Thursday, April 28, 2016

மூன்றெழுத்து மந்திரம்- அம்மா



தனைப்போலே வேறொருத்தி இல்லை யாகத்
   தன்குலத்தைக் காப்பதற்காய் வந்து தோன்றி
மனைவாழ்வில் உற்றதுயர் பலவுந் தாங்கி
   மாதரசி என்றபெயர் நிறுத்திப் போனாள்.
நினைவெல்லாம் தானேயாய் வீற்றி ருந்து
   நிதமுமெனை வழிகாட்டி நடத்துந் தெய்வம்
எனைப்பெற்றாள் திருப்பெயரை என்று மோதி
   எஞ்சியநாள் ஆயுளைநான் கழித்து வாழ்வேன்.


எட்டியெனை நில்லென்று சொன்ன தில்லை
   எப்படிநான் அவளன்பை மொழியக் கூடும்?
பட்டினியாய்த் தான்கிடந்த நாளில் கூட,
   பசித்திருக்கும் படியென்னை விட்ட தில்லை.
மட்டில்லா மகிழ்சியுடன் எனைப் புரந்த
   மாதவளோ தெய்வமென வாகிப் போனாள்.
விட்டுவிடா தவள்பெயரை நினைவில் வைத்து
   வீழ்கின்ற நாள்வரையில் போற்றி செய்வேன்.


எந்தவொரு துயர்வரினும் கலங்கி டாது
   என்தாயின் திருவுருவை நெஞ்சிற் கொண்டு
மந்திரமாய் அவள்பெயரின் மூன்றெ ழுத்தை
   மனதிற்குள் உச்சரித்து வேண்டி நிற்பேன்.
வந்ததுயர் சுவடின்றி நீங்கிப் போகும்.
   வார்த்தைகளிற் சொல்லுதற்கே இயல வில்லை.
அந்தமென வாழ்வில்வரும் நாள்வ ரைக்கும்
   அவள்பாதம் துணையெனவே வாழ்ந்தி ருப்பேன்.


திருவள்ளுவர் இலக்கிய மன்றம். வாணுவம் பேட்டை. சென்னை. 9.4.2016

No comments: