Monday, January 22, 2018

’செந்தமிழ் நாடெனும் போதினிலே

’செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
   தேன்வந்து பாயுது காதினிலே’
சுந்தரமாய்த் தமிழ்ச் சொற்களிலே – சுவை
   சொட்டிடப் பாரதி பாடிவைத்தான்
மந்திரம் போன்றநல் வார்த்தைகள் – அவை
   மக்கள் எழுச்சியைத் தூண்டினவே!
முந்தைய நாள்நிலை இன்றிலையே – அது
   முற்றிலும் வேறென வாயுளதே!

சொந்தமாய் ஆயிரம் பேர்களின் – பேரினில்
   சொத்துக் குவித்திடும் நோக்கமுடன்
வந்தவர் தேர்தலில் நின்றிடினும் – அவர்
   வென்றிட வாக்கினை நாமளிப்போம்.
முந்தைய நாளினில் வந்தவரால் – நாடு
   முன்னிலை எய்திய துண்மையன்றோ?
சிந்தையில் ஆயிரம் பொய்யுடையோர் – இங்கு
   செய்யும் அரசினில் நன்மையுண்டோ?

செந்தமிழ் வாழ்ந்திட வந்தமென்றார் – வந்து
   சேர்ந்தவர் தம்வளம் தான்வளர்த்தார்.
முந்தைய நாளுள நீர்நிலைகள் – இங்கு  
   முற்றும் அழிந்திட விட்டுவிட்டார்.
இந்தநன் நாடிது கல்வியினில் – முன்பு
   இருந்த நிலையினிற் தாழ்ந்ததன்பின்
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இனி
   தேன்வந்து காதினில் பாய்ந்திடுமோ?


தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம். பாரதி விழா. 3.12.2017