Sunday, July 19, 2009

இந்து சமயத்தில் பொங்கலின் பெருமை

1. உத்தராயனமும் பொங்கல் திருநாளும்

பேரொளியின் பிறப்பிடமாய்க் கதிர்கள் வீசிப்
பெருநெருப்புக் கோளமெனத் தோற்று கின்ற
காரிருளை மாய்த்தொழிக்கும் கதிரோன் தேரின்
காலத்துச் சக்கரங்கள் சுழலும் போது
பாரிதனிற் பகலிரவு நாளென் றோடிப்
பலகோடி ஆண்டுகளாய்ப் பரிண மிக்கும்.
சூரியனின் காலகதி நொடிபி ழைப்பின்
சொல்லரிய மாற்றங்கள் கோடி நேரும்.

பகுத்தமைத்த ராசிகளில் தனுசு நீங்கிப்
பரிதியவன் தன்வழியே மகரந் தன்னில்
புகுநிலையில் தேவர்களுக் கிரவு நீங்கும்
பூமியிலே தைமாதம் பிறக்கு மென்று
வகுத்துரைத்த சான்றோர்கள் அயனம் மாறும்
உயர்வான உத்தரத்தின் தொடக்க நாளை
மிகுத்துரைத்துப் பொங்கலெனும் திருநா ளாக
மேன்மையுறக் கொண்டாட விதித்து வைத்தார்.

பாரதப்போர் பத்தாம்நாள் களத்தி லன்று
பாண்டவரை எதிர்கொண்ட கௌர வர்பால்
வீரத்துச் சிறந்திருந்தும் விதியின் வலியால்
வீடுமரை அருச்சுனனின் சரங்கள் சாய்க்க,
பேருலக நற்கதியை அடைய வேண்டிப்
பெருமைமிகு உத்தரத்தின் அயனந் தோன்றக்
கார்வண்ண நெடுமாலை மனத்தி ருத்திக்
காத்திருந்த சிறப்பறிவர் உலக மக்கள்.

வெகுநாளின் பழையபொருள் கழித்து, வீட்டை
வெள்ளையிலே அலங்கரித்துச் செம்ம ணோடு
புகுவாசல் நிலைதிருத்திக் கோல மிட்டு,
புத்தாடை இடையுடுத்திப் புளகம் மிக்கு,
மிகவிளைந்த புதுநெல்லின் அரிசி கொண்டு
மெல்லியலார் புதுப்பாலில் பொங்க லிட்டு,
சுகவாழ்வு பெறவேண்டிச் சுற்றம் சூழ
சூரியனை வழிபட்டுப் படையல் செய்வார்.

2. இந்திரனும் போகிப் பண்டிகையும்

செங்கமல லக்குமியின் நோக்கம் பெற்று
சிறப்புற்ற இந்திரனின் உலகந் தன்னில்
சங்கமென்றும் பதுமமென்றும் நிதியி ரண்டு,
சாத்திரங்கள் போற்றுகின்ற காம தேனு,
எங்குமிலாக் கல்பதரு, இச்சை தீர்க்கும்
எழில்மிக்க சிந்தாமனி ரத்தி னக்கல்
தங்கியிவை தருகின்ற இன்பந் துய்க்குந்
தன்மையினால் இந்திரனைப் 'போகி' என்றார்.

இந்துமதம் உலகத்தின் இயக்கத் துக்கே
இன்றியமை யாதனவாய்க் கருது கின்ற
அந்தரமும்,நிலமண்ணும், உலகு காக்கும்
அருங்காற்றும், குளிர்நீரும் மற்று முள்ள
செந்தீயாம் அழலுமெனப் பூத மைந்தின்
செயல்வகையைத் தேவர்களின் வேந்த னான
இந்திரனின் கட்டளையால் நிகழ்வ தென்று,
இயம்பிடுத லறியாதார் யாரு மில்லை.

மண்ணுலகி லறஞ்செழிக்க, உயிர்கள் வாழ,
மரஞ்செடிகள் தழைத்திருக்க, நாட்டி லெங்கும்
உண்ணுநீர் வளம்பெருகி வாய்க்கா லோடி,
உழுதவயல் நிலம்பாய்ந்து, உயர்ந்து நின்று
கண்கவரும் பயிர்விளைவைக் கதிர றுத்துக்
களிக்கின்ற உழவர்நிலை காண வேண்டின்
விண்நிறைந்த கருமுகிலா லாகும், அன்றி
வேறுவழி நானிலத்தில் இல்லை யன்றோ?

கங்குலெனில் ஒளிகாக்கும். உலகை என்றும்
கடுவெம்மை வறட்சியெனில் மழையே காக்கும்.
திங்களுக்கு மும்முறையும் மாரி பெய்து
தீங்கின்றி நாடெல்லாஞ் செழிக்க, வெள்ளை
வெங்களிற்று வேந்தனவன் விருப்பா லாகும்.
விளைநிலங்கள் சிறக்குமென நாட்டு மக்கள்
இங்கவற்கு மார்கழியின் இறுதி நாளில்
இயற்றுமொரு பூசையினால் மகிழச் செய்வார்.

3. மாதவனும் மாட்டுப் பொங்கலும்.

பாற்கடலில் பள்ளிகொண்ட பரமன் முன்பு
பாரதப்போர் நிகழுகைக்காய் மண்ணில் வந்து
தோற்றத்தில் ஆய்ச்சியரின் கோகு லத்தில்
துருதுருத்த குழந்தையென வளரு நாளில்
காற்சலங்கை சப்தமிட ஓடி வெண்ணெய்
களவாடி உண்டதெலாங் காட்டு கின்ற
ஏற்றமிகு ஆழ்வார்கள் பாசு ரங்கள்
எடுத்தியம்பும் லீலைகளில் ஒன்று காண்போம்.

காய்ச்சியபாற் பொங்கலொடு நெய்யுந் தேனும்
கற்கண்டுச் சுவைக்கனியும் பலப டைத்தே
ஆய்க்குலத்தார் மழைகருதிப் பூசை யிட்டார்.
அதனாலே இந்திரனுங் கர்வங் கொண்டான்.
வேய்ங்குழலோன் இந்திரனின் அகந்தை முற்ற
வேரறுத்துச் சீர்திருத்த எண்ணங் கொண்டு,
ஆய்க்குலத்தார் பெருவாழ்வு நிலைக்க வேண்டின்
ஆநிரைக்குப் பூசையிட ஆணை யிட்டான்.

தன்பெருமைச் சிறப்பழிந்த தேவர் வேந்தன்
தனக்குற்ற தாழ்ச்சியினாற் கோபங் கொண்டு
மண்மீது வாழுகின்ற மனிதர் மற்றும்
மரஞ்செடிகள் மிருகங்கள் உயிர்க ளெல்லாம்
துன்புறுமோர் நிலைகண்டு மகிழு தற்காய்த்
தொடர்மழையால் கோகுலத்தைத் துயரு ருத்த
விண்படிந்த கருமுகில்கள் முழங்கி மின்ன,
வீழ்வனவாய்ப் பெருமழையைத் தோன்றச் செய்தான்.

பிழைப்பதற்கு ஆயரெலா மொன்று கூடி
பெருமாயன் கண்ணனையே வேண்டி நிற்க,
தழைதருவி னொருமலையை நிலைபெ யர்த்துத்
தன்கரத்துப் பெருங்குடையாய் உயர்த்தி, வீழும்
மழைதடுத்து, உயிரினங்கள் அனைத்து மங்கே
மறைந்தொதுங்க இடமளித்துக் காத்த கண்ணன்
பிழையுணர்த்தி, இந்திரனின் கர்வம் நீக்கிப்
பெருமகிழ்வால் பூவுலகம் பொலியச் செய்தான்.

நீராட்டிப் பசுக்களுக்கு மஞ்சள் பூசி,
நெற்றியிலே குங்குமத்தாற் பொட்டு மிட்டு,
கூராக்கிக் கொம்புகளில் வர்ணம் பூசி,
குவிகின்ற பூணிட்டு, மாலை சூட்டி,
சீராக ஒலியெழுப்பும் மணிகள் கட்டிச்
சிங்காரம் பலசெய்து பொங்கல் வைத்து,
ஏராள மானவர்கள் கூடி யன்று
எடுத்திட்ட பூசையின்று மட்டுப் பொங்கல்.

4. காப்புக் கட்டுதல்

தோற்றத்தால் நோக்குகின்ற திசையால் மற்றும்
தன்னுடைய வாகனத்தா லுடையா லெல்லாம்
மாற்றங்கள் விளைவித்துப் பீட ழித்து
மன்னுலகில் பஞ்சத்தைத் தோற்று விக்கும்
ஏற்றமிலாத் தேவதையாம் சங்க ராந்தி
ஏறிட்டுத் தம்வீட்டை நோக்கா தேக
நாற்றமிலாப் பீளைமலர் வேம்பின் இலைகள்
நன்மைக்காய்க் கூரைகளிற் கட்டி வைப்பர்.

5. வாழ்த்து

உண்டான மதநூல்கள் உரைப்ப தெல்லாம்
உணராத பலருண்டு இந்த நாட்டில்.
பண்டிகையாய்க் கொண்டாடும் பொங்கல் நாளைப்
பற்றியொரு தனியியக்கம் உண்மை மாற்றிக்
கண்டபடி பேசிவரு மிந்த நாளில்
கவிமன்றம் முன்வந்து போட்டி வைத்துத்
தொண்டாற்றும் செயலறிவேன். இறையை நானுந்
துதிக்கின்றேன் உமக்கருள வேண்டு மென்றே!


(காஞ்சிபுரம் இந்து தமிழ்க்கவிஞர் மன்றம்- 1984- பொங்கல் திருநாள் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றது.)

கலவையில் நடந்த விழாவில்,காஞ்சி ஆசார்ய சுவாமிகள் மூவரையும் ஒன்றாகத் தரிசித்துப் பாடிய வெண்பா.

தோற்றத்தைக் காண்போர் துயர்விலகும், ஆசிபெறின்
கூற்றை விலக்கிடவுங் கூடுமருள் நோக்கொன்றே
கோள்சாரம் மாற்றிக் குறை தீர்க்கும். அம்மூவர்
தாள்பணியு மெந்தன் தலை.