Friday, March 13, 2015

உணர்வார் இலையே!





களிகொண் டுளறுபவர் கள்ளுண்ட நிலை கண்டு
     கலங்கிநீ நின்ற தென்ன?
         கல்விதரு பள்ளிகற் கருகிலே கூடபல
             கடையின்று வந்த தென்ன?

வெளியா ரிலாதபடி விலைக்குமது அரசேற்று
     விற்பனை செய்வ தென்ன?
         உபவாச வழியெலாம் உதவாத நிலையின்று
             உருவாகிப் போன தென்ன?

எளிமையே உயர்ந்ததென ஏற்றுநீ போற்றியதை
     எவருமே ஏற்க விலையே!
          ஏழைக்கும் ராசனாய் எப்போதும் வாழ்கின்ற
             ஆசைக்கு மெல்லை யிலையே!

ஒளியாம லுண்மையினை யுரைப்பதே நலமென்ற
     உறுதியைப் போற்ற விலையே!
          உன்வாழ்வை காந்திநீ உலகுமுன் வைத்துமதை
                உணர்வாரு மொருவ ரிலையே!



கற்சிலையை வைத்தவர்கள் காசுபணம் பார்த்தவுடன்
     கைகழுவி விட்ட நிலையே!
          காகமிடு மெச்சமுன் கண்ணீராய் வீழ்வதனைக்
               கண்டுமனம் மாற விலையே!

விற்கின்ற பத்திரிகை வெளியிட்ட உன்படமும்
     வீணாகும் குப்பை நிலையே!
         வீதியிலே வடைசுற்றி விற்பதுதான் வேதனையே
                வேறுபய னாவ திலையே!

கற்றாரும் நீதந்த கைவேலை  விட்டதன்பின்
     கைராட்டை தோற்ற தையா!
         கண்கண்ட சத்தியம் காணாது போயின்று
              கபடமே வென்ற தையா!

பெற்றாளின் மேலான பெருமண்ணின் மேற்பக்தி
     பற்றாது போன தையா!
         பிறந்தநம் நாடதனின் பெருமையை யறியாத
              பேதைமை பெருகு தையா!


பாரதிகலைக் கழகம் . 13.10.2013

Friday, February 27, 2015

பாரதி ஓரு ஜீவ நதி




பாரதி என்பதோர் ஜீவநதி - அது
பாடல்க ளோடும் பேராறு.
நீரத னோட்டம் நிற்காது - இங்கு
நிலைபெற் றிருக்கும் நெடுங்காலம்.

 
உள்ளத் துள்ளது கவிதை - அதையோர்
ஊற்றென் றுரைத்தார் கவிமணியார்.
தெள்ளிய கோதா வரியாறைக் - கம்பன்
தெரிந்தே சான்றோர் கவியென்றான்.
 

சொற்றே ரோட்டும் சாரதியாய் - என்றும்
சோரா துழைத்துக் கவிசெய்ய
வற்றா ஊற்றாய்க் கவியுள்ளம் - மிக
வாய்த்தவ ரிங்கே ஏராளம்.
 

பாரதி வழியிற் கவிஞர்களாய் - இன்னும்
பலநூ றாயிரம் வருவார்கள்.
பாரதி மரபிங்கு அழியாது. - என்றும்
பாடல்க ளாறு வற்றாது.
 

பாரதி சிந்தனை. கார்த்திகை மூலம். மத்திய கைலாஷ். 27.11.2011.

கண்டேன்


கண்களாற் காண்ப தன்றிக் காதினால் மூக்கா லெல்லாம்
கண்டுளா ரெவரு முண்டோ? கம்பனேன் அநுமன் வாயால்
கண்டனன் கண்க ளாலே கற்பினுக் கணியை யென்று
விண்டனன் என்பதற்கு விடையென ஒன்று கேட்டேன்.

சீதையைத் தேடி லங்கை செல்வதின் முன்னர் நன்கு
மாதவள் தோற்றந் தன்னை மனதினிற் கொள்ள வேண்டி
காதினாற் கேட்ட தன்றிக் கண்களால் கண்ட தில்லை.
ஆதலால் இடரொன் றங்கே  அநுமனே நேரக் கண்டான்.
(மண்டோதரியைச் சீதையென்று நினைத்து மயங்கியது.)

வலியதன் துணையை விட்டு வனத்திடைப் பிரிய நேர்ந்து
மெலிந்துவெந் துயரில் வாடி மேனியிற் செழுமை மாறி
நலிந்துள நிலையி லந்த நங்கையின் தோற்றம் வேறாய்,
பொலிந்திரு கண்கள் மட்டும் பொருந்திடத் திருவைக் கண்டான்.
(அவள் கண்களைக் கொண்டே அவளைக் கண்டது.)

'கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்
தென்டிரை யலைகடல் இலங்கைத் தென்னகர்
அன்டர் நாயக! இனிதுறத்தி, ஐயமும்
பண்டுள துயரு' மென்றநுமன் பன்னுவான். - கம்பன்

பாரதி கலைக்கழகம். கம்பர் விழா. 13.7.2014

Sunday, February 08, 2015

சீரைத் தேடின் நூலைத் தேடு.


புதியதொரு வலிமையுடன் மீண்டு வந்து
    பொலிவசந்தப் ரியனாரின் வாசல் மேடை.
மதிவானில் தவழவரும் மாலை. கவிதை
    மாக்கோலம் போடவரும் புலவோர் கோட்டம்.
கதிரொளிபோற் றமிழ்மொழியில் படைப்பின் ஆற்றல்
    கைவந்த பெருமகனார் புகழின் மிக்கார்
எதிரொலியார் தலைமையிலே அரங்கில் நிற்கும்
    எளியவனின் வணக்கங்கள் ஏற்பீர் ஐயா!

இலக்கென்ற வொன்றிங்கு இருந்தா லன்றி
   இதுவழிதான் எனக்கொள்ள ஏது மில்லை.
இலக்கியங்கள் என்றுபல இலக்கு சுட்டும்
   இனியதமிழ் நூல்முன்னோர் செய்த வெல்லாம்
உலகத்து மக்கள்வாழ் விருளைப் போக்கும்.
   ஒளிர்கின்ற தீபமென வழியைக் காட்டும்.
சிலபேர்கள் சுயலாப நோக்கம் கொண்டு
   செல்கின்ற குறுக்குவழி இருளில் ஆழ்த்தும்.

இறையுணர்வே நோக்கமெனில் மறைநூ லுண்டு.
    இவ்வுலக வாழ்க்கைக்குச் செல்வம் வேண்டின்
முறையான வழிகாட்டும் பொருள்நூ லுண்டு.
    முந்துதமிழ் அறிஞனென வீற்றி ருக்க
நிறைவான நூலறிவே வேண்டும் என்றால்
    நெஞ்சையள்ளும் இலக்கியங்கள் நிறைய உண்டு.
குறையறுநல் வாழ்வேதான் இலக்கென் றாலோ
    குறள்நெறிநேர் வழிகாட்டும் வேறு வேண்டாம்.


'வாசல்' கவியரங்கம். மார்ச் 2009.வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம்.
 மூவரசம்பேட்டை.   

Monday, December 08, 2014

விடுதலை வேள்வியில் வீரக் கவிஞன்.



புவிபோற்றிடும் படிவாழ்ந்துள புலவோரிடை எங்கள்
கவிபாரதி புகழ்பாடிடக் களமீதினில் வந்தேன்.
அவையோரினை வரவேற்றிரு கரங்கூப்பிடு கின்றேன்.
செவிசாய்த்திடும் படிவேண்டியே சில வார்த்தைகள் சொல்வேன்.


(வேறு)
அச்சமுற்று நாடிழந்து அடிமைமோகம் நெஞ்சிலே
உச்சமாகக் கொண்டபேர்கள் வாழ்ந்தநாளில் தோன்றினான்.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதுகூட
அச்சமில்லை என்றுபாடி அன்றுவீர மூட்டினான்.


(வேறு)
தந்தையும் பாட்டனும் சேர்த்துவைத்த - பல
தாவர சங்கம செல்வமெல்லாம்
சந்ததி யார்பெற உரிமையுண்டு - என்று
சட்டமு ரைப்பது கண்டிருப்பீர்!
செந்தமிழ் தனிலது 'தாய்நாடு' - செருச்
செய்து மதைப்பெற வேண்டுமென்று
'தந்தையர் நாடெ'னப் பாடிவிட்டன். உரிமை
தாக மெடுத்திடச் செய்துவிட்டான்.


(வேறு)
சூழு கடலுடை பூமி யிதிலெங்கும்
...சாதி யுயர்விலை தாழ்வுமிலை.
வாழு நெறிகளில் ஆணு மொருபெண்ணும்
...வேறிலை ஒன்றெனச் சொல்லிவைத்தான்.
வாழு மனிதர்கள் யாவ ருக்குமிங்கு
...உண்ணும் முணவிட வேண்டுமென்றான்.
பாழு முலகினில் ஏழ்மை யொழியவே
...பாடி யுயர்நிலை எய்திவிட்டான்.


தேச மடைதுயர் போக்கும் வழிதன்னைத்
...தேடித் தமிழினில் பாடியவன்.
மீசை முறுக்கொடு முண்டா சழகின்னும்
...மின்னிச் சுடர்விடும் குங்குமமும்
நேச முடன்மயிர்ப் பீலி தனிற்தொட்டு
...நெஞ்சில் வரைந்துள ஓவியமாய்
பாச மிகுகவி வாண ரிடமெல்லாம்
...பார திநிச்சயம் வாழ்ந்திருப்பான்.

திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் நடைபெற்ற, வானவில் பண்பாட்டு மையம் பாரதி திருவிழாவில், கவியரங்கில்  பாடியது.

Thursday, December 04, 2014

கோடை விடுமுறைத் தொடக்கம்



நோட்டுப் புத்தகம் உணவென்று
... நிறைந்து வழியத் தோள்சேர்த்து
மூட்டை தூக்கி நடக்காமல்
... மூலையில் விட்டு வைத்திடலாம்.
வீட்டுப் பாடம் பொறுப்பென்று
... வேலை எதுவும் கிடையாது.
பாட்டுப் பாடி மகிழ்ந்திடலாம்.
... பலருடன் ஆடிக் களித்திடலாம்.


நாட்டுப் பாடல் பாடுதற்கும்
... 'நாளொரு நீதி' கேட்பதற்கும்
கூட்டி வெளியில் நிறுத்திவைக்கும்
... கொடுமை இனிமேல் கிடையாது.
போட்டித் தேர்வுகள் கிடையாது
... பொழுதை இனிதாய்க் கழித்திடலாம்.
பாட்டுப் பாடி மகிழ்ந்திடலாம்
... பலருடன் ஆடிக் களித்திடலாம்.


பாட்டி தாத்தா பார்ப்பதற்குப்
... பயணம் ரயிலில் சென்றிடலாம்.
கேட்கக் கேட்கத் தின்பண்டம்
... கிடைக்கும் நன்றாய்த் தின்றிடலாம்.
ஓட்டி சைக்கிள் தெருவினிலே
... ஒவ்வொரு நாளும் பழகிடலாம்.
பாட்டுப் பாடி மகிழ்ந்திடலாம்
... பலருடன் ஆடிக் களித்திடலாம்.




 பாரதி கலைக் கழகம். அழ. வள்ளியப்பா நினைவரங்கம். குரோம்பேட்டை இலக்குமி அம்மாள் மேல் நிலைப் பள்ளி. 22.11.2014

Thursday, September 18, 2014

பாரதி கவிதைகளில் - மொழிவளம்



                                                         
வெல்லத் தன்னை இன்றுவரை - இங்கு
    வேறே ஒருவர் இலையாகச்
சொல்லைப் பொருளைப் புதிதாக்கி - நல்ல
    சுவையோ டுரைத்த கட்டுரைகள்
வல்ல தமிழின் வார்த்தையெலாம் - காட்டி
    வரைந்த வண்ணச் சிறுகதைகள்
தொல்லை தராத நடை,அறிவை - நன்கு
    தூண்டும் கருத்துக் குவியலவை.

எண்ணப் படியே வெண்பாவில் - வந்து
    எப்படி விழுமோ வெண்டளைகள்?
வண்ணப் பாடல்கள் சந்தங்கள் - பல
    வாய்ந்தவை சிறந்த தெங்ஙனமோ?
இன்னும் அகவல் விருத்தங்கள் - உள்ள
    ஏனைய சிந்துப் பாடல்கள்
மின்னும் தமிழின் வளங்காட்டும் - இந்த
    மேதினி என்றும் போற்றிடவே!

திருத்த சாங்கம் சாற்றுகவி - புகழ்த்
   திரௌபதி சபதக் காப்பியமும்
திருப்பு கழ்நான் மணிமாலை - கும்மி
   தீதறு தூது சீட்டுகவி
அருமை பாரத மாதாவுக் - கென
   வாக்கிய பள்ளி எழுச்சியிவை
பெருமை மிகுநம் தமிழ்மொழியில் - உள்ள
   பெருவளங் காட்டி நிற்பவையே!


உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம், மடிப்பாக்கம் கிளை துவக்க விழா மற்றும் மகாகவி பாரதி விழா. வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம், மூவரசம் பட்டு. 15.12.2013

Thursday, August 28, 2014

இனி வருமோ?



நினைவுப் பேழை தனைத்திறந்து
நிதம்நிதம் தேடிப் பார்க்கின்றேன்.
நிதம்நிதம் தேடிப் பார்த்தாலும்
நினைத்தது மனதில் வரவில்லை.

நெஞ்சைக் கவர்ந்த உருவமது
நினைவை விட்டுப் போய்விடுமோ?
நினைவை விட்டுப் போகுமெனில்
நெஞ்சைக் கவர்ந்த தெனவாமோ?        (நினைவுப் பேழை...)

சின்னஞ் சிறிய குழந்தைமுகம்
சிந்திய புன்னகைப் பேரழகு
சிந்திய புன்னகை எழில்முகத்தை
எண்ணிப் பார்க்க முயல்கின்றேன்.       (நினைவுப் பேழை...)

கன்னக் குழியும் கண்ணழகும்
வண்ணக் குழைப்பில் மின்னியதே!
வண்ணக் குழைப்பில் மின்னியவக்
கண்ணன் முகத்தைக் காணேனே!          (நினைவுப் பேழை...)

உதடு குவித்துக் குழலூதும்
உன்னத ரூபம் மறந்திடுமோ?
உன்னதம் நினைவை நீங்கிவிடில்
உதறித் தேடியும் இனிவருமோ?               (நினைவுப் பேழை...)


பாரதி கலைக்கழகக் கவியரங்கம் 24.8.2014.


Friday, May 30, 2014

கோசல நாடுடை வள்ளல்



கையினில் படைக்கல மேதுமின்றிக்
...களந்தனில் முறியப் போட்டு
மெய்யெலாம் சரம்பொதி புண்களாகி
...மிகுதியாய்க் குருதி சோர
கையறு நிலையினில், தோல்விகண்டு
...கலங்கிய நெஞ்சத் தோடு
செய்செய லறிந்திடா ராவணன்றன்
...சிரமது தாழ நின்றான்.

போரறங் கருதிய ராமனும்போர்
...புரிந்திட இன்று போய்ப்பின்
வேறருங் கலமுட னிங்குமீண்டும்
...வருகநீ நாளை யென்று
கூறின னெனுமிடம் கம்பனேனோ
...கமுகினில் வாளை தாவும்
பாரினில் வளமிகு கோசலத்தைப்
...புரந்திடும் வள்ளல் என்றான்.

வீடணன் சரணென வந்துமுன்னர்
...வீழ்ந்ததும் நல்லி லங்கை
நாடதை அவர்க்கென ஈந்ததன்பின்
...நசையுடன் இன்றே தன்னை
நாடி'யுன் சரண்'எனில் ராவணர்க்கு
...நலமுற நல்க ராமன்
நாடொடு கொடையுளம் கொண்டதன்மை
...நயத்தொடு சொன்ன தன்றோ?


ஆளையா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளையாயின கண்டனன் இன்றுபோய்ப் போர்க்கு
நாளைவா வெனநல்கினன் நாகிளங் கமுகின்
வாளைதா வுறுகோசல நாடுடை வள்ளல்   -கம்பன்

காளை யிராவணன் கையறவிற் காற்றாது
நாளைவா போர்க்கென்று நல்கினதன் தாளையன்றே
சார்ந்துபொறை வேண்டினனேல் தாசரதி கோசலப்பேர்
ஆர்ந்தவள நாடரக்கற் காம்     -திரு.நா. அப்பனையங்கார்


பாரதி கலைக் கழகம். சென்னை. 22.7.2012.

Wednesday, May 07, 2014

தமிழுக்கு அமுதென்று பேர்



வீட்டுப் பொறுப்பெனும் பாரம் - கொஞ்சம்
விட்டு நலம்பெற வேண்டி,
பாட்டு தருஞ்சுவை நாடி - தமிழ்
பாடும் கவிபலர் கூடும்
கூட்டம் நடைபெறும் மன்றில் - நானும்
கொஞ்சம் தமிழமு துண்பேன்!
வேட்டு வெடித்திடும் வீட்டில் - எனினும்
வேறொன் றதற்கிணை யாமோ?

நேற்று நடந்ததோர் மன்றின் - நிகழ்வு
நெஞ்சி லலையிடும் போது
ஆற்றல் குறைந்தது மாறி - தேவர்
அமுது பருகிய தென்ன
ஊற்றுக் கிளம்பிடும் சக்தி - மேலும்
உணர்வு முயர்வுறு மாங்கே.
ஆற்றல் மிகுந்தமிழ் அமுதே! - அதிலோர்
ஐய மிலையெனச் சொல்வேன்.

(சென்னை,வாணுவம் பேட்டை,
 திருவள்ளுவர் இலக்கியமன்றத்தில் பாடியது.)

Wednesday, April 30, 2014

அறன் வலியுறுத்தல்


(திருக்குறட் கருத்து)


பெறத்தக்க பெரும் பேற்றில் வீட்டை நல்கும்
..பெற்றியது வேண்டியோர்க்கு நீளும் செல்வத்
துறக்கத்தை ஈயுமெனில் உயிர்க்கிங் காக்கம்
..தரத்தக்க வேறுளதோ அறத்தை யன்றி?
மறத்தலினால் வருங்கேட்டைக் கூடச் சொல்லி
..மண்ணுயிர்க்கு வழிகாட்டும் முப்பால் நூலோ
அறத்தியற்கை ஆக்கத்தை ஈதற் கொண்டே
..அதைச்செல்லும் வாயெல்லாம் செய்யச் சொல்லும்.


வாக்கென்றால் ஒலிவடிவிற் செவியிற் சேரும்.
..உடலியக்கம் காட்சியெனக் கண்ணில் தோன்றும்.
தேக்குகுறை பாடுடைய நெஞ்சின் வழிதான்
..தெரிக்கின்ற சொல்லோடு செயலும் போகும்.
நோக்கமுடன் பிறரறியச் செய்து வெறும்
..நாடகமாய் ஆவதுவும் அறமென் றாமோ?
நோக்கிலற மனைத்திற்கும் வித்தாய் நிற்கும்
..நெஞ்சத்துத் தூய்மைக்கு நிகரே இல்லை.


பல்லக்கின் பாரத்தைத் தோளில் ஏற்றிப்
..பாதையிலே பக்குவமாய்க் காலை வைத்து
வெள்ளமென உடல்முழுதும் வியர்த்தே ஊற்றும்
..வெம்மையிலே தரைச்சூட்டைத் தாங்கி நால்வர்
மெள்ளநடை தடுமாற, உள்ளே யொருவர்
..மெத்தையிலே சயனித்துச் செல்லல் இங்கே
உள்ளபடி அறத்தியல்பைக் காட்டுந் தானே?
..உணர்ந்தறிய நூலெதுவும் கற்றல் வேண்டாம்.


இன்னாச்சொல் லழுக்காறோ டாசை வெகுளி
..இவைநீக்கி, இயற்றுதலே அறமென் றாகும்.
பின்னரொரு காலத்திற் செய்வோ மென்னா(து)
..எப்போது மதைவிடாது செய்வோ மானால்
பொன்றுங்கால் அழியாத துணையாய் நிற்கும்.
..பிறவற்றால் இன்பமிலை புகழு மில்லை.
இன்னுமொரு பிறவிகருத் தடையாய் நின்று
..இன்பமறாப் பெருவீட்டில் அறமே சேர்க்கும்.


பாரதி கலைக்கழகக் கவியரங்கம் 20.6.2010.

Friday, April 25, 2014

குடலுண்டு குன்றிய கூடு








சுற்றம் மறந்ததோ? சூழ்வறுமை காரணமோ?
உற்ற துணையு மொதுக்கினளோ? - வற்றிக்
குடலுண்டு குன்றியதோர் கூடானாய் கண்டு
கடவுளரும் கண்கலங்கு மாறு.

(சந்த வசந்த இணையக் குழுமத்தில் யோகியார் அவர்கள் கேட்டிருந்தபடி புகைப்படத்துக்கு எழுதிய வெண்பா.)

Friday, March 07, 2014

வேறெதுவும் காரணமோ?



தந்தைதோள் சாய்ந்தசுகம்
...தலையணையில் இல்லையென
முந்தையநாள் கற்பனையில்
...மூழ்கிய முகவழகோ?

தெரியாத மனிதரிடைத்
...தெரிந்தவளாய்த் தாயவளின்
பரிவை முகந்தன்னில்
...பார்த்துவந்த புன்னகையோ?

விரித்துக் கையசைத்து
...விதவிதமாய் முகம்மாற்றி
சிரிப்பு வரவழைத்தார்
...சிறிதளவு வென்றாரோ?

கரியநிறப் பூச்சியொன்று
...கண்ணெதிரே வந்ததுவோ?
விரிந்தவிழி வியப்புக்கு
...வேறேதும் காரணமோ?

Wednesday, January 08, 2014

செல்வம்


கோடி தொகுத்தபினும்
கொண்டின்னும் கூட்டுதற்காய்
ஓடித் திரிவருளர்.
உள்ளதன்மேல்- நாடிடுமோர்
எண்ணமிலா துன்சிந்தை
என்றும் இருந்திடுமேல்
உண்மையதே செல்வம் உணர்.

(செல்வம் என்பது சிந்தையின் நிறைவே.)

Friday, November 15, 2013

எண்ணிய முடிதல் வேண்டும்


தினைத்துணை இருந்த போதே
...தெருவிலே ஆடும் நாளில்
நினைத்ததைச் செய்து காட்ட
...நெஞ்சிலே ஆசை கொண்டேன்.
மனையறம் கண்டு இன்று
...மயிரெலாம் நரைத்த பின்னும்
நினைத்ததை முடித்த லாற்றேன்.
...நிகழ்வதை ஏற்கின் றேனே!

அலவுதீன் விளக்குப் போலொன்
...றகப்படக் கூடு மாயின்
சுலபமாய்த் தேய்த்துப் பூதச்
...செயலினால் முடித்துக் கொள்வேன்.
இலையது கதைதான் என்றால்
...இயலுத லாமோ? நூலோர்
பலரிது பற்றிச் சொன்ன
...பகுதிகள் தேடிப் பார்த்தேன்.

திண்ணிய ராகப் பெற்றால்
...தெளிந்தநல் லறிவி ருந்தால்
எண்ணிய முடியு மென்றார்.
...ஏற்கிறேன். சரிதான். ஆனால்
திண்ணிய நெஞ்சை எங்கே
...தேடிநான் பெறுவேன்? எங்கே
எண்ணிநான் விலைக்கு வாங்க
...அறிவது கிடைக்கக் கூடும்?

Friday, October 25, 2013

சுட்ட பழம்



நாவற் பழம்சுவைக்க
நாஊற வாங்கவிலை
ஆவலுடன் கேட்டே
அதிர்வுற்றேன். - நாவலிது
சுட்டபழம் கையைச்
சுடத்தானே செய்யுமெனக்
கட்டியவள் கேட்டாளே காண் !

பழத்தின் பெயரில் தொடங்கும் வெண்பா.
அமுதசுரபி செப்.2012. வெண்பாப் போட்டி.
3-ம் நிலையில் தேர்வு பெற்ற வெண்பா.

Thursday, October 17, 2013

ஒட்டியுறுவார் உறவு


நாற்றிசையும் கரையமைந்தே ஊரி னோரம்
...நிழல்மரங்கள் வரிசையுற நிற்க, நல்ல
நாற்றமுள வண்ணமலர்ச் செடிக ளெல்லாம்
...நாற்புறமும் இடையிடையே வளர்ந்தி ருக்கும்.
தோற்றத்தில் பொலிவுடைய குளமுண் டதனில்
...தாமரையோ டாம்பலுமே பூத்தி ருக்கும்!
காற்றினிலே விரித்திறகை, பறந்து வந்து
...கரையமரும் பறவையினம் காட்சிக் கின்பம்!


சுற்றிவரு பருவநிலை மாறி, வெய்யில்
...சுட்டெரிக்கும் கோடையிலே நீர்மை குன்றி,
அற்றநீர்க் குளக்காட்சி அழகு மாறும்.
...அகன்றுவிடும் பறவையினம் நில்லா தங்கே.
வற்றியவாய் நீர்க்கொடிகள் மலர்க ளோடு
...வாடிநிலை தாழ்ந்திடினும், தங்கி நிற்கும்.
உற்றதுயர் கண்டவுடன் விலகு வோர்கள்
...உறவினரென் றழைப்பதற்கே ஏற்றாரில்லை.


'வா'வென்றே அழைக்காமல் தாமாய் வந்து,
...வகைவகையாய் உறவுபெயர் சொல்லி, நாளும்
'தா'வென்று பொருளுளநாட் சுற்ற மாகித்
...தமைவளர்க்கும் தகைமையுளோர், அற்ற நாளில்
'போ'வென்றே யுரையாத போது விட்டுப்
...போய்விடுவர் என்பதற்குப் பொருத்த மாக
ஆயவ்வை நீர்ப்பறவை நீங்கல் சொன்ன
...அழகான உவமைக்கிங் கீடே இல்லை.


அற்ற குளத்தி னறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வா ருறவல்லர். - அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவா ருறவு.      (ஔவையார்)

பாரதி கலைக்கழகம் -ஔவை விழா. (23.2.2013)  மூதுரைப் பாடற் பொருள்.
கவி அமுதம். மே -2013. இலக்கியவேல்- ஜூலை 2014

Friday, September 27, 2013

ஏழு முதல்...


பாலனாய் ஏழினில்
பால்நிறக் கோலியொடு
பாதை யோரமே திரிந்தேன்.

பார்ப்பவர் ஏசுவது
பாராது நாள்முழுதும்
பம்பரம் சுழற்றி நின்றேன்.

பாலனெனும் நிலைமாறிப்
பதினைந்தி லேதிரைப்
படங்களை ரசித்தி ருந்தேன்.

படிப்பினைப் பசியினைப்
பாராமல் எந்நாளும்
பாடலில் லயித்தி ருந்தேன்.

காலமது இனுமோடிக்
கடந்தபின் முப்பதில்
காதலே பெரிதென் றிருந்தேன்.

கைநிறையப் பொருள்வேண்டிக்
களைப்பென்று பாராது
கடுமையாய் உழைத்தி ருந்தேன்.

கோலியொடு பம்பரம்
காதல்பொரு ளாசையெலாம்
காணாது மறைந்த தின்று.

கடவுளது சந்நிதிமுன்
கைகூப்பி நிற்கையில்
கணநேர நெகிழ்வு நன்று.


பாரதி கலைக்கழகக் கவியரங்கம். 15.8.2012

Monday, September 23, 2013

சித்திரை கொண்டுவரும் சீர்.



விதிதன்னை நொந்து
விலைவாசி ஏறக்
கதியின்றித் துன்பமுறும் காலம்.- புதிதாக
இத்தரையில் இப்போ(து)
எதுவானால் தானென்ன
சித்திரை கொண்டுவரும் சீர்?

 வெண்பாப் போட்டியில் 3ம் நிலையில்
 தேர்வு பெற்ற வெண்பா.  அமுதசுரபி ஏப். 2012

Wednesday, August 28, 2013

லட்டு தின்போம்


(சிறுவர் கவிதை)

மூன்று பேராய் நாமிருக்க
மொத்த லட்டு மூன்றிருக்க
மூன்றை ஆளுக் கொன்றெடுத்து
முழுது முழுதாய்த் தின்போமே!

நான்கு பேராய் நாமிருக்க
நல்ல லட்டு மூன்றிருக்க
மூன்றை நாலாய்ப் பங்குவைத்து
முக்கால் முக்கால் தின்போமே!

ஆறு பேராய் நாமிருக்க
அழகு லட்டு மூன்றிருக்க
ஆறு பேரும் பங்குவைத்தே
அரையாய் அரையாய்த் தின்போமே!

பன்னி ரண்டு பேரிருக்க
பாகு லட்டு மூன்றிருக்க
சின்ன தாக்கிக் கால்காலாய்ச்
சேர்ந்தே அதனைத் தின்போமே!

நெஞ்சில் அன்பு மிக்கோராய்
நிறைய நன்பர் வருவரேல்
கொஞ்சம் கொஞ்சம் கிள்ளிவைத்துக்
கூடித் தின்று மகிழ்வோமே!

பாரதி கலைக்கழகம். அழ. வள்ளியப்பா நினைவுக்
கவியரங்கம். குரோம்பேட்டை. நவ.2011.