Friday, October 12, 2018

பாரதி சுராஜ் மறைவு.


  

குவியும் பொருளில் மனமின்றிக்
   கொள்கை வழியில் நின்றனையே!
செவியின் சுவையே பெரிதென்று
   செந்தமி ழமுதைப் பருகினையே!
கவிதை வரியில் நயங்கண்டுன்
   கண்கள் விரியும் புன்னகையாய்.
புவியில் அதைவிட வேறொன்று
   பெறுதற் குரிய விருதிலையே!

நங்கை நல்லூர் எனும்போதுன்
   ஞாபகம் வந்தெனை ஆட்கொள்ளும்.
பொங்கிப் பெருகும் உணர்வோடு
   புலமை மிகவே உடையோராய்
எங்கே யேனும் பாரதியை
   எவரோ ஒருவர் பேசிடினும்
தங்கள் நினைவே வந்துமனம்
   தவிக்கும் படியாய் ஆகிவிடும்.

நூறின் மேலாய் வாழ்கவென
   நூலோர் வாழ்த்தும் போதுனது
நூறின் நிறைவுத் திருநாளென்
   நினைவிற் றோன்றி மகிழ்வுதரும்.
ஆறே ழாண்டே உளதின்னும்
   அதற்குள் ஏனோ அவசரமாய்ப்
பாரின் நீங்கிப் போயினையே!
   பாதக மேதும் செய்தோமோ?

பாரதி கலைக் கழகம், பாரதி சுராஜ் இரங்கற் கூட்டம். வியாபாரிகள் சங்க மண்டபம், மூவரசன் பேட்டை. சென்னை. 25.8.2018


No comments: