Friday, September 27, 2013

ஏழு முதல்...


பாலனாய் ஏழினில்
பால்நிறக் கோலியொடு
பாதை யோரமே திரிந்தேன்.

பார்ப்பவர் ஏசுவது
பாராது நாள்முழுதும்
பம்பரம் சுழற்றி நின்றேன்.

பாலனெனும் நிலைமாறிப்
பதினைந்தி லேதிரைப்
படங்களை ரசித்தி ருந்தேன்.

படிப்பினைப் பசியினைப்
பாராமல் எந்நாளும்
பாடலில் லயித்தி ருந்தேன்.

காலமது இனுமோடிக்
கடந்தபின் முப்பதில்
காதலே பெரிதென் றிருந்தேன்.

கைநிறையப் பொருள்வேண்டிக்
களைப்பென்று பாராது
கடுமையாய் உழைத்தி ருந்தேன்.

கோலியொடு பம்பரம்
காதல்பொரு ளாசையெலாம்
காணாது மறைந்த தின்று.

கடவுளது சந்நிதிமுன்
கைகூப்பி நிற்கையில்
கணநேர நெகிழ்வு நன்று.


பாரதி கலைக்கழகக் கவியரங்கம். 15.8.2012

Monday, September 23, 2013

சித்திரை கொண்டுவரும் சீர்.



விதிதன்னை நொந்து
விலைவாசி ஏறக்
கதியின்றித் துன்பமுறும் காலம்.- புதிதாக
இத்தரையில் இப்போ(து)
எதுவானால் தானென்ன
சித்திரை கொண்டுவரும் சீர்?

 வெண்பாப் போட்டியில் 3ம் நிலையில்
 தேர்வு பெற்ற வெண்பா.  அமுதசுரபி ஏப். 2012