Wednesday, April 30, 2014

அறன் வலியுறுத்தல்


(திருக்குறட் கருத்து)


பெறத்தக்க பெரும் பேற்றில் வீட்டை நல்கும்
..பெற்றியது வேண்டியோர்க்கு நீளும் செல்வத்
துறக்கத்தை ஈயுமெனில் உயிர்க்கிங் காக்கம்
..தரத்தக்க வேறுளதோ அறத்தை யன்றி?
மறத்தலினால் வருங்கேட்டைக் கூடச் சொல்லி
..மண்ணுயிர்க்கு வழிகாட்டும் முப்பால் நூலோ
அறத்தியற்கை ஆக்கத்தை ஈதற் கொண்டே
..அதைச்செல்லும் வாயெல்லாம் செய்யச் சொல்லும்.


வாக்கென்றால் ஒலிவடிவிற் செவியிற் சேரும்.
..உடலியக்கம் காட்சியெனக் கண்ணில் தோன்றும்.
தேக்குகுறை பாடுடைய நெஞ்சின் வழிதான்
..தெரிக்கின்ற சொல்லோடு செயலும் போகும்.
நோக்கமுடன் பிறரறியச் செய்து வெறும்
..நாடகமாய் ஆவதுவும் அறமென் றாமோ?
நோக்கிலற மனைத்திற்கும் வித்தாய் நிற்கும்
..நெஞ்சத்துத் தூய்மைக்கு நிகரே இல்லை.


பல்லக்கின் பாரத்தைத் தோளில் ஏற்றிப்
..பாதையிலே பக்குவமாய்க் காலை வைத்து
வெள்ளமென உடல்முழுதும் வியர்த்தே ஊற்றும்
..வெம்மையிலே தரைச்சூட்டைத் தாங்கி நால்வர்
மெள்ளநடை தடுமாற, உள்ளே யொருவர்
..மெத்தையிலே சயனித்துச் செல்லல் இங்கே
உள்ளபடி அறத்தியல்பைக் காட்டுந் தானே?
..உணர்ந்தறிய நூலெதுவும் கற்றல் வேண்டாம்.


இன்னாச்சொல் லழுக்காறோ டாசை வெகுளி
..இவைநீக்கி, இயற்றுதலே அறமென் றாகும்.
பின்னரொரு காலத்திற் செய்வோ மென்னா(து)
..எப்போது மதைவிடாது செய்வோ மானால்
பொன்றுங்கால் அழியாத துணையாய் நிற்கும்.
..பிறவற்றால் இன்பமிலை புகழு மில்லை.
இன்னுமொரு பிறவிகருத் தடையாய் நின்று
..இன்பமறாப் பெருவீட்டில் அறமே சேர்க்கும்.


பாரதி கலைக்கழகக் கவியரங்கம் 20.6.2010.

Friday, April 25, 2014

குடலுண்டு குன்றிய கூடு








சுற்றம் மறந்ததோ? சூழ்வறுமை காரணமோ?
உற்ற துணையு மொதுக்கினளோ? - வற்றிக்
குடலுண்டு குன்றியதோர் கூடானாய் கண்டு
கடவுளரும் கண்கலங்கு மாறு.

(சந்த வசந்த இணையக் குழுமத்தில் யோகியார் அவர்கள் கேட்டிருந்தபடி புகைப்படத்துக்கு எழுதிய வெண்பா.)