Monday, November 28, 2016

சிலம்பில் மாதவன்

( சிலப்பதிகாரச் சிந்தனைகள்)



வடவரையை மத்தாய் வைத்து
   வாசுகியைய்க் கயிறாய்க் கொண்டு
கடலன்று கடைந்த கையைக்
   கடைகயிறால் யசோதை கட்ட,
கடல்வண்ணன் கண்ணன் அங்கு
   கட்டுண்ட பெற்றி ஆய
மடமகளின் குறவைக் கூத்து
   மாதவனின் பெருமை சாற்றும்.


மூன்றடியால் உருவ ளர்ந்து
   மூவுலகு மளந்த சீரும்
கான்போந்து தம்பி யோடு
   கடல்கடந் திலங்கை வென்ற
வான்புகழும் மற்றும் கஞ்ச
   வஞ்சகனைக் கொன்ற தூஉம்
போன்றுவரு பிறவு மெல்லாம்
   பெருமானின் விளையாட் டன்றோ?


 கண்ணிரண்டு பெற்ற பயனக்
      கரியவனைக் காணல்; பெற்ற
  எண்ணரிய செவியி ரண்டும்
      எமக்கவனின் புகழைக் கேட்க;
  கொண்டதொரு நாவுங் கூடக்
      கௌரவர்பால் தூது சென்ற
  கண்ணனையே பாட வென்ற
      கருத்துரைகட் கீடே இல்லை.


செவிநுகர் கனியே யென்னச்
     சிலப்பதி காரந் தன்னைக்
  கவினுறு நூலாய்த் தந்த
     கவிஞராம் இளங்கோ கொண்ட
  புவியுள வரையில் நிற்கும்
     புண்ணியப் புகழைச் சொல்லிக்
  கவியவர் திருப்பா தங்கள்
     கரங்களால் வணங்கு கின்றேன்.


பாரதி கலைக் கழகம்.சிலப்பதிகார விழா.17.5.2009  
வாழ்க வளமுடன் அரங்கம். நங்கநல்லூர். சென்னை.