Saturday, June 27, 2015

எழுவாய்


ஒற்றைப் புள்ளிச் சிறுகுறியால்
ஒருபெரு வரியே முடிந்துவிடும்.
முற்றுப் பெற்றது இலையாக - அதில்
மேலும் புள்ளிகள் இடவேண்டும்.

கரங்க ளிரண்டு சிறகுண்டு
கடின உழைப்பின் துணையோடே
உரங்கொள் மனதும் உளதானால் - நிச்சயம்
உயரப் பறப்பது எளிதாகும்.

தடைபல வந்து தடுத்தாலும்
தளரா மனதொடு முயலுகையில்
இடர்கள் வந்தவை இலையாகும் -நம்
இலக்கைச் சேர்வதும் எளிதாகும்.

புழுவாய் மண்ணில் உழன்றபடி
பொழுதைப் போக்கும் நினைவாலே
எழுவாய் எனுமுரை மதியாதார் - மண்ணில்
இருப்பதி லேதும் பயனிலையே!


தாராபாரதி பிறந்த நாள் நினைவு. பாரதி-பாரதி தாசன் கவிதை அமைப்பு. நங்கை நல்லூர். 26.2.2015

No comments: