Friday, February 27, 2015

பாரதி ஓரு ஜீவ நதி




பாரதி என்பதோர் ஜீவநதி - அது
பாடல்க ளோடும் பேராறு.
நீரத னோட்டம் நிற்காது - இங்கு
நிலைபெற் றிருக்கும் நெடுங்காலம்.

 
உள்ளத் துள்ளது கவிதை - அதையோர்
ஊற்றென் றுரைத்தார் கவிமணியார்.
தெள்ளிய கோதா வரியாறைக் - கம்பன்
தெரிந்தே சான்றோர் கவியென்றான்.
 

சொற்றே ரோட்டும் சாரதியாய் - என்றும்
சோரா துழைத்துக் கவிசெய்ய
வற்றா ஊற்றாய்க் கவியுள்ளம் - மிக
வாய்த்தவ ரிங்கே ஏராளம்.
 

பாரதி வழியிற் கவிஞர்களாய் - இன்னும்
பலநூ றாயிரம் வருவார்கள்.
பாரதி மரபிங்கு அழியாது. - என்றும்
பாடல்க ளாறு வற்றாது.
 

பாரதி சிந்தனை. கார்த்திகை மூலம். மத்திய கைலாஷ். 27.11.2011.

No comments: