Monday, July 27, 2020

”ஆசை பற்றி அறையலுற்றேன்” --



    கம்பன் ஆசை என்னவாக இருந்திருக்கும்?

என்னவாகக் கம்பனாசை
    இருந்திருக்கும் மென்று காண
சொன்னசொல்லில் தோன்றிடாது
    சோர்வடைந்து நின்ற போது
சின்னதான மின்னலொன்று
    சிந்தைவந் தொளிர்ந்து போக
என்னதென்று கண்டுகொண்
    டெடுத்தியம்ப வந்து நின்றேன்.

(வேறு)

விருத்தப்பா எழுதுவதில் வித்தகராய் இத்தரையில்
இருக்கின்ற பிறவறிஞர் எல்லோரும் பாராட்டி
’விருத்தமெனும் ஒண்பாவி லுயர்கம்ப’ னெனும்படியாய்
கருத்தையது கவர்வகையில் கவிசெய்யும் ஆசையலா?

முந்தியுளோர் வடமொழிக்கு மூவர்செய் ராமகதை
தந்தபெரும் புகழ்கண்டு தரணியிலே அதற்கிணையாய்
செந்தமிழில் அதைத்தந்து சீரியதோர் செல்வத்தை
நந்தமிழுக் குளதாக்கி நலஞ்சிறக்கச் செய்வதுவா?

விற்கொண்ட கையற்கு வேதங்கள் வடமொழியின்
சொற்கொண்டே ஈதென்று சொலவியலாப் பரம்பொருளாய்
நிற்கின்ற ஒன்றுக்கு நிறைவிளக்கம் கண்டிங்கு
கற்கண்டுத் தமிழினிலே காட்டிவிடு மாசையிலா?

திருஉறையும் மார்பரிரு திருத்தாட்குச் செய்பணியாய்
இருவினையும் கடப்பதற்கே எழுந்தபெரும் ஆசைபற்றி
வருபக்தி மிகுகம்பன் வரதனவன் தான்விரும்பித்
தருசக்தி கொண்டறையத் தமிழ்வெள்ளம் பாய்ந்ததுவே.


பாரதி கலைக்கழகம். கம்பன் விழா. 12.7.2020. வலைவழி அரங்கம். தலைமைக் கவிதை.

Tuesday, July 21, 2020

விழியெனக் காப்போம் விழித்து



செந்நெற் பயிரிடையே சேரும் களையேபோல்
கன்னற் றமிழிலுமே காண்கின்றேன். – எண்ணி
மொழியே அழியுமுனர் முற்றும் களைந்து
விழியெனக் காப்போம் விழித்து.


       ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithazh 28.1.2019      

செத்த பிணத்திற் கடை




சொத்து சுகமென்று சொல்லிக் கொளுமளவு
எத்தனை உண்டென்றே எண்ணுகிறார்  -  இத்தரையில்
புத்தியும் நற்குணமும் போதா. பொருளற்றார்
செத்த பிணத்திற் கடை

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithazh 20.1.2019