நாணம் இழந்து தெருவோரம்
நகர்ப் புறமெங்கும் நாற்றமுற
வீணர்கள் செய்யும் சிறுசெய்கை
வெட்கக் கேடென உணராரோ?
பேணும் உடல்நலம் பாதிக்கும்
பெரிதாய் மாற்றம் வரவேணும்.

மூன்றாம் வகுப்புத் தேர்வுக்கு
முழுத்தாள் கணினி மென்பொருளாம்
நான்காம் வகுப்பில் அசைன்மென்டாம்
நால்வர் செய்யும் ப்ராஜெக்டாம்
வேண்டும் கல்வி வளர்ச்சியெலாம்
வேண்டாம் என்போர் யாருமிலை.
காண்போர் மதிக்கும் பண்பாட்டைக்
கற்றுத் தருவது எங்கய்யா?


மனித நேயம் ஆக.2003

Thursday, June 11, 2009

மால் உகந்த மாலை


ஆல மரத்திலையின் - நடுவே
அன்று துயின்றபரன்
பால முகுந்தனென - வந்து
பாரை மயங்கவைத்தான்.
கோலக் கருவிழியும் - குழல்
கொஞ்சும் உதட்டொளியும்
நீல நிறத்தழகும் - கோதை
நெஞ்சில் வரைந்திருந்தாள்.

காலைக் கடமைகளில் - ஒன்றாய்க்
கதிர் வருவதன்முன்
சோலைச் செடிகொடியில் - மலர்கள்
சேரப் பறித்துவந்து
மாலன் அரங்கனுக்கு - நல்ல
மாலை தொடுத்துவரும்
ஆலய நற்பணியில் - தந்தை
ஆழ்ந்து மகிழ்ந்திருந்தார்.

பாடிச் சிரித்தபடி - தினமும்
பாவை நறுமலர்கள்
தேடித் தொடுத்ததனைத் - தன்னிரு
தோளில் மகிழ்ச்சியுடன்
சூடி அவனழகில் - தனது
சற்றுக் குறைந்திருக்க
ஆடி முகம்பார்த்துத் - திருத்தி
அழகு செய்துகொள்வாள்.

கோதை செயல்முழுதும் - ஒருநாள்
கண்டு துடித்தவராய்
"பேதை தவறிவிட்டாய் - பெரும்
பிழைநீ செய்துவிட்டாய்
பாதக மாகியதே" - என்றார்
பதறி நின்றுவிட்டாள்.
மாதவன் மார்பினுக்குப் - புதிதாய்
மாலை தொடுத்துவைத்தார்.

"காலை முறைதனிலே - சாற்ற,
கண்ணனின் தோளிணைகள்
மாலை மறுத்ததனால் - அதனை
மலரடி யிட்டுவைத்தோம்"
ஆலயம் சென்றவுடன் - செய்தி
அர்ச்சகர் வாயறிந்தார்.
மாலுக் கிழைத்தபிழை - எதுவும்
மனதிற் தோன்றவில்லை.

வாடி அமர்ந்தவர்க்கு - இரவில்
வந்த கனவினிலே
கோடிக் கதிரொளியின் - இடையே
கொண்டலின் வண்ணனவன்
"சூடிக் கொடுத்தவளின் - மாலை
சூடி மகிழ்ந்திருந்தேன்.
கோடி யுடுத்தவளைக் - கோவில்
கொண்டு தருக"வென்றான்.

கோதை மகிழ்ந்திருந்தாள் - தந்தை
கொஞ்சம் தளர்ந்திருந்தார்.
பாதை தனக்கதுவாய் - அன்றே
பாவை தெளிந்திருந்தாள்.
வேத முழக்கிடையே - நல்ல
வேள்விகள் தன்னிடையே
கோதை கரம்பிடித்து - அரங்கன்
கோவிலுள் சென்றுவிட்டான்.



மதுரைத் தென்றல் வீதியுலா-15 ஜனவரி 2001.