Friday, February 27, 2015

கண்டேன்


கண்களாற் காண்ப தன்றிக் காதினால் மூக்கா லெல்லாம்
கண்டுளா ரெவரு முண்டோ? கம்பனேன் அநுமன் வாயால்
கண்டனன் கண்க ளாலே கற்பினுக் கணியை யென்று
விண்டனன் என்பதற்கு விடையென ஒன்று கேட்டேன்.

சீதையைத் தேடி லங்கை செல்வதின் முன்னர் நன்கு
மாதவள் தோற்றந் தன்னை மனதினிற் கொள்ள வேண்டி
காதினாற் கேட்ட தன்றிக் கண்களால் கண்ட தில்லை.
ஆதலால் இடரொன் றங்கே  அநுமனே நேரக் கண்டான்.
(மண்டோதரியைச் சீதையென்று நினைத்து மயங்கியது.)

வலியதன் துணையை விட்டு வனத்திடைப் பிரிய நேர்ந்து
மெலிந்துவெந் துயரில் வாடி மேனியிற் செழுமை மாறி
நலிந்துள நிலையி லந்த நங்கையின் தோற்றம் வேறாய்,
பொலிந்திரு கண்கள் மட்டும் பொருந்திடத் திருவைக் கண்டான்.
(அவள் கண்களைக் கொண்டே அவளைக் கண்டது.)

'கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்
தென்டிரை யலைகடல் இலங்கைத் தென்னகர்
அன்டர் நாயக! இனிதுறத்தி, ஐயமும்
பண்டுள துயரு' மென்றநுமன் பன்னுவான். - கம்பன்

பாரதி கலைக்கழகம். கம்பர் விழா. 13.7.2014

No comments: