Friday, January 04, 2019

சித்திரக் கவி: சங்கு பந்தம்




தமிழே! வடிவத்திற் சங்காகி வா!

நிகர்த்துளதா யின்னுமொன்று நல்லதாவ தில்லா
வகையுளைநீ வண்டமிழே! உன்றனையே உள்ளி
முடிதாழ்த்தி வேண்டுமென்பா முந்துற்றே தங்கு
வடிவத்திற் சங்கெனவே வந்து.




இன்னிசை வெண்பா.

மொத்த எழுத்து 73 ல் சந்தி எழுத்து
து, வ, உ, ற் ஆகிய 4 ஆக, 69 எழுத்தில் முடிந்தது.


சந்தவசந்தக் குழுமத்தில் எழுதியது.


Tuesday, November 27, 2018

சித்திரக் கவி: இரட்டை நாகபந்தம்.


                        உள்ளம் கொள்ளை போனது


உரலேறி நின்றே உறிநாடி உந்தி
விரலூடு வெண்ணெய் வழிய – உருவால்
களவாகு தென்றே கருதாது முந்தி
உளமேக லுண்டோ உவந்து.




இருவிகற்ப நேரிசை வெண்பா.

நாகம் ஒவ்வொன்றிலும் 25. உடன்
இடையே தனிச்சொல் 4 ம்
சேர மொத்த எழுத்து (25x2) + 4 = 54.
7,14,20, சந்தி எழுத்து 3. ஆக 51 எழுத்தில் முடிந்தது.

சந்தவசந்தக் குழுமத்தில் எழுதியது.

Sunday, November 18, 2018

சித்திரக் கவி: மணி மாலை பந்தம்



                                                         மலராகிச் சேர:

ஈசனவன் பாதமதில்
நேசமொடு சேர்ந்திடுமோ
ராசையுளன் பூசையிடல்
வசமல ராவதற்கே.




வஞ்சித்துறை.
39 எழுத்துகள். மாலை இருபுறமும் (2 * 17) மணிகள்.
பதக்கம் 5 மணிகள், ஆக மொத்தம் 39.   சந்தி எழுத்து
ஒன்று,  ஆக,  38 எழுத்தில் முடிந்தது.

சந்த வசந்தம் மின் குழுமத்தில் எழுதியது

Friday, October 12, 2018

பாரதி சுராஜ் மறைவு.


  

குவியும் பொருளில் மனமின்றிக்
   கொள்கை வழியில் நின்றனையே!
செவியின் சுவையே பெரிதென்று
   செந்தமி ழமுதைப் பருகினையே!
கவிதை வரியில் நயங்கண்டுன்
   கண்கள் விரியும் புன்னகையாய்.
புவியில் அதைவிட வேறொன்று
   பெறுதற் குரிய விருதிலையே!

நங்கை நல்லூர் எனும்போதுன்
   ஞாபகம் வந்தெனை ஆட்கொள்ளும்.
பொங்கிப் பெருகும் உணர்வோடு
   புலமை மிகவே உடையோராய்
எங்கே யேனும் பாரதியை
   எவரோ ஒருவர் பேசிடினும்
தங்கள் நினைவே வந்துமனம்
   தவிக்கும் படியாய் ஆகிவிடும்.

நூறின் மேலாய் வாழ்கவென
   நூலோர் வாழ்த்தும் போதுனது
நூறின் நிறைவுத் திருநாளென்
   நினைவிற் றோன்றி மகிழ்வுதரும்.
ஆறே ழாண்டே உளதின்னும்
   அதற்குள் ஏனோ அவசரமாய்ப்
பாரின் நீங்கிப் போயினையே!
   பாதக மேதும் செய்தோமோ?

பாரதி கலைக் கழகம், பாரதி சுராஜ் இரங்கற் கூட்டம். வியாபாரிகள் சங்க மண்டபம், மூவரசன் பேட்டை. சென்னை. 25.8.2018


Wednesday, August 08, 2018

கலைஞர் மு. கருணாநிதி மறைவு




சூழு மொளிநீங்கிச் சூரியன் போய்மறையப்

பாழு மிருள்சூழப் பார்க்கின்றோம். - வாழும்

வரையிற் கலைஞ ரொளிர்ந்து மறைந்தார்

தரையிற் புகழொளிரத் தான்.





(கலைஞர் மு. கருணாநிதி மறைவு- 7.8.2018)

Monday, July 30, 2018

அவனுடைய அருளாலே…




கல்நெஞ்சத் தொருதனியன்
     கள்ளத்தைக் கைக்கொண்டோன்
நல்லதனை இதுவரையில்
      நாடாத மதியனெனை
வல்வினைகள் போயொழிய
      வாய்ப்பொன்றை நாடுவையேல்
எல்லையிலாப் பரம்பொருளை
      எண்ணத்தில் இருத்தென்றார்.

பொல்லாத புலனைந்தால்
       பொருந்தாத மனமலத்தால்
எல்லா அழுக்குக்கும்
       இடமாகித் தோல்போர்த்து
அல்லலுறும் பிறவியிதை
       அறுத்தெறிவாய் நீயென்று
சொல்லாலே வேண்டியவன்
       சுடரடிகள் தொழுகின்றேன்.

கரும்பாகித் தேனாகிக்
      கறந்தபுதுப் பாலாகி
விரும்புகிற பிறவாகி
      ஊறுகின்ற பேரின்பத்
திருவாகி என்றுமுளம்
       தெவிட்டாத படியான
உருவாகிச் சிந்தையிலே
       உறைந்துளையோ? தேடுகிறேன்.

அவனியிலே பிறந்துழல்வோர்
        அல்லலெலாம் நீக்குகின்ற
சிவனவனோ தேர்ந்தவரின்
        சிந்தையிலே வந்துநின்றான்.
புவனத்தே திருவாத
        புரியாரின் வழிகொண்டே
அவனுடைய அருளாலே
        அவன்தாளை வணங்குவனே!

சிவநேயப் பேரவை. வாழ்க வளமுடன் அரங்கம். நங்கநல்லூர். 10.2.2018.

Thursday, April 19, 2018

நூலகமே உன் அகம்


யான்தோய்ந்த தமிழ்நூல்கள் பலவற் றுள்ளும்
    எனைக்கவர்ந்த நூலென்றால் புறநா நூறே!
தான்பெற்ற பிள்ளையெலாம் பயனே இன்றித்
    தறுதலையா யாகாமல் உலகு போற்றும்
சான்றோராய் யாக்குவதைத் தந்தை தன்னைச்
    சார்ந்ததொரு கடமையென அந்நூல் சொல்லும்.
சான்றோராய்க் கற்போரை ஆக்கும் நூல்கள்.
    சரிநிகராய்த் தந்தையென வீட்டி லுள்ளார்..

வனவாசம் செலும்போது ராமன் கூட
    உடன்பிரியா லக்குவனும் சென்ற தேபோல்
தணிக்கைக்கு வெளியூர்நான் செல்லும் போது
    தரமுள்ள புத்தகமும் பயணங் கொள்ளும்.
மணிக்கணக்காய் உடனிருந்து பொழுது போக்கி
    மகிழ்விக்கத் தம்பிகளாய் நூல்க ளுண்டு.
எனதகத்தில் தனியறையே அவர்கட் குண்டு.
    எப்போதும் தம்பியரின் துணையு முண்டு.

வருகின்ற பேர்படிக்க வேண்டு மென்று
    வாங்குகிற தினத்தாள்கள் வீட்டி லின்றிப்
பெரும்போது பக்கத்து வீட்டி லேயே
    பகலினிலே கழிக்கின்ற அண்ண னாகும்.
பருவப்பெண் சிரிக்கின்ற அட்டை போட்டு
    பலமாத வாரஇதழ் வருவ யெல்லாம்
உருவத்தை யலங்கரிக்க வகைவ கையாய்
    உடையுடுத்தி நிற்கின்ற தங்கை யாகும்.

நன்னெறியைப் பக்திதனைப் புகட்டு கின்ற
    நலமிக்க நூற்றொகுப்பா யொருத்தி யுண்டு.
தன்னுலகு சமயலறை என்றே கொண்டு
    தாயென்ற பெயரோடு வாழு  கின்றாள்.
இன்னுமுள பழையஇதி காச மெல்லாம்
    இருக்கின்ற பாட்டியெனில் சரிதா னென்பாய்.
உன்னகத்து மிவர்போல உண்டு நன்ப!
    உயர்ந்ததொரு நூலகமே வீட்டி லுண்டே!

மதுரை மாவட்ட மைய நூலகம். நூலக விழா.24.8.2003.


Friday, March 23, 2018

கோவிந்தனைத் துதிப்பாய்



குன்றுக் குடைப்பிடித்த
கோவிந் தனையேநீ
என்றுந் துதித்தே இறைஞ்சிடுவாய்
– திண்ணமவன்
இன்னல் வருமுன்
இடையர் குலங்காத்த
தன்னொப்ப ரில்லா தவன்.

Sunday, February 18, 2018

உச்சியிலே வைப்பான் உனை



நச்சரவு தானணிந்தான் நங்கைக்குப் பாதியென
உச்சிமுதற் பாத முடலீந்தான் – அச்சிவனை
இச்சையுடன் போற்றியே என்றுந் துதிட்டால்
உச்சியிலே வைப்பான் உனை.

அச்சந் தவிர்க்க! அருள்வேண்டின் பாபங்கள்
மிச்சமின்றித் தாமழியும் மேன்மைவரும் – மெச்சுபுகழ்க்
கச்சியே காம்பரனோர் கற்பகமே போன்றருளி
உச்சியிலே வைப்பான் உனை.

குச்சி லுரைந்தாலும் கொண்டதொழில் உண்டவரின்
எச்சில் துடைப்பதுதான் என்றாலும் – நிச்சயமாய்
மெச்சியே காம்பரனின் மேன்மைகளை நெஞ்சிருத்த
உச்சியிலே வைப்பான் உனை.


சிவநேயப் பேரவை. வாழ்க வளமுடன் சிற்றரங்கம்.6.1.2018 கவியரங்கம். 

Monday, January 22, 2018

’செந்தமிழ் நாடெனும் போதினிலே

’செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
   தேன்வந்து பாயுது காதினிலே’
சுந்தரமாய்த் தமிழ்ச் சொற்களிலே – சுவை
   சொட்டிடப் பாரதி பாடிவைத்தான்
மந்திரம் போன்றநல் வார்த்தைகள் – அவை
   மக்கள் எழுச்சியைத் தூண்டினவே!
முந்தைய நாள்நிலை இன்றிலையே – அது
   முற்றிலும் வேறென வாயுளதே!

சொந்தமாய் ஆயிரம் பேர்களின் – பேரினில்
   சொத்துக் குவித்திடும் நோக்கமுடன்
வந்தவர் தேர்தலில் நின்றிடினும் – அவர்
   வென்றிட வாக்கினை நாமளிப்போம்.
முந்தைய நாளினில் வந்தவரால் – நாடு
   முன்னிலை எய்திய துண்மையன்றோ?
சிந்தையில் ஆயிரம் பொய்யுடையோர் – இங்கு
   செய்யும் அரசினில் நன்மையுண்டோ?

செந்தமிழ் வாழ்ந்திட வந்தமென்றார் – வந்து
   சேர்ந்தவர் தம்வளம் தான்வளர்த்தார்.
முந்தைய நாளுள நீர்நிலைகள் – இங்கு  
   முற்றும் அழிந்திட விட்டுவிட்டார்.
இந்தநன் நாடிது கல்வியினில் – முன்பு
   இருந்த நிலையினிற் தாழ்ந்ததன்பின்
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இனி
   தேன்வந்து காதினில் பாய்ந்திடுமோ?


தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம். பாரதி விழா. 3.12.2017

Friday, December 29, 2017

வாழ்க்கைச் சுவடுகள்

(தரவு கொச்சகக் கலிப்பா)


மறைந்து போனவை:

உலர்ந்துளதோர் தரைநடந்த உள்ளங்கால் ஈரத்தில்
மலர்ந்தசில தடங்காய்ந்து மறைந்தழிந்து போவதுபோல்
சிலநிகழ்வுக ளடையாளம் சிந்தையிலும் நில்லாமல்
இலையாகிப் போனவைகள் ஏராளம் வாழ்விலுண்டு.

உள்ளத்தில் பதிந்தவை:

இளவயதில் தந்தையுடல் ஈமத்தீ சுட்டகாட்சி
அளவற்ற அன்பினளாம் அன்னையவள் மறைந்ததுக்கம்
பளபளத்த புதுவண்டி பாதையிலே பூட்டிவைத்தும்,
களவுக்குக் கொடுத்ததிவை காலமெலாம் துன்புறுத்தும்.

பத்திரிகை அச்சேறிப் பார்த்திட்ட முதற்கவிதை,
முத்திரை பதித்தவந்த முதற்சிறப்புச் சொற்பொழிவு,
புத்தகமாய் முதல்தொகுப்பு, புகுந்தநல மணவாழ்வு,
முத்தெனவே இருமகவு மிவைமகிழ்வின் அடையாளம்.

உடலிற் காண்பவை:

மருத்துவர் சிகிச்சைக்காய் மனமொப்பி உடல்கிழித்து,
பொருத்தியபின் புண்ணுலர்ந்து பொருக்குதிர்ந்த சிலவடுக்கள்.
வருத்துமம்மை நோய்பார்த்து வாய்த்திருந்த கொப்புளங்கள்,
நிறுத்தியது சென்றுவிட்ட நீங்காத தழும்புசில,

முன்னந்தலை வழுக்கையுடன் முடிமுழுதும் நரைத்தோற்றம்,
கண்களிலோ வெள்ளெழுத்துக் கண்ணாடி அணிந்தநிலை,
முன்னர்போல் நடமாட முடியாத மூட்டுவலி,
இன்னுமுள அத்தனையும் எடுத்தியம்ப இயலாது.


திருவள்ளுவர் இலக்கிய மன்றம், வாணுவம்பேட்டை, 12.8.2017.

Wednesday, November 29, 2017

வெடிகுண்டு



சாப்பிட இனிப்பு மிக
    சந்தோஷ மாயணிய,
பூப்போட்ட மேற்சட்டை
    போதா திவையென்று
கேப்புசுடத் துப்பாக்கி
    கேட்பா னெனவாங்கி
கூப்பிட் டனுப்பியதும்
    குதுகலித் தோடிவந்தான்.


வேண்டா மிவையெனக்கு
    வெடிக்கின்ற அணுகுண்டு
வேண்டுமெனக் கேட்டதுமே
    விதிர்விதித்துத் தடுமாறி
ஆண்டைந்து நிறைவதற்கே
    ஐந்தாறு மாதமுள்ள
வாண்டுதந்த அதிர்ச்சியிலே
    வாயடைத்துப் போனேன் நான்

பாரதி கலைக்கழகம், அழ. வள்ளியப்பா  நினைவுக் கவியரங்கம். வம்பர் 2014

Monday, November 27, 2017

நயமாய் உரைத்தலே நன்று



எதெதையோ பேச
எதிரிருப்போர் நொந்து
விதியென்றே கேட்டிருக்க
வேண்டாம்.
- எதையும்
சுயமாய் முயன்று
சுவைகொஞ்சம் சேர்த்து
நயமாய் உரைத்தலே
நன்று.


நம் உரத்த சிந்தனை, டிசம்பர் 2012

Wednesday, September 27, 2017

இன்றைய நாள் உன் கையில்



காலம் வருமெனக் காத்திருந்து- ஓடும்
கைகளின் ரேகையைப் பார்த்திருந்தால்
கால னழைத்திடு நாளதன்முன்- நீ
கண்டிடல் வெற்றியை சாத்தியமோ?


பின்னொரு நாளினில் நன்மையுண்டு-என்றே
பேசிடும் சோசியம் விட்டுவிடு
இன்றைய நாளுந்தன் கையிலுண்டு- நீ
இன்றே செயல்பட முந்திவிடு.


தூங்கி யெழுந்திடத் தாமதமாகிடில்- வானில்
தோன்றும் விடிவெள்ளி என்னசெய்யும்?
ஏங்கி அழுவதை விட்டுவிட்டு- நீ
எழுந்து நடந்திடு வெற்றிகிட்டும்.

Thursday, September 21, 2017

வாழ்வதற்கே வந்தோம்


உற்றதொரு தோல்வி
உடனே மறந்தொழிய
வெற்றியென முன் நினைத்த வேறொன்றைப்
-பற்றிக்கொள்
தாழ்வுதரு துன்பத்
தடைவிலக்கு.
தாரணியில்
வாழ்வதற்கே வந்தோம்நாம்
வாழ்.

Wednesday, August 23, 2017

வளரவும் வழி செய்வோம்



வாழியசெந் தமிழென்று வார்தைசொலல் எளியதுதான்
   வாழ்த்துக்கு வலியுளது வழக்கிங்கு வைக்கவில்லை.
ஆழியது சூழ்ந்துள்ள அத்தனைமண் பரப்பினிலும்
   ஆதிமுதல் பேசுமொழி ஆயிரங்கள் உளதெனினும்
ஊழிபல வானபினும் உயர்ந்தநிலை மாறாத
   ஒருமொழிநம் தமிழென்று உரைத்தநிலை இன்றில்லை.
வாழியசெந் தமிழென்று வாழ்த்துவதோ டல்லாமல்
   வளர்தற்கும் நாம்கொஞ்சம் வழிசெய்ய வேண்டுமையா.


தொல்மொழியீ தென்பதனால் தொண்டுகிழ மானதுவோ?
   தள்ளாடும் நிலையிலன்றோ தமிழினைநான் காண்கின்றேன்.
நல்லதமிழ்க் கதையெழுத, நாடகங்கள், கவிதைசெய
   நல்லதிற னுடையவர்கள் நம்மிடையே பலருண்டு.
இல்லையெனச் சொல்லவில்லை என்றாலும் இன்றுவரை
   என்தமிழில் அறிவியலை எத்தனைபேர் நூல்செய்தார்?
சொல்லாக்கம் போதாது. சொற்குவியல் பொருளோடு
   சேரட்டும் புதியனவாய். சிலரேனும் முயலட்டும்.

விருதுண்டு கவிதைக்கு வெறுங்கதைக்குப் பரிசுண்டு
   விஞ்ஞான நூலெழுதும் வீண்வேலை எதற்கென்று
கருதியிங் கறிஞரெல்லாம் கைகட்டி நிற்கின்றார்.
   கற்பனைக்கே பாராட்டு கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
இருமொழியிற் புலமையுளோர் இன்னொன்றில் சிறந்ததனை
   இங்குள்ளோர் அறிவதற்கும் இன்றமிழில் தரவேண்டும்.
பெருமளவில் மொழிமாற்றப் பேரறிஞர் வரவேண்டும்.
   பிறமொழியோர் நமைப்புகழும் பெருமையினைப் பெறவேண்டும்.


வாழியசெந் தமிழென்று வாழ்த்துவதோ டல்லாமல்
   வளர்தற்கும் நாம்கொஞ்சம் வழிசெய்தல் நலமென்பேன்.




பாரதி கலைக்கழகம். 29.1.2014

Wednesday, June 28, 2017

உறவுக்குள் ஒற்றுமையைக் காண்



நிறைகளையே தேடிமுன்
நெஞ்சில் பதிந்த
குறைமறந்து நேசிக்கக் கற்று
- முறையாய்ப்
பிறரை நடத்திப்
பெரியோரைப் பேணி
உறவுக்குள் ஒற்றுமையைக் காண்.


ஈற்றடிக்கு எழுதியது. வெண்பா விருந்து- 7. உரத்த சிந்தனை ஜனவரி 2013. 

Sunday, May 28, 2017

இல்லையென்றதே இனியது


இதுநாள் எனவே ஒருநாள் குறித்தே அதுதவறா
ததுவாய் இருந்து செயலாற் றிடுவோர் தகவுடையோர்
எதுநாள் எனவே புரியா தபடி பினரெனிலோ
அதுபின் வருநா ளெதிலா வதிலும் நடந்திடுமோ?

இன்றென வாகிய நாள்நாளை நேற்றா கிடுதலைநாம்
நன்றாய் மறுநாள் எளிதா யறிந்திடல் கூடுமன்றோ?
இன்றென நாளையும் மாறிய பின்னரும் நாளைவரும்.
என்றென யாரு மறியா தொருதின மிங்குளதோ?

ஆடுகள் வாங்கிட வேண்டிய தோர்தொகை சேர்ந்திடவே
நாடும் பழகிய நட்பினன் காரிக் குதவிடத்தான்
தேடும் பணியினை ஏற்றவ ளாக,  தெரிந்தவரில்
பாடுந் திறனுடை அவ்வை சிலரை அனுகினளே.

வாதவன் 'பின்னர்வா' வென்றபின், வத்தவன் 'நாளை'யென்றான்
யாதவன் 'யாதொன்று மில்லை'யென் றன்றே இயம்பிவிட்டான்.
வாதவன் பின்னரின், மற்றுள வத்தவன் நாளையினும்
யாதவன் இல்லையை அவ்வை இனிதென் றுரைத்தனளே!



வாதவர்கோன் பின்னையென்றான் வத்தவர்கோன் நாளையென்றான்
யாதவர்கோன் யாதொன்றும் இல்லையென்றான் - ஆதலால்
வாதவர்கோன் பின்னையினும் வத்தவர்கோன் நாளையினும்
யாதவர்கோன்   இல்லை இனிது. -              (ஔவை)


பழையனூர் காரிக்கு உதவமுயன்ற தன் அனுபவத்தை, ஔவை, சேரமானிடம் சென்று சொன்னது. (தமிழ் நாவலர் சரிதை)


பாரதி கலைக் கழகம் ஔவையார் விழா. வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம். மூவரசன் பேட்டை.   25.2.2017



Thursday, May 11, 2017

ஒரு விருத்தச் சிலம்பு



வருங்காலன் என்றொருபொற்
  கொல்லன் வந்தே
    உரைபொய்யில் தன்குற்றம்
      மறைத்துப் போக்க,
அருந்துணையை ஆராயா
  தழித்த வேந்தன்
    அவையினிலே சிலம்புடைத்து
      நீதி கேட்ட
பெருந்துயராள் கண்ணகியின்
   வழக்கா லாங்கு
     பிழையுணர்ந்த பாண்டியனோ
       தானும் மாண்டான்.
அருங்கற்பும் ஊழ்வலியும்
   வென்று நிற்க
     அரசியலிற் பிழைக்கறமே
       கூற்றாய்க் கண்டோம்.

Tuesday, April 25, 2017

காதலே வாழ்வின் கரு


அன்புபண் பென்றும்
அறத்தைப் பயனென்றும்
முன்பே குறள்முடிவு கூறிற்று
 - அன்புதனின்
தீதில் வழிய துயிர்நிலை யென்பதனால்
காதலே வாழ்வின் கரு.


ஈற்றடிக்கு எழுதியது. தமிழரின் மனிதநேயம். பிப்ரவரி 2010

Tuesday, April 11, 2017

அமரர் நா.சீ.வரதராஜன்



சொல்லும் பொருளும் புதிதாக்கிச்
   சுவையோ டுணர்வைத் தொடுமாறு
வல்லமை மிக்க நா.சீ.வ
   வழிவழி வந்த மரபுதனில்
பல்வகை யாப்பில் மலர்ந்தவையாய்ப்
   பாடிக் குவித்தவை ஏராளம்.
நல்லோர் மனதில் தங்கி, அவை
   நினைவி லென்றும் நிலைத்திருக்கும்.



உலகளவில் சிறுகதையில் உயர்ந்தவையை அளந்தறிய
   ஒருபோட்டி நடந்த தன்று.
புலமைமிகு கதைபலவும் படைத்தவரிற் சிறந்தசிலர்
   புனைந்தவைகள் தேர்வு பெற்று
பலமொழியில் எழுதியவை பரிந்துரைக்கப் படவதனில்
   பழகுதமிழ் மொழியின் நான்கில்
நலமுடைய வொருகதைநம் நா.சீ.வ உடையதெனில்
   நமக்கதுவோர் பெருமை யன்றோ?



கடுகளவே நிறைகண்டும் கடலளவு மகிழ்வுற்று
   கவிதைவரி போற்றி நிற்பார்.
அடுத்தவரி படித்திடுமுன் தடுத்தவரை மறுபடியும்
   அதனையே படிக்க வைப்பார்.
நெடுகி,அது நிறைவுறுமுன் நம்நெஞ்சம் நெகிழ்வகையில்
   நீள்கரம் குலுக்கி நின்றால்
எடுபடுமோர் கவியெழுத இப்போது முயல்வோரும்
   ஏன்கவிதை வேந்த ராகார்?


பாரதி கலைக்கழகம்.  அமரர் நா.சீ.வரதராஜன் நினைவுக் கவியரங்கம். 12.10.2008.

Friday, March 03, 2017

மங்கலப் பொருள்கள் ஐந்து -- மஞ்சள்.




சொந்தநலம் பாராமல் சோர்வினையும் கருதாமல்
இந்தநில முழுவதிலும் ஏடுகளைத் தேடியவோர்
அந்தணனின் சொந்தமென ஆனதமி ழாரணங்கே
செந்தமிழே! நின்னடிகள் சிரந்தாழ்த்தி வணங்குவனே.

ஆடையால் அணியால் கொண்ட 
   அழகினால் மட்டுந் தாமே
மேடையின் தலைவ ராகி 
   மிகுபுக ழடைந்தோ ருண்டு.   
ஓடைக்குப் பெருமை சேர்க்க
   ஓடிடும் நீரைப் போல
மேடைக்குத் தகுதி சேர்க்கும்
   மேனிலை அறிஞர் வாழி!


இங்குநான் மஞ்சள் பற்றி
   என்கவி கூற வந்தேன்.
மங்களப் பொருள்கள் பற்றி 
   மன்றினில் பாட வந்த
தங்களின் கவிதை கேட்டே
   தமிழைநான் கற்க வேண்டும்.
உங்களுக் கென்வ ணக்கம்
   உரியது ஏற்பீர்! ஐயா!


தொலைக்காட்சி நாடகங்கள்
   தொலையட்டும் என்றொதுக்கி,
      தூக்கம் விட்டு,
கலைநிகழ்ச்சி வேண்டாது
   காரியங்கள் தள்ளிவைத்துக்
      கவிய ரங்கில்
விலையில்லாத் தமிழமுது
   விருந்தென்று தேடிவந்து
      வீற்றி ருக்கும்
கலையாத கூட்டமிதைக்
   கரங்கூப்பி வணங்குகிறேன்
      கவிதை யாலே!


(வேறு)

விக்கினங்க லெதுவொன்று மேற்ப டாமல்
   வினையாற்ற வேண்டுதற்கு நாமெல் லோரும்
அக்காலப் பெரியோர்கள் காட்டிச் சென்ற
   அருமையுள சாத்திரத்து வழியில் நின்று
பக்குவமாய் மஞ்சளினைக் குழைத்துச் சேர்த்துப்
   பிடித்துவைத்த திருவுருவைப் பிள்ளை யாரை
விக்கினத்தை நீக்குகின்ற இறைவன் தன்னை
   விநாயகனை முன்வணங்கித் தொடங்கல் செய்வோம்.


கல்லினிலே மேனியுண்டு தெய்வங் கட்கு.
   காணுகின்ற திருவுருவம் செம்பி லுண்டு
பல்வகையாய் உலோகங்கள் கலந்து வார்த்த
   பலவடிவம் ஐம்பொன்னில் அதிக முண்டு.
சொல்லடுக்கிப் பாடுகின்ற புலவர் நாவில்
   சுரக்கின்ற கவிப்பொருளில் உண்டென் றாலும்
இல்லத்தில் துளிமஞ்சள் தூளில் தோன்றும்
   இறைவடிவே இணையற்ற தென்று சொல்வேன்.


மஞ்சளினைப் பயன்கொள்ளும் தகுதி பெண்கள்
   மங்களமாம் நிலைதன்னைக் காட்டு மன்றோ?
பஞ்சிலினிலே வுருவான நூலென் றாலும்
   பாவையவள் மணநாளில் கழுத்தி லேரும்
மஞ்சளிலே குளித்திட்ட சரட்டுத் தாலி
   மாங்கல்ய மாவதெதன் மகிமை யாலே?
மஞ்சளிலே செய்வதனால் அன்றி வேறு
   மங்கலமாய்க் குங்குமமும் ஆவ தேது?


கொஞ்சம்பேர் விரதங்கள் ஏற்கும் போது
   கார்நிறத்தில் உடையணிதல் உண்டு. இங்கு
கொஞ்சம்பேர் துவராடை அணிவ துண்டு.
   கொஞ்சமுமே இறையுணர்வே அற்ற பேரில்
அஞ்சுநிலை ஆயுளுக்கு வருமென் றாலும் 
   ஆளுகின்ற செல்வம்பறி போமென் றாலும்
மஞ்சளிலே துண்டணியும் மனித ருண்டு.
   மஞ்சளது மகிமைக்கு வேறு வேண்டாம்.


புத்தரிசிப் பொங்கலிடும் தைநன் நாளில்
   பானையிலே கட்டுகின்ற மஞ்சள் கொத்து,
புத்தாடை துணிமணிகள் அணியு முன்னர்
   பொடிமஞ்சள் நீரினிலே தொட்டு வைத்தல்
பத்திரிகை திருமணம்போல் நிகழ்ச்சிக் கெல்லாம்
   பசுமஞ்சள் நிறத்தாளில் அடித்தல் என்று
தத்துவங்கள் பின்புலத்தில் பலவு முண்டு.
   தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம் மஞ்சள். 


அழைப்பினைப் பாருங்கள்.

(வேறு)

தெரிந்துதான் பழத்தைக் கொண்டு
   தேங்காய்க்கே அடுத்து வைத்தார்.
தரிக்கின்ற தாம்பூ லத்தைத்
    தரத்தினில் நான்காய் வைத்தார்.
அறிந்துதான் குங்கு மத்தை
   அதற்குப்பின் இட்டு வைத்தார்.
புரிந்தது மஞ்சள் என்றும்
   புனிதத்தில் முதல தென்று.


மஞ்சளே மருந்து மாகும்.
   மற்றதன் புனிதந் தன்னால்
மஞ்சளிற் கயிறு கையில்
   மந்திரக் காப்பு மாகும்.
மஞ்சளின் தூளைத் தேய்த்து
   மாதர்கள் குளித்து மேனி
விஞ்சிடும் அழகு காண
   விரும்பியே போற்று வாரே!


மஞ்சநீர் கரைத்து வந்து
   மங்களம் பாட வேண்டும்.
விஞ்சிய சிறப்பி னோடு
   விளங்கிடு பொருள்கள் ஐந்தில்
எஞ்சிய நான்கு மிங்கே
   இனிவர இடத்தை விட்டு
மஞ்சளை முடித்து வைத்து
   மன்றிடை விடைகொள் கின்றேன்.


மதுரை அண்ணா நகர், ராஜாஜி மன்றம். காந்தி ஜயந்தி விழா,  2.10.1999.

Sunday, December 18, 2016

வாழ்வில் இன்பம்


வானில் உலவும் நிலவு - ஒரு
   வரையில் இழியும் அருவி
கானில் உறையும் மிருகம் - நெடுங்
   கடலில் ஓடும் அலைகள்

காணும் மரங்கள் அசைவில் - தென்றல்
   காற்று இசைக்கும் கீதம்
நாணற் கரைகள் இடையே - நீர்
   நடந்து செல்லும் ஓடை

தேனை நாடி மலரைத் - தினம்
   தேர்ந்த ருந்தும் வண்டு
வீணை நாத மாக - நன்கு
   விளங்கு சேயின் மழலை

மானின் விழியின் பார்வை - இன்னும்
   மயிலின் விரித்த தோகை
நாணம் சேரக் கவிழ்ந்த - ஒரு
   நங்கை முகத்தின் செம்மை

செவியில் வந்து தேனாய் - என்றும்
   சேரும் தமிழின் சீர்மை
கவிதை செய்த கம்பன் - அவன்
   கலையில் நிற்கும் அழகு

புவியில் எங்கும் இல்லா - நல்ல
   பொலிவு மிக்க சிற்பம்
கவிதை உணர்வு தூண்டும் - இவை
   கவிஞர் வாழ்வில் இன்பம்.


பாரதி கலைக் கழகம் & திருவள்ளுவர் மன்றம் 28.8 2016.. DAV பள்ளி வளாகம்
ஆதம்பாக்கம். சென்னை.

Monday, November 28, 2016

சிலம்பில் மாதவன்

( சிலப்பதிகாரச் சிந்தனைகள்)



வடவரையை மத்தாய் வைத்து
   வாசுகியைய்க் கயிறாய்க் கொண்டு
கடலன்று கடைந்த கையைக்
   கடைகயிறால் யசோதை கட்ட,
கடல்வண்ணன் கண்ணன் அங்கு
   கட்டுண்ட பெற்றி ஆய
மடமகளின் குறவைக் கூத்து
   மாதவனின் பெருமை சாற்றும்.


மூன்றடியால் உருவ ளர்ந்து
   மூவுலகு மளந்த சீரும்
கான்போந்து தம்பி யோடு
   கடல்கடந் திலங்கை வென்ற
வான்புகழும் மற்றும் கஞ்ச
   வஞ்சகனைக் கொன்ற தூஉம்
போன்றுவரு பிறவு மெல்லாம்
   பெருமானின் விளையாட் டன்றோ?


 கண்ணிரண்டு பெற்ற பயனக்
      கரியவனைக் காணல்; பெற்ற
  எண்ணரிய செவியி ரண்டும்
      எமக்கவனின் புகழைக் கேட்க;
  கொண்டதொரு நாவுங் கூடக்
      கௌரவர்பால் தூது சென்ற
  கண்ணனையே பாட வென்ற
      கருத்துரைகட் கீடே இல்லை.


செவிநுகர் கனியே யென்னச்
     சிலப்பதி காரந் தன்னைக்
  கவினுறு நூலாய்த் தந்த
     கவிஞராம் இளங்கோ கொண்ட
  புவியுள வரையில் நிற்கும்
     புண்ணியப் புகழைச் சொல்லிக்
  கவியவர் திருப்பா தங்கள்
     கரங்களால் வணங்கு கின்றேன்.


பாரதி கலைக் கழகம்.சிலப்பதிகார விழா.17.5.2009  
வாழ்க வளமுடன் அரங்கம். நங்கநல்லூர். சென்னை.


Friday, October 28, 2016

காதலெனும் பூந்தென்றற் காற்று


சோதனையாய் மாறிச்
சுற்றமெலாம் கைவிட்டு
ஆதரவைத் தேடுநிலை
ஆகிடுமேல் - மோதலொடு
வேதனையைத் தான் நல்கும்
வீசும் புயலாகும்
காதலெனும் பூந்தென்றற் காற்று. 

Tuesday, October 25, 2016

பற்றினால்....

பற்றினால் உறவு சேரும்.
   பகையுமே பெருகெ லாகும்.
பற்றினால் ஒழுக்க வாழ்வு,
   பண்புகள் மாறிப் போகும்.
பற்றினால் உடைமை சேரப்
   பற்றுதான் மீண்டும் பற்றும்.
பற்றினை ஒழித்த பின்னர்
   பாரினில் துன்ப மில்லை.


உடல்நலம் மிக்க வாழ்க்கை,
   உறவினர், மனைவி, மக்கள்,
கடலெனப்  பெரிய தான
   கட்டிடம், கார்கள், மாடு,
படர்கொடி மலரின் சோலை,
   பரந்துள வயல் நிலங்கள்
இடர்பல நல்கு கின்ற,
   இவைகளைத் தேடு கின்றோம்.


பொருள்களை உடைமை யாகப்
   பெருதலில் ஆசை யுற்று,
பொருள்களை அடையு தற்காய்ப்
   புரிகிற சாக சங்கள்
பொருள்களைத் தருவ தில்லை.
   பொருள்வழித் துன்பம் சேரப்
பொருள்நமை உடைமை கொண்டு
   போவதை உணரு வோமோ?

Wednesday, September 21, 2016

சிலம்பின் ஒலி

செந்தமிழில் இளங்கோசெய் சிலம்பு தன்னைச்
   சீரடியின் அணியாகக் கருதி டாமல்
பிந்தையநாள் பாரதிதன் பாட லொன்றில்
   பெருமைமிகு தமிழ்நாடு படைத்த தான
சிந்தைகவர் மணியாரம் என்றே சொல்லிச்
   சிறந்ததொரு மார்பணியாய்க் காட்டி வைத்த
விந்தையினை மனதினிலே எண்ணி யெண்ணி
   வெகுவாக வியப்பினிலே ஆழ்ந்த துண்டு.


கண்ணகிதன் கொழுநனைத்தான் பிரியு முன்னர்
   காதல்மிகக் களித்திருந்த நாளி லெல்லாம்
பொன்னணிகள் மேனியினை அலங்க ரிக்கப்
   பூண்டவையாய்க் காற்சிலம்பும் இருந்த நாளில்
எண்ணத்தை உணர்வுகளைப் பகிரும் போது
   ஏதேனு மிடமாற்றம் நேரு மென்றால்
மென்னடையின் அதிர்வுகளில் ஒலிக்கக் கூசி
   மெல்லியதாய்க் கிண்கிணித்த சிலம்பு தாமே


கண்ணகியா லுடைபட்ட போது மன்னன்
   காதுகளின் பறைகிழிய ஒலித்த தென்னை?
'உன்னவளின் சிலம்புக்குள் முத்தென் றாயே!
    உள்ளவைபார் மாணிக்கப் பரல்க ளன்றோ?
முன்னோர்கள் வழிவாதம் ஆரா யாது
     முறையற்ற தீர்ப்பாலே நீதி கொன்றாய்'
மின்னுமணி தெறித்தவற்றுள் உதட்டில் தாக்கி
    மன்னனது தவறுணர்த்தி விழுந்த தொன்று.


விதிவசமாய்க் கோவலனோ கொல்லப் பட்டான்.
    வென்றுநின்ற கண்ணகியுந் தெய்வ மானாள்.
மதிபிறழ்ந்த செய்கையினால் செங்கோல் கோடி
    மன்னனுமே அவைதன்னி லுயிரை நீத்தான்.
இதையுலகுக் கொருநூலாய் வழங்க எண்ணி
   இளங்கோஅம் மணிகளையே எடுத்துக் கோத்து
புதிதான மணியாரம் தமிழ்த்தாய் மார்பில்
   பொலிவகையிற் சிலம்பெனவே ஆக்கி வைத்தார்.




பாரதி கலைக்கழகம், சிலப்பதிகாரவிழா. 28.5.2016
வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம். மூவரசம் பட்டு.




Thursday, June 30, 2016

பூவாய் மலரும் புகழ்



படைப்பில் அரும்பிப்
பலரும் படிக்கக்
கிடைக்குமெனில் போதாகும். 
கண்டு - படைத்தவரை
நாவாற் புகழ்ந்து
நலஞ்சேர வாழ்த்துகையில்
பூவாய் மலரும் புகழ் 


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா. தமிழரின் மனிதநேயம். ஜன. 2010.

Friday, June 03, 2016

காலின் கூலி


வறியவராய் நின்று வேறு
    வழியில்லா திரப்போர்க் கொன்று
பரிவுடனே வழங்கல் ஈகை.
    பிறவெல்லாம் அவற்றின் வேறாய்க்
குறியெதிர்ப்பை யுடைய வென்று
    குறளொன்று கூறக் கண்டோம்.
செறிவுடனவ் வீகை வகையிற்
    சிலபற்றி ஔவை சொன்னாள்.


தன்னையோர் வறிய ரண்டித்
   'தா'வென்று கேட்ப தற்கு
முன்கொண்டு தானே சென்று
    முடிந்தவரை வழங்கு மீகை
மண்ணிதனிற் புலவோர் போற்று
    மானிடரின் குணங்க ளுள்ளே
உன்னதமென் றுரைப்ப தான
    உயரிய'தா ளாண்மை' யாகும்.


முன்வினையால் வறுமை தன்னில்
   மூழ்கியதோர் ஏழை தானே
தன்னிடத்தே அண்டி வந்து
   தாழ்நிலையைக் கூறி வேண்ட,
அன்புடனே இரங்கி நெஞ்சம்
   அவர்துயரைக் களைதற் காகத்
தன்னிடத்து நிறைந்த செல்வம்
   தனைக்கொண்டே ஈதல் 'வண்மை'.


'இன்றில்லை நாளை' யென்றும்
    'இன்னொருநாள் வாநீ' யென்றும்
'பன்முறையு மலையச் செய்து
    பாதங்கள் நோக விட்டு
என்றேனு மொருநாள் ஈதற்
    கேதுபெய' ரென்று கேட்டால்
நன்றில்லா ஈகை அஃது
    நடந்து வந்த 'காலின் கூலி'.



தண்டாமல் ஈவது தாளாண்மை தண்டி
அடுத்தக்கா லீவது வண்மை. அடுத்தடுத்துப்
பின்சென்றா லீவது காற்கூலி பின்சென்றும்
பொய்த்தா னிவனென்று போமேல் அவன்குடி
எச்ச மிறுமே லிறு.       - ஔவையார்


பாரதி கலைக் கழகம், வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம்,
மூவரசம் பட்டு. 23.4.2016

Friday, April 29, 2016

எதிராசர் புகழ் பாடுவோம்



சித்திரை ஆதிரை நாளதி லாதி
   சேஷனிங் கோரவ தாரம் செய்தார்.
இத்தனை புண்ணியம் மண்ணிது செய்ததோ
   என்ன உடையவர் வந்து தித்தார்.

வேறுள வாகம வாதியர் தோற்றிட
   வென்று புகழ்பல தேக்கி வைத்தார்.
ஆறு சமயமென் றான செடியினை
   அற்றிட வேறுடன் போக்கி வைத்தார்.

பொங்கும் பரிவுடன் மாறனு ரைதமிழ்
   போற்றும் வழியினை ஆக்கி வைத்தார்.
எங்கள் அரங்கனின் செல்வ முழுமையும்
   ஏற்ற வகையினில் மாற்றி வைத்தார்.

ஓதி அவருரை ஊன்றிய றிந்திங்கு
   உய்யும் வழியினைத் தேடி டுவோம்.
ஏது துயரினி என்று மகிழ்ந்தெதி
   ராசரவர் புகழ் பாடி டுவோம்.


அன்புப் பாலம்  ஏப். 2018.

Thursday, April 28, 2016

மூன்றெழுத்து மந்திரம்- அம்மா



தனைப்போலே இன்னொருத்தி இல்லை யாகத்
   தனித்துவத்தோ டிம்மண்ணில் வந்து தோன்றி
மனைவாழ்வில் உற்றதுயர் பலவுந் தாங்கி
   மாதரசி என்றபெயர் நிறுத்திப் போனாள்.
நினைவெல்லாம் தானேயாய் வீற்றி ருந்து
   நிதமுமெனை வழிகாட்டி நடத்துந் தெய்வம்
எனைப்பெற்றாள் திருப்பெயரை என்று மோதி
   எஞ்சியநாள் ஆயுளைநான் கழித்து வாழ்வேன்.


எட்டியெனை நில்லென்று சொன்ன தில்லை
   எப்படிநான் அவளன்பை மொழியக் கூடும்?
பட்டினியாய்த் தான்கிடந்த நாளில் கூட,
   பசித்திருக்கும் படியென்னை விட்ட தில்லை.
மட்டில்லா மகிழ்சியுடன் எனைப் புரந்த
   மாதவளோ தெய்வமென வாகிப் போனாள்.
விட்டுவிடா தவள்பெயரை நினைவில் வைத்து
   வீழ்கின்ற நாள்வரையில் போற்றி செய்வேன்.


எந்தவொரு துயர்வரினும் கலங்கி டாதே
   என்தாயின் திருவுருவை நெஞ்சிற் கொண்டு
மந்திரமாய் அவள்பெயரின் மூன்றெ ழுத்தை
   மனதிற்குள் உச்சரித்து வேண்டி நிற்பேன்.
வந்ததுயர் சுவடின்றி நீங்கிப் போகும்.
   வார்த்தைகளிற் சொல்லுதற்கே இயல வில்லை.
அந்தமென வாழ்வில்வரும் நாள்வ ரைக்கும்
   அவள்பாதம் துணையெனவே வாழ்ந்தி ருப்பேன்.


திருவள்ளுவர் இலக்கிய மன்றம். வாணுவம் பேட்டை. சென்னை. 9.4.2016

Saturday, March 26, 2016

வெற்றி வசப்படும்



விண்ணில் செயற்கைக் கோள்செலுத்தி - அதை
    விரலால் இயக்கி வென்றோமால்
மண்ணில் இமயச் சிகரமெலாம்  - இனி
    மனிதர் இலக்காய் நின்றிடுமோ?

உயரம் எதுவும் பெரிதில்லை - நீ
    ஒவ்வொரு படியாய் மேலேறு
பெயரும் புகழும் உனைத்தேடி - நிச்சயம்
    பின்னால் வரும்நீ முன்னேறு.

அமையும் இதுவெனும் நம்பிக்கை - அது
     அடையும் இலக்கை எளிதாக்கும்.
சுமையாய் இதுவரை எண்ணியதை - இலை
     சுலபந் தானெனத் தெளிவாக்கும்.

உன்னால் முடியும் எனநம்பு - அது
     ஒவ்வொரு முறையும் நிசமாகும்.
முன்னால் முயன்றது நிறைவாயின்
     முடிவில் வெற்றியுன் வசமாகும்.  


பாரதி பாரதிதாசன் கவிதை அமைப்பு. கவிஞாயிறு தாராபாரதி விழா, வாழ்க வளமுடன் சிற்றரங்கம்
நங்கநல்லூர். 27.2.2016

Tuesday, March 08, 2016

நாட்டு நலம் காப்போம் நயந்து


வாட்டுவிலை வாசி
 வளர்லஞ்ச ஊழலொடு
கேட்டுத் திகைக்கும்
 கொலைவெறியும்
 -  ஓட்டிடுவோம்
ஓட்டைத் தவறா(து)
உயர்குணத்தோர்க் கேயீந்து
நாட்டுநலம் காப்போம்
நயந்து.

ஓட்டு: வாக்கு.

தமிழரின் மனிதநேயம், மே 2009.  ஈற்றடிக்கு எழுதியது.

Sunday, February 28, 2016

நட்புச் சிறகுகள்



நட்பெனுஞ் சிறகு கொண்டு
   நாடெல்லாம் பறக்க லாகும்.
எட்டிட இயலா தென்று
   ஏதுமே இல்லை யாகும் !

மும்பையில் டில்லி மற்றும்
   மூலையில் முடுக்கி லெல்லாம்
நம்பியொரு வேலை சொல்லின்
   நடத்தியே முடிப்போ ருண்டு.

கையினிற் செலவு செய்யக்
   காசில்லாப் போது வந்து
பையொடு பணத்தைத் தந்து
   பார்த்துளம் மகிழ்வோ ருண்டு.

துன்பத்தில் உழலும் போது
   தோள்தந்து பாதி தீர்ப்பார்.
இன்பத்தில் பங்கு கொண்டே
   இரட்டிப்பாய் ஆக்கி வைப்பார்.

அச்சமே இல்லை. செய்ய
   அரியது மேது மில்லை.
இச்சக முழுதும்  என்போல்
   எவருளர் நண்ப ரோடு? 

Wednesday, February 17, 2016

பயனென்ன?



சாத்திரமும் சூத்திரமும்
சார்ந்தபல நூலறிவும்
பாத்திறமும் கொண்டு
பயனென்ன? - காத்திருந்து
ஏத்தபடி கேட்போர்க்
கெடுத்தியம்ப லாற்றாதார்
பூத்திருக்கும் நாற்றமிலாப் பூ!

நம் உரத்த சிந்தனை ஆகஸ்ட் 2009. 'பூத்திருக்கும் நாற்றமிலாப் பூ'!என்ற

 ஈற்றடிக்கு எழுதிய வெண்பா (2).

Monday, January 18, 2016

நல்ல பழக்கங்கள்

(சிறுவர் பாடல்)


நல்ல பழக்கம் பலவுண்டு - அதில்
    நாலைந் திங்கே சொல்லுகிறேன்.
வல்ல நீயவை கைக்கொண்டு - உன்
    வாழ்வில் நிச்சயம் வெல்லுவையே!

உண்டதன் பின்னர் நிச்சயமாய் - உடன்
    உன்கை கழுவுதல் அவசியமே.
உண்ணும் முன்னரும் கைகழுவு - அது
    ஒவ்வொரு முறையும் அவசியமே!

ஈயும் எறும்பும் மொய்க்கின்ற - எந்த
    இனிப்புப் பண்டமும் நாடாதே.
வாயில் எச்சில் வரவைக்கும் - அதை
     வாங்கித் தின்ன ஓடாதே!

பாயில் உன்னைப் படுக்கவைக்கும் - வரும்
    பலவகைச் சுரமுன்னை வாட்டிவிடும்.
நோயில் லாத வாழ்வுக்கு - வேறு
      நேரிலை என்றே காட்டிவிடும்!

காட்டு மிருகக் கதைகளெலாம் - சொல்லும்
    கருத்தை மனதில் இருத்திக்கொள்
பாட்டி கதையென இகழாதே! - அதில்
    பாடம் உண்டுனைத் திருத்திக்கொள்!

சரியாய்த் தமிழைப் பேசுதற்கு - நீ
    சிறிது முயன்றால் கற்றிடுவாய்.
பெரியோர் சொற்படி நடந்திடுவாய். -  நல்ல
    பேரும் புகழும் பெற்றிடுவாய்!

பாரதி கலைக்கழகம். அழ.வள்ளியப்பா பாடலரங்கம். லக்குமிஅம்மாள் நினைவு மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி. குரோம்பேட்டை. 28.11.2015.

Thursday, October 29, 2015

எம் இளையோர் எழச்செய்தாய்


விண்ணேகு செயற்கைக்கோள் செலுத்துகின்ற வாகனங்கள்
எந்நாடும் கொளநினைக்கும் ஏவுகணைச் சாதனங்கள்
முன்னேறு விஞ்ஞான முயற்சிகளில் முதலிடமென்(று)
என் நாடு வளர்வதெலாம் உன்னாலே ஆனதையா!

ஏவுகணை விஞ்ஞானம் எங்களுக்கும் வேண்டுமென
தேவருனைக் கேட்டனரோ? தேர்ந்தங்கு சென்றனையோ!
ஆவலுடன் வல்லரசாய் ஆகும்நாள் பார்த்திருக்க
போவதற்கிவ் அவசரமேன் புண்ணியனே கட்டுரையே!

பன்னாட்டுக் கருத்தரங்கம் பலகண்ட பெருமகன் நீ!
என் நாட்டுத் தலைமகனாய் எங்கெங்கு சென்றாலும்
தென் நாட்டுத் தமிழ்முப்பால் தனிச்சிறப்பை எடுத்தியம்ப
உன்னாற்றான் முடிந்ததையா! இனிசெய்வார்  யாருளரோ?

கனவென்றால் உறங்குகையில் கண்பதல்ல. நினைத்தவைகள்
நனவாகும் நிலைகாணும்  நாள்வரையி லொருநாளும்
உனதுள்ளம் உறங்காது. ஓயாது செயலாற்றும்
எனுமுன்றன் உரையாலே எம்மிளையோர் எழச்செய்தாய்!

செய்தித்தாள் வீடுகளில் சேர்த்துவந்த நாள்தொடங்கி
எய்தியநின் புகழெல்லாம் எடுத்தியம்ப லாற்றாமல்
செய்தித்தாள் திணறியதே! செய்தியென வாயினையே!
எய்தபுகழ் நிலைநிறுத்தி எங்குற்றாய் இயம்பாயோ?


நம் உரத்தசிந்தனை. அப்துல் கலாம் நினைவு மலர். செப். 2015.

Wednesday, October 28, 2015

மாமன்

அன்னையவள் பிறந்ததான அருங்கோயிற் கருவறையில்
      அவளுக்குச் சோதரனாய்த் தோன்றினான்
பின்னொருநாள் மருகன் நான் பிறந்தபினர் மாமனெனும்
      பெருமையினைப் பெற்றவனாய் மாறினான்.
பொன்னணிகள் சீர்வரிசை புத்தாடை யவைபலவும்
      போதுமெனு மளவவனும் செய்து,தான்
துன்பமென வரும்போது துவளாமல் முன்வந்து
      தோள்தந்து உதவியெனைத் தாங்கினான்.

பாரதத்துச் சகுனிபோல பாகவதக் கம்சன்போல
      பாரினிலே மாமன்சில ருண்டுதான்.
நீரவரை மாமனென்று நினைத்தன்பு செய்வதற்கு
      நீதியொன்று மில்லையென்று சொல்லுவேன்!
பேரளவே உறவாகிப் பெற்றவளின் உடன்பிறந்து
      பேசமட்டும் மாமனென்றாற் போதுமா?
ஓரளவு கூடவன்போ டுறவாடு நெஞ்சமிலார்
      உண்மையிலே மாமனெனற் கூடுமோ?

இந்தியத்தாய் நாட்டிலுள்ள இளஞ்சிரார்க ளனைவருக்கும்
     எள்ளளவும் பந்தமற்ற போதிலும்
முந்தையநாள் பாரதத்தின் முதுதலைவர் நேருஎந்த
     முறையினிலே மாமனென்று ஆனவர்?
சொந்தமெனில் உடைமையெனச் சொல்லுகின்ற பொருளுண்டு
     சுகமுண்டு மகிழ்வுண்டு என்பரே!
விந்தையிது அன்பாலே விளைகின்ற உறவன்றி
     வேறேதும் இலையென்று சொல்வனே!

Thursday, October 01, 2015

காணிற் குவளை...


(தரவு கொச்சகக் கலிப்பா)

தண்ணீரி லேநின்று தழைத்துவளர் தாவரத்தின்
விண்பார்த்தே இதழ்விரித்து விளங்குகின்ற குவளைநிறம்
கண்பார்த்துக் களிக்கின்ற கருநீலம் அதைப்பெண்ணின்
கண்நேராய் உவமித்துக் கவிசெய்வர் புலவோர்கள்.

தெள்ளுதமிழ் நூல்களிலே தெவிட்டாத தொன்றான
வள்ளுவரின் முப்பால்நூல் வழங்குகின்ற காட்சியிது.
விள்ளரிய தலைமகளின் விழியழகைக் காணாதே
கள்ளொழுகு குவளைமலர் களிமிகுந்து நிற்கிறதாம்!

கண்ணில்லாக் குவளையது காணாது தானதனை
எண்ணித்தான் 'காணி'லெனும் எச்சத்தை இட்டுவைத்தார்.
கண்ணிருந்தவ் விழியழகைக் காணுமெனில் நாணுற்று
முன்னிருந்த படியன்றி முகங்கவிழு மென்றாரோ?

தண்ணீரில் நிற்பதொன்று தலைகவிழ்ந்தால் நாணத்தில்
தண்ணீரைத் தான் நோக்கும் தரைமண்ணை நோக்கிடுமோ?
வண்ணமலர் மணவோட்டம் வாய்மொழிதல் இயலாதால்
எண்ணமது என்னவென்று எண்ணியதில் தேர்ந்ததிது.

நீரிதனிற் பிறந்தேனே! நேர்ந்ததிது வினைப்பயனே!
பேரழகுக் கண்ணுடையாள் பிறந்ததுஅந் நிலமென்று
கார்நிறத்த பூ,நீரைக் காணவுமே தோன்றாது
போர்மனத்த தாகியதால் பொருமி'நிலம் பார்க்கு'மென்றார்!


காணிற் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்
மாணிழை கண்ணொவ்வே மென்று.        (குறள்)

பாரதி கலைக்கழகம். 20-6-2015. பேரா.நாகநந்தி நினைவு, திருக்குறள் விழா

Sunday, August 16, 2015

நீலச் சிற்றாடைக்கு நேர்.

(கட்டளைக் கலித்துறை)


பின்னர் வரவிடை பெற்றுட னவ்வை பிரிபவளை
இன்னுஞ் சிலநாள் இருத்திடப் பாரியங் கெண்ணியதால்
பொன்னும் மணியும் பரிசெனத் தந்தவை பாதையிலே
தன்னாள் சிலர்வழி, தான்பறி செய்தது தக்கதொன்றே!

கோலிதைக் கொள்ளெனக் கொடுத்தே அவ்வை களமளக்கும்
வேலையைச் செய்வதை வேண்டிய காரிபின் வேறோருதன்
வேலையிற் சென்று விடைதா மதித்ததில் வென்றதவள்
மேலுள வன்பின் மிகையால் அரியது மேன்மையதே!

தோரணை மிக்க தொருவருக் கோரிடந் தேடியன்று
சேரன் விருந்தினிற் சேர்ந்துண வுட்கொளச் சென்றமர்ந்தார்
ஆருளர் வேறே அழைக்கவென் றவ்வையை வாருமென்ற
ஓருளம் போலுள தேதுள? அன்பில் உயர்ந்ததுவே?

ஏல மணமுள இன்னடி சில்விருந் துண்டபினர்
கோலவம் மங்கைய ரங்கவை சங்கவை கொண்டளித்த
நீலநல் லாடை நிகருள மூன்றை நெகிழ்வுடனே
ஞால மறிந்திட நாலடி அவ்வை நவின்றனளே!


பாரி பறித்த பறியும் பழையனூர்க்
காரி யன்றீந்த களைக்கோலும் - சேரமான்
வாராயோ வென்றழைத்த வார்த்தையும் இம்மூன்றும்
நீலச் சிற்றாடைக்கு நேர்.     - ஔவையார் 

(தமிழ் நாவலர் சரிதை.)


பாரதி கலைக்கழகம். ஔவையார்  விழா. ஏப். 2015.

        

Wednesday, July 22, 2015

பத்ரிநாத் யாத்திரை வழித்தலப் பாடல்கள்


மதுரா (வடமதுரை)

மாயவனின் கோயில் மதுரா நகர்தேடிப்
போயங்கு சேவித்த பேறுடையேன் - ஆயனவன்
ஆவினத்தின் பின்போன அன்புடையன் என்போன்ற
பாவிக் கருளுவனோ பார்த்து?

கோவர்த்தனம்





அன்று மழைமறைத் தாயரெலாங் காப்பதற்குக்
குன்றுக் குடைபிடித்த கோவிந்தன் - இன்றுமுன்
இன்னல் மலைகரைய இன்னருள் மாரிபெய்வன்
என்ன பயம் நெஞ்சே இயம்பு?







பிருந்தாவனம்

வேதத் தமிழொலிக்கும் வில்லிபுத்துர்ச் சேவையது
கோதை அரங்கனுடன் கூடக் கருடனென
காதம் பலகடந்து கண்டபிருந் தாவனத்தில்
பாதம் பதித்த பயன்.






தேவப்ரயாகை (கண்டங் கடிநகர்)





பொங்கு புனலோடி, பூமி வளங்கொழிக்கும்
கங்கைக் கரையிலங்கு கண்டங் கடிநகரில்
தங்கி அருள்புரியும் தாமரையாள் கேள்வன்
எங்களிறை என்றே இரு.









பத்ரிநாத்






வாவென் றழைத்தது வும்வழிமண் மூடியதும்
ஆவ திதுவென் றறியுமுனர் - போவதற்கு
வேறுவழி காட்டியதும் வேறெவரா லாம்பதரி
நாரணனின் சேவடியே நாடு.

Tuesday, June 30, 2015

சிறியன சிந்தியாதான்


மன்னனின் மௌலி விட்டு மரவுரி தரித்து ராமன்
பின்னவன் அன்னை சொல்லே பெரிதெனக் கானம் புக்கான்
பெண்ணொடு பொருதல் தனது போரறம் ஏற்கா தேனும்
தன்னுடைக் குருவின் வாக்கால் தாடகை வீழச் செய்தான்.

தந்தைதாய் பேணல் விட்டு, தாரமும் விட்டுக் கானம்
எந்தைதாய் ராம னென்றே இலக்குவன் பின்னே போனான்.
நிந்தனை தாயைப் புரிதல் நேரிதாய்ப் பரதன் தேர்ந்தான்
முந்தைய விழும மாற்றம் மூளுசூழ் நிலையா லாகும்.

துணையென ராம னோடு தோழமை கொண்டு தம்பி
இணையிலா வலிய னுன்னை எதிர்த்திடத் துணிந்தான் என்ற
மனைவியைப் 'பிழைத்தாய்' என்று முனிந்துபின் வாலி சொல்வான்
'நினைத்தது தவற றத்தின் நாயகன் ராம னாவான்'

உறுபகை யொன்று மின்றி உயரறம் காக்கும் வீரன்
இருவராய்ப் பொருதும் போதில் இடையினில் வாரா னென்ற
உறுதியைக் குலைத்து மார்பை, உடலது மண்ணில் சாய,
ஒருசரம் துளைத்த போதில் உண்மையை நேரில் கண்டான்.

பாரியைப் பிரிந்து நிற்கும் பதைப்பினில் செய்து விட்ட
காரியம் மாறிற் றோ?நீ கொண்டதோர் பகையு முண்டோ?
சூரியன்  மரபுக் கொன்றும் சுடர்மதி மறுவே போல
ஆரியன் பிறந்து மண்ணில் ஆக்கினை. சொல்வ தென்ன?

வாய்மையும் மரபும் காத்த வள்ளலின் மைந்த னோநீ?
தூயவன் பரதன் முன்னர் தோன்றிய பெருமை எங்கே?
தீயவை அரக்கர் செய்ய,  தேர்ந்தொரு குரக்கு வேந்தை
மாய்வுறச் செய்யு மாறு மனுநெறி கூறிற் றாமோ?

இன்னவும் பிறவு மாக எழுப்பிய கேள்விக் கெல்லாம்
சொன்னவை பதில்க ளாகச் சிற்சில உண்டென் றாலும்,
முன்னராய் வந்து நின்று முடித்ததாய்க் கதையி லில்லை.
பின்னவன் வந்து (அ)தற்குப் பிறிதொரு விளக்கம் தந்தான்.

நன்றிது தீது வென்னும் நல்லறி வுடைய னென்றும்,
நின்றநன் நீதி யாவும் நேரிது உணர்ந்தா னென்றும்,
பின்னுமே மனுசெய் நெறிகள் புக்கபுத் தேளி ரென்றும்
சொன்னவன் ராமன். வாலி சிறந்தவன் ஐய மில்லை.

ஒன்றினில் ஒன்று மிக்க உயரற வரிசை தன்னில்
இன்னுமொன் றில்லை யென்னும் எல்லையை எட்டும் போதில்
உன்னதம் என்று நின்ற உயரிய விழும மெல்லாம்
சின்னவை யென்றே யாகிச் சிந்தனை விட்டு நீங்கும்.

சீர்மிகு ராம நாமம் சிந்தையில் தைக்கு மாறு
கூர்மிகு வாளி யொன்றால் கொண்டநல் ஞானத் தாலும்,
கார்முகில் கமலம் பூத்துக் கையினில் வரிவில் ஏந்தி,
'பார்'என வந்து நின்ற பரம்பொருள் கண்ட தாலும்

அறிவொளி கிடைத்த காலை அவியுறு மனத்த னானான்.
நெறியினில் நின்று சேரும் நீள்விசும் பருளப் பெற்றான்.
விரிகதை செய்த கம்பன் விருதெனும் புகழுஞ் சேர
சிறியன சிந்தி யாத சீர்மைய னாகி நின்றான்.

பாரதி-பாரதிதாசன் கவிதை அமைப்பு. நங்கநல்லூர். கம்பன் விழா.
24.3.2015.
 

Saturday, June 27, 2015

எழுவாய்


ஒற்றைப் புள்ளிச் சிறுகுறியால்
ஒருபெரு வரியே முடிந்துவிடும்.
முற்றுப் பெற்றது இலையாக - அதில்
மேலும் புள்ளிகள் இடவேண்டும்.

கரங்க ளிரண்டு சிறகுண்டு
கடின உழைப்பின் துணையோடே
உரங்கொள் மனதும் உளதானால் - நிச்சயம்
உயரப் பறப்பது எளிதாகும்.

தடைபல வந்து தடுத்தாலும்
தளரா மனதொடு முயலுகையில்
இடர்கள் வந்தவை இலையாகும் -நம்
இலக்கைச் சேர்வதும் எளிதாகும்.

புழுவாய் மண்ணில் உழன்றபடி
பொழுதைப் போக்கும் நினைவாலே
எழுவாய் எனுமுரை மதியாதார் - மண்ணில்
இருப்பதி லேதும் பயனிலையே!


தாராபாரதி பிறந்த நாள் நினைவு. பாரதி-பாரதி தாசன் கவிதை அமைப்பு. நங்கை நல்லூர். 26.2.2015

Thursday, May 28, 2015

நன்மைகள் நிலைக்கட்டும்


கால மெனுமவன் கண்களில் விண்ணிடைக்
காலை யுதயத்தைக் காட்டுகிறான் - பின்பு
ஞால முழுதையும் நள்ளிருள் உள்தள்ளி
நம்மிரு கண்களைக் கட்டுகிறான்.

போற்ற வளர்செடிப் பூவகை யாவையும்
பூமியில் நாளொன்றில் வாடிவிடும் - இங்கு
நேற்றுப் புதிதென நாமுண்டு மீந்ததின்
நாமம் பழையதாய் ஆகிவிடும்.

புத்தம் புதியதைப் போட்டு நடந்திடில்
பாதையிற் சேறுள்ள தொட்டிவிடும் - என்று
பித்த நிலையினிற் பாதுகை கைக்கொண்டு
பாரில் நடப்பவர் யாருமுண்டோ?

நாளை யொருதினம் நிச்சயமாய் வரும்
நன்மை வருமென யாரறிவார்? - என்றே
வேளை வருமென வீற்றிருந் தாரிங்கு
வேறு பயனொன்று கண்டதுண்டோ?

மாற்ற மெனுமது மண்ணின் இயல்பெனில்
மாறிப் பழையதாய் ஆகிலுமென்? - இன்னும்
ஏற்ற முறநன்மை எய்தி நிலைகொள்ள
என்றும் முயன்றதில் வென்றிடுவோம்.

Monday, April 20, 2015

மண்ணுக்கு வந்த மதி


அலைகடலின் கரைக்காற்றை அனுப வித்தே
... அருகமர்ந்த கோவலனைப் பாட வேண்ட
தலைமகளின் முகவழகுக் குவமை யாகத்
... தண்மதியைத் திருத்தியதோர் வடிவங் காட்டி,
கலைநங்கை மாதவியின் கையாழ் வாங்கிக்
... கவிபாடி இசைமழையைப் பொழியச் செய்தான்.
நிலைவரியாய் அமைந்ததது. நெஞ்சை யள்ளும்.
... நிகரெதுவும் இலையென்பேன் நீரும் ஏற்பீர்!

விழியிரண்டும் கயலென்றே யாகித் துள்ள
... விளங்குமிரு புருவங்கள் வில்லாய் மின்ன
பொழிமழைநீர் சூல்கொண்ட மேகம் போலப்
... பொலிவுமிகு கருமையினிற் குழலைத் தீட்டி
விழிகவரக் காமனவன் செயல்க ளெல்லாம்
... விடுதலிலை யெனமுழுதும் எழுதித் தீர்த்த
எழிலொழுகு திங்க(ள்)முகம் காணீர்! என்றே
... இளங்கோதன் தலைமகனைப் பாடச் செய்தார்.

திங்களெனில் வானத்தில் தானே தோன்றும்?
... திரிவதுவும் வானத்தில் தானே யன்றோ?
இங்குளதோர் திமில்வாழ்நர் சிற்றூர் தேடி
... எதுபணியாய் வந்ததென்று கேட்ப மென்றே
அங்குதிரி பகையரவு ராகு கேது,
... அதைவிழுங்க வருமென்றே எண்ணி நீங்கி
தங்கியிங்கு பயமின்றி வாழ வேடம்
... தரித்தபடி வந்ததென்று விடையும் சொன்னார்.


கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன்
செயலெழுதித் தீர்த்தமுகம் திங்களோ காணீர்!
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அங்கணேர் வானத்து அரவஞ்சி வாழ்வதுவே.


சிலப்பதிகாரம், புகார்க்காண்டம், - கானல் வரி.


பாரதி கலைக்கழகம். சிலப்பதிகார விழா.  21.9.2014

 

Wednesday, April 15, 2015

பெரிதினும் பெரிது கேள்


கற்றலில் நன்றாய்க் கேட்டலை நம்தமிழ்ச்
சொற்றொட ரொன்று சுவைபடக் கூறும்.
நூலறி மேலோர் நுண்மை விரித்துப்
பாலரு மறியப் பகர்வது கேட்டலை,
புவியுள அறிஞர் புலவோ ரெல்லாம்
செவிதரு 'கேள்விச் செல்வ'மென் றோதுவர்.
உயர்ந்ததைப் பெரிதென் றுணர்ந்தவ ரிங்கு
'உயர்ந்தவர் மேற்றே உல'கென் றுரைத்தார்.
உலகம் பெரிதெனப் பொதுவில் தொடங்கி
கவன மீர்த்துக் காண்டகு பெருமையில்
ஒன்றினி லொன்றாய் உயர்ந்தது காட்டி,
நன்றிது வென்று நாமதை யறிய
பண்டுநம் மவ்வை சொன்ன
தொண்டர்தம் பெருமை கேட்பது பெரிதே!