Thursday, May 17, 2012

எதைச் சொல்வேன்?

என்மகனின் மகன்செய்கை ஒன்றி ரண்டா?
எத்தனையோ உண்டெதனைச் சொல்வ திங்கு?
மென்பஞ்சுப் பாதங்கள் தரைந டந்தால்
மிகநோகும் என்றெண்ணித் தூக்கிக் கொள்வேன்.
என்கையிற் சுமந்துகொண் டிருக்கும் போது,
ஏதேனும் பிறர்பேசக் கேட்டாற் போதும்,
தன் மழலை கேட்பதற்கென் முகந்தி ருப்பும்.
தளிர்விரல்கள் பட்டவுடன் மெய்சி லிர்க்கும்.


என்மகனின் மகன்செய்கை ஒன்றி ரண்டா?
எத்தனையோ உண்டெதனைச் சொல்வ திங்கு?


உண்ணுதற்கே அடம்பிடித்து ஓடி யோடி,
ஊட்டுகின்ற அம்மாவை அழவே வைப்பான்.
தின்னுமொரு மிட்டாயின் இனிப்புக் காகத்
திண்ணைக்குத் தேடிவரும் சிறுகு ழந்தை,
'இன்னொன்று தா'என்று முன்னே வந்து
இதழ்விரித்த தாமரையாய்க் கையை நீட்டும்.
கண்ணெதிரே கெஞ்சுகிற காட்சி கண்டால்
கல்நெஞ்சங் கூடவங்கு கரைந்தே போகும்!


என்மகனின் மகன்செய்கை ஒன்றி ரண்டா?
எத்தனையோ உண்டெதனைச் சொல்வ திங்கு?

No comments: