Wednesday, September 09, 2009

பாரதி இன்று வந்தால்


(பாரதியாக மாறிப் பாடியது)



ஒளிரு கின்ற தீபமாக உயர்ந்து பார்க்க எண்ணினேன்
இளைய பார தத்தினாய் எங்கு சென்று வீழ்கிறாய்?
விளையு மென்று நாற்றுவிட்டு நட்டு வைத்த பயிரெலாம்
களைக ளாக முட்களாகக் காண நெஞ்சு நோகுதே!

திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானமெய்தி வாழ்வ மென்று பாடினேன்.
திறமை யென்று ஏதுமில்லை தீமை யொன்றே காண்கிறேன்.
தேர்ந்த கல்வி ஞானமொன்றும் தேவை யில்லை என்கிறீர்!

சாதி சமய மென்றுநீங்கள் சண்டை வேண்டி நிற்பதேன்?
மோதல் தேடி அலைவதிங்கு மொத்த மக்கள் நோக்கமோ?
ஆதி வேதம் காட்டுகின்ற அன்பு என்று நீங்குமோ
நாதி யற்றுப் போகுமன்று நாடு கண்டு நோகுவீர்!

வங்க நீரின் மிகையினால் வறண்ட மைய மண்ணெலாம்
பொங்கு வளமை கான்பதென் போன ஜன்மக் கனவுதான்.
இங்கு நதிகள் இணைவது என்று நிகழ்வ தாகுமோ?
எங்க ளிளைய ராற்றலால் எய்த லரிது மாவதோ?

ஏழ்மை தாழ்மைப் பேயெலாம் எளிதிற் தீய்ந்து மாயவும்,
ஊழ லற்ற ஆட்சிதன்னில் ஊரும் நாடு முயரவும்,
ஆழ்ந்த ஞான மெய்திமக்கள் அன்பு கொண்டு வாழவும்,
தாழ்ந்து பாதம் வேண்டினேன். தருவ தாக நீயருள்.
.....ஓம் சக்தி!......


நம் உரத்த சிந்தனை. செப்.2006

Sunday, September 06, 2009

ஒரு பெரும் செயல் செய்வோம்

வேத கால மாதியாக வேறு வேறு என்றுநூறு
சாதி கொண்ட மனிதரன்பிற் சேர்ந்து வாழ்ந்த தில்லையா?
போதி தந்த ஞானதீரன் புத்தன் வாழ்ந்த நாட்டினர்
மோதி வீழ்தல் மாற்றிமீண்டும் மனித நேயம் காணுவோம்

ஏழை வாழ்வு என்னவாகும் என்ற எண்ண மின்றியே
ஊழல் லஞ்சம் என்று,ஊரைக் கொள்ளை கொண்டு தின்கிற
பாழும் ஆசைப் பேய்க ளிங்கு பாதம் நாட்டி யாடுதே!
கோழை யென்ன நாமிருந்தால் கொன்று தீர்க்க லாகுமோ?

காதல் மதுவின் மீதுகொண்டு கற்ற கல்வி பண்பெலாம்
போதை கொண்டு போகவிட்டுப் பொருளும் போக நிற்பவர்
மீத முள்ள வாழ்விலேனும் மீண்டு வருதல் வேண்டிநாம்
ஏதும் செய்ய முயன்றிலோம். எங்கு நாடு போகுமோ?

மெள்ள மெள்ள நீர்மைமாறி மேனி வாடும் பூமியின்
வெள்ள மோடிச் சீரழிக்கும் வேறு மாநி லங்களில்
உள்ள நீரின் பாதைமாற்றி யோடு மாறு செய்யவே
உள்ள முள்ளோர் ரொன்றுசேர ஊரும் நாடு முயருமே!

காலை நேரம் வீதியோரம் காணும் மனித எச்சமும்
சாலை மீது வாகனங்கள் சீறி யோடும் சத்தமும்
ஆலை வீசு நச்சுவாயு அச்ச மென்று மொத்தமும்
நளை யேனும் மாறவேண்டும் நாம்மு னைந்து மாற்றுவோம்

தின்று தின்று தூங்கிநாளைத் தொலைத்து வாழ்த லுண்மையில்
பன்றி வாழும் வாழ்வென்று பகர்தல் கேட்ட தில்லையோ?
ஒன்றி லேனும் வென்றுகாட்ட உறுதி யோடு முயலுவோம்.
என்றும் பூமி மீதுமக்கள் ஏற்ற நின்று வாழுவோம்.

(பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு நடத்திய அமரர். கவிமாமணி நா.சீ.வ நினைவுக் கவிதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.)