Saturday, February 22, 2020

உறைந்துள்ளாள் என்றன் உளத்து





இல்லாள வந்தென் இதயத்தைச் சேர்த்தாண்ட
நல்லாள் பிரிந்தாளோ? நானுளனே! – வல்லாள்
மறைந்துள்ளாள் என்றும் மறக்கவிய லாதே
உறைந்துள்ளாள் என்றன் உளத்து.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz. Feb. 2020.

Friday, February 21, 2020

புல்லறிவு காட்டி விடும்



மெய்யாய்நூ லொன்றும் முறையாகக் கற்காமல்
பொய்யாய்ப் புலமையுளோன் போற்றோன்றல் – ஐயமற
நல்லறிஞர் கூட்டத்தில் நாவசைத்துப் பேசுகையில்
புல்லறிவு காட்டி விடும்.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz. 14.1.2019.

Friday, February 14, 2020

நிலையாது நீத்து விடும்



பாரிலுளோர் சுண்ணாம்பைப் பாறைக்கல் என்றாலும்
நீரிலது தானாக நீர்த்துவிடும். – தேரில்
கலையாதாய்த் தோன்றும் குணமுடையோர் கோபம்
நிலையாது நீத்து விடும்.

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz. 7.1.2019.

Sunday, February 09, 2020

நீர்மே லெழுந்த நெருப்பு



புள்ளும் சிறகால் பயந்துதன் பார்ப்பணைத்துக்
கொள்ளு மெனப்புலவன் கூறியவவ் – வெள்ளத்தீ
சீர்மை மிகுநூறு செவ்வாம்பல் வாயவிழ
நீர்மே லெழுந்த நெருப்பு

ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz 3.12.2018