Friday, May 29, 2020

திருவருள் பெற்று இன்புறுவோம்.





’ஆ’தனை உருவைக் கொண்டு
    ’ஆ’வென்றே நினைக்கும் போது
வேதனை! உண்ணப் பெற்ற
     வெறும்வைக் கோலும் புல்லும்
போதிய பரிசென் றெண்ணும்.
     பொதுவினில் மனித ருக்கும்
ஊதுமூன் தான்’தான்’ என்றால்
     உணவுதான் பெரிதென் றாகும்

உடலையே ஆன்மா வாக
     எண்ணுமப் பிழையின் நீங்கி,
உடலிது வேறு உள்ளே
     உறைகிற ஆன்மா வேறாய்
திடமுடன் அறிந்து கண்ட
     தெளிவினில், உடலில் மற்றும்
தொடர்புள தான வற்றில்
     தொற்றுபற் றொழிய வேண்டும்.

தொற்றுபற் றொழியும் போது
     துயரெலாம் விலகிப் போகும்.
உற்றவன் பரமன் அவனின்
      உடைமைநாம் என்று ணர்ந்து,
முற்றவும் தாழ்ந்து நின்று
      முறைமையிற் பாதம் பற்றி,
நற்றவத் தொண்டு பூணும்
      நலமதை வேண்டு வோமே.


தேவகான இன்னிசைச் சங்கம், நன்மங்கலம். சென்னை. 2018