Sunday, February 08, 2015

சீரைத் தேடின் நூலைத் தேடு.


புதியதொரு வலிமையுடன் மீண்டு வந்து
    பொலிவசந்தப் ரியனாரின் வாசல் மேடை.
மதிவானில் தவழவரும் மாலை. கவிதை
    மாக்கோலம் போடவரும் புலவோர் கோட்டம்.
கதிரொளிபோற் றமிழ்மொழியில் படைப்பின் ஆற்றல்
    கைவந்த பெருமகனார் புகழின் மிக்கார்
எதிரொலியார் தலைமையிலே அரங்கில் நிற்கும்
    எளியவனின் வணக்கங்கள் ஏற்பீர் ஐயா!

இலக்கென்ற வொன்றிங்கு இருந்தா லன்றி
   இதுவழிதான் எனக்கொள்ள ஏது மில்லை.
இலக்கியங்கள் என்றுபல இலக்கு சுட்டும்
   இனியதமிழ் நூல்முன்னோர் செய்த வெல்லாம்
உலகத்து மக்கள்வாழ் விருளைப் போக்கும்.
   ஒளிர்கின்ற தீபமென வழியைக் காட்டும்.
சிலபேர்கள் சுயலாப நோக்கம் கொண்டு
   செல்கின்ற குறுக்குவழி இருளில் ஆழ்த்தும்.

இறையுணர்வே நோக்கமெனில் மறைநூ லுண்டு.
    இவ்வுலக வாழ்க்கைக்குச் செல்வம் வேண்டின்
முறையான வழிகாட்டும் பொருள்நூ லுண்டு.
    முந்துதமிழ் அறிஞனென வீற்றி ருக்க
நிறைவான நூலறிவே வேண்டும் என்றால்
    நெஞ்சையள்ளும் இலக்கியங்கள் நிறைய உண்டு.
குறையறுநல் வாழ்வேதான் இலக்கென் றாலோ
    குறள்நெறிநேர் வழிகாட்டும் வேறு வேண்டாம்.


'வாசல்' கவியரங்கம். மார்ச் 2009.வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம்.
 மூவரசம்பேட்டை.   

No comments: